“நான் கடனாளியா?” – ஞானவேல் ராஜா சொன்ன உண்மை!
ஸ்டுடியோ கிரீன்’ கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள படம் ‘வா வாத்தியார்’. கடந்த டிசம்பர் மாதம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு புரமோ நிகழ்ச்சிகளும் நடந்தன. ஆனால் ஞானவேல்ராஜா வாங்கிய கடன் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு பட ரிலீசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. கோர்ட்டில் ஞானவேல்ராஜா கொடுத்த உத்தரவாதத்தால் ரிலீஸ் தடையை நீக்கியது நீதிமன்றம். ஜனவரி 12- ஆம் தேதி இந்த மகிழ்ச்சி உத்தரவு கிடைத்ததும் ஜனவரி 14- ஆம் தேதி ‘வா வாத்தியார் ‘ ரிலீஸ் என அறிவித்தார் ஞானவேல்ராஜா. உடனே தடாலடியாக நேற்றே ( ஜனவரி 13 மதியம்) பிரஸ்மீட் டையும் நடத்தினார் ஞானவேல்ராஜா. நிகழ்ச்சியில் ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி, வில்லன் சத்யராஜ் உட்பட பலரும் ஞானவேல்ராஜா பட்ட கஷ்டங்களையும் அதிலிருந்து மீண்டு படத்தை ரிலீஸ் செய்ய எடுத்த முயற்சிகளையும் குறிப்பிட்டு பேசினார்கள்.
அதன் பின்னர்….
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா
“சில படங்கள் சரியாகப் போகவில்லை. அதனால் நெகடிவிட்டி, செய்திகள் அதிகம் பரவி விட்டது. ஆனால் நான் இங்கு தான் இருக்கிறேன். எனக்குக்கு அவ்வளவு கடன் இருக்கிறது எனச் சொல்லுகிறார்கள். ஆனால் இண்டஸ்ட்ரியில் கடனே இல்லாத தயாரிப்பாளர் நான் தான். நான் நன்றாகத் தான் இருக்கிறேன். முக்கியமாகச் சிலருக்கு நன்றி சொல்ல வேண்டும். முதலில் சூர்யா அண்ணாவுக்கு நன்றி. பல நண்பர்கள் மேடையில் ஆதரவாக பேசி விட்டு, காணாமல் போய் விடுவார்கள். ஆனால் சூர்யா அண்ணன் எப்போதும் எதுவானாலும் என்னுடன் இருந்து, என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் அண்ணாவுக்கு நன்றி. கேவிஎன் அண்ணாவின் ஜனநாயகன் படம் பெரிய புக்கிங் ஆகியிருந்தது.

விஜய் சாரின் கடைசிப்படம் ஆனால் அது வருவது தாமதமாகியுள்ளது. ஆனால் இப்படம் வெளிவருவதில் எனக்கு அவர் எனக்கு பெரிய துணையாக இருந்தார். அவருக்கு என் நன்றிகள். பென் மூவிஸ் ஜெயந்திலால் காடா சாருக்கு நன்றி. சக்தி பிலிம்ஸ் சக்திவேலனுக்கு நன்றி. பல நண்பர்கள் உறுதுணையாக இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. TTT படம் ஜனவரி 15- ஆம் தேதி வருகிறது. அதன் தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் இப்படத்திற்கும் பெரிய உதவிகள் செய்தார். அவர் படமும் பெரிய வெற்றி பெறட்டும். இப்படத்தில் எல்லோரும் மிகச்சிறந்த நடிப்பைத் தந்துள்ளார்கள். படம் 2 மணி நேரம் 9 நிமிடங்கள் தான். ஜெட் வேகத்தில் பறக்கும். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்”.
ஹீரோ கார்த்தி
“கடந்த வருடம் டிசம்பரில் பெரிய செலிப்ரேஷனோட இந்த படத்தை வெளியிட நாங்கள் திட்டமிட்டோம். ஆனால் அது தள்ளிப்போய்விட்டது. எனது முதல் படமும் இது போல தள்ளிப்போனது. அடுத்த படமும் தள்ளிப்போனது. அதனால தாமதம் என்கிறது எங்களுக்கு புதுசு இல்லை – பழகிவிட்டது. இந்த சூழ்நிலையில், நான் ஞானவேல்ராஜா கிட்ட எப்போதும் ஒரு விஷயத்தை மட்டும் தான் சொன்னேன். “நீங்கள் நான் என்ன நினைக்கிறேனென்று நினைக்கவே வேண்டாம். உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன். நாம் போராட்டத்தில் உடலைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம்.

சின்ன வயதில் என் அப்பா ஒவ்வொரு அரிசியிலும் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும் என்பார். அது போல் சினிமாவில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும். அவர் சொன்னது அப்போது புரியவில்லை இப்போது புரிகிறது.
ஞானவேல் சொன்ன மாதிரியே, நான் நிறைய பேருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன். முக்கியமாக சூர்யா அண்ணா. அவரோட சப்போர்ட் இல்லாமல் இந்தப் படம் இப்ப ரிலீஸ் ஆகி இருக்க முடியாது. அதே மாதிரி பைனான்ஸியர்ஸ், டிஸ்ட் ரிபியூட்டர்ஸ், எக்ஸிபிட்டர்ஸ், டெக்னீஷியன்ஸ் எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. 48 மணி நேரம், 50 மணி நேரம், தூங்காம வேலை செய்து, இந்த படத்தை நம்ம கைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். எல்லா தொழிலாளர்களுக்கும் நான் மனதார நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
நலன் சார் எல்லாருக்கும் பிடிச்ச ஒரு இயக்குநர். ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஆர்டிஸ்ட்களுக்கும், இயக்குநர்களுக்கும் பிடித்த இயக்குநர். அவர் இந்த கான்செப்ட் கொண்டு வந்தப்போ, எனக்கு ரொம்ப பயமா இருந்தது. இந்த கேரக்டருக்கு ஒரு தனி டிரெய்னிங் வேண்டும். ஆனால் நான் டிரெய்னிங் எடுத்து வரவில்லை. On-set-ல கற்றுக்கொண்டேன், மிகவும் சின்சியராக பண்ண முயற்சி செய்துள்ளேன்.
எம் ஜி ஆர் திரையில் மட்டுமில்லை நிஜத்திலும் ஒரு ஹீரோவாக இருந்திருக்கிறார். அதை மாடர்னாக ரசிக்கக்கூடிய கமர்ஷியல் படமாக செய்தது ரொம்ப பெரிய விஷயம். காலை அவர் சமாதிக்கு போய் கும்பிட்டு வந்தோம். அங்க நின்னப்போ உணர்வு வேற மாதிரி இருந்தது. இன்னும் அவரைப் பற்றி படம் எடுக்க ஆசைப்படுகிறோம். அங்கிருந்து திரும்பி வரும்போது, இந்த எல்லா விஷயங்களும் சரியாக அமைந்ததுக்கு அவரோட ஆசிர்வாதம் கண்டிப்பாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். குழந்தைகளோடு, குடும்பமா, எல்லாரும் சேர்ந்து பார்த்து ரசிக்ககூடிய ஒரு ஜாலியான படம் இது. இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுற, ரிலீஸ் ஆகப்போகுற எல்லா படங்களும் மக்களைச் சந்தோஷப்படுத்தி பெரிய வெற்றி பெறவேண்டுமென்று மனசார வாழ்த்துகிறேன்”. ஒளிப்பதிவு :ஜார்ஜ் வில்லியம்ஸ் இசை : சந்தோஷ் நாராயணன்கலை இயக்கம் : டி. ஆர். கே. கிரண், படத்தொகுப்பு: வெற்றி, ஸ்டண்ட் : அனல் அரசு, பி.ஆர்.ஓ.: யுவராஜ்
— ஜெடிஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.