முன்னாள் வி.ஏ.ஓ.வுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை !
ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்கு முன்பு, சிட்டா – பட்டா வழங்க ரூபாய் 1500 இலஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கிய, முன்னாள் கிராம நிர்வாக அலுவலருக்கு தற்போது மூன்றாண்டு கால சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது, சிறப்பு நீதிமன்றம்.
இந்த விவகாரம் தொடர்பாக, திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு போலீசார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா நடுப்பட்டியைச் சேர்ந்த பிச்சை என்பவரின் மகன் தேக்கமலை (இறந்து விட்டார்) என்பவர் வங்கியில் ஆடு, மாடுகள் வாங்க லோன் வாங்குவதற்கு, தந்தை பிச்சையின் பெயரில் இருப்பிட சான்றும், தந்தை பெயரில் உள்ள நிலத்திற்கு சிட்டா மற்றும் அடங்கல் வாங்க நடுப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த 11.12.2008 அன்று, நடுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராமரத்தினம் (வயது 72/2025) என்பவரை சந்தித்து கேட்டபோது, புகார்தாரர் தேக்கமலையிடம் தந்தை பிச்சையின் பெயரில் இருப்பிட சான்றும், தந்தை பெயரில் உள்ள நிலத்திற்கு சிட்டா மற்றும் அடங்கல் வழங்க ரூ.1,500/-ம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
அதற்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத தேக்கமலை கடந்த 11.12.2008 அன்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் அப்போது காவல் ஆய்வாளராக புரிந்த ராமச்சந்திரனிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவின் மீது காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது, புகார்தாரர் தேக்கமலையிடமிருந்து எதிரி நடுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராமரத்தினம் இலஞ்சப்பணம் ரூ.1,500/-கேட்டு பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடித்து 31.10.2025 அன்று நடுப்பட்டி முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ராமரத்தினத்திற்கு ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 7-இன் படி 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000/-ம் அபராதம், அபராதத்தை செலுத்த தவறினால், 3 மாத சிறை தண்டனையும் மற்றும் பிரிவு 13(2) r/w 13(1)(d)-ன் படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000/-ம் அபராதம், அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாத சிறை தண்டனையும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்குமாறும், திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற சிறப்பு நிதிபதி புவியரசு அவர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.
இவ்வழக்கில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, காவல் ஆய்வாளர் பிரசன்னவெங்கடேஷ் மற்றும் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர்கள் சாட்சிகளை ஆஜர் செய்தும், அரசு சிறப்பு வழக்குரைஞர் கோபிகண்ணன் ஆஜராகி தண்டணை பெற்று தர உதவி புரிந்துள்ளார்கள்.” என்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
பணி ஓய்வுக்குப்பிறகான காலத்தை, பேரன் – பேத்திகளோடு குதூகலமாக கொண்டாடி தீர்க்க வேண்டிய காலத்தை, மனநிம்மதியிழந்து குடும்பத்தை பிரிந்து சிறையில் அடைபட்டுக் கிடக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார், முன்னாள் கிராமநிர்வாக அலுவலர் ராமரத்தினம்.
– அங்குசம் செய்திப்பிரிவு.
 
			 
											







Comments are closed, but trackbacks and pingbacks are open.