திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் : போக்குவரத்து மாற்றம் எப்போது – ஆட்சியர் விளக்கம் !
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில், “முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனைய”த்தை மே-09 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார். மேலும், பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தையும் திறந்து வைப்பதோடு, பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கான அடிக்கல் நாட்டும் விழா என முப்பெரும் விழாவாக ஒருங்கிணைத்திருக்கிறார்கள்.
திருச்சியில் இதுவரையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் என்ற இரு பேருந்து நிலையங்கள் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனைய திறப்பு விழாவுக்குப் பிறகு அவற்றின் நிலை குறித்த தகவல்கள் பல்வேறு யூகங்களாகவும் வதந்திகளாகவும் உலவிவருகின்றன.
குறிப்பாக, புதிய பேருந்து முனைய திறப்பு விழா குறித்த செய்திகள் வெளியான நாளிலிருந்து, இனி திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களும் இயங்காது. எல்லாமே, பஞ்சப்பூரிலிருந்துதான் இயக்கப்படும் என்பதாக ஒரு வதந்தி தீயாக பரவி வருகிறது. அடுத்து, பொதுமக்களிடமும் இதுகுறித்த பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது.
பேருந்து முனைய ஆய்வுப் பணிகளின்போது, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அவ்வப்போது இது குறித்து சில விளக்கங்களை குறிப்பிட்டிருக்கிறார்கள். திருச்சி மத்திய பேருந்து நிலையம் நகரப் பேருந்து நிலையமாக மாற்றப்படும் என்பதும் பஞ்சப்பூரிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் அல்லது ஸ்ரீரங்கம் வரை இயக்கப்படும் பேருந்துகள் மத்திய பேருந்து நிலையம் வழியாக வந்து செல்லும் என்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும், இதுகுறித்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அல்லது போக்குவரத்து கழகத்தின் சார்பில் இதுவரையில் அதிகாரப்பூர்வமான பதில்கள் வரவில்லை.

- பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்கள் எந்த அளவில் இயங்கும்?
- தற்போது, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்துதான் பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், துறையூர், கடலூர், விருத்தாசலம் போன்ற நகரங்களுக்கான தொலைதூர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை வழக்கம்போலவே, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுமா? அல்லது பஞ்சப்பூருக்கு மாற்றம் பெறுகிறதா?
- கரூர் மார்க்கமாக, கோவை, திருப்பூர், பல்லடம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டாலும் இரு மார்க்கத்திலும் சத்திரம் பேருந்து நிலையத்தை வந்தடைந்துதான் சென்று – திரும்பி வருகின்றன. இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் வழியாக நகரத்திற்குள் வந்து செல்கின்றன. இந்த வழித்தடம் மாற்றம் பெறுகிறதா?
- இதுவரையில் திருச்சி – தஞ்சாவூர் மார்க்கத்தில் இயக்கப்பட்ட புறநகர் பேருந்துகள், பால்பண்ணை – திருவெறும்பூர் வழியாக சென்று வந்தன. இனி, அவை துவாக்குடி ரிங் ரோடு வழியாகவே, பஞ்சப்பூர் வந்தடையுமா? இல்லை, வழக்கம்போல, பால்பண்ணை வழியாகவே இயக்கப்படுமா?
குறிப்பாக, மே-09 அன்று புதிய பேருந்து முனையம் திறப்புவிழா நடைபெற உள்ள நிலையில், இதுபோன்ற மாற்றங்கள் திறப்புவிழா கண்ட நாள் முதலாகவே அமலுக்கு வந்துவிடுமோ? என்பது போன்ற பல்வேறு குழப்பங்கள் பொதுமக்கள் மத்தியில் நிலவிவருகின்றன.

இதுகுறித்து, தமிழக அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் பொதுமேலாளர் டி.சதீஷ்குமாரிடம் பேசியபோது, “இதுகுறித்து ஆர்.டி.ஓ. மற்றும் மாவட்டத்தின் ஆட்சியர் தரப்பில் இருந்துதான் தகவல் தெரிவிப்பார்கள். அவர்களது அறிவுறுத்தலின்படி நாங்கள் சேவையை வழங்குவோம். இதுவரையில் அப்படி ஒரு அறிவிப்புகள் எதுவும் எங்களுக்கு வரவில்லை” என்றார்.
மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் கவனத்திற்கு கொண்டு சென்றோம். “எந்த மாற்றமும் உடனடியாக அமல்படுத்தப்படாது. புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டு, 15 நாட்களுக்கு பின்னர் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய மாற்றங்களை செய்வோம்.” என்கிறார்.
– அங்குசம் செய்திப்பிரிவு.