உச்சநீதி மன்றத் தீர்ப்பு எடப்பாடிக்குக் கிடைத்தது சட்டப்படி முழுவெற்றி அல்ல !

0

அதிமுக கட்சி பிரச்சனை – உச்சநீதி மன்றத் தீர்ப்பு

எடப்பாடிக்குக் கிடைத்தது சட்டப்படி முழுவெற்றி அல்ல

2 dhanalakshmi joseph

“அதிமுக கடந்த ஜூலை 11ஆம் நாள் கூட்டிய பொதுக்குழுவிற்கு 15நாள் கால அவகாசம் வழங்கப்படவில்லை என்பதால் அப் பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கப்பட வேண்டும்” என்று  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு எடப்பாடி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு, இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் 23.02.2023ஆம் நாள் காலை 10.30 மணிக்கு “ஜூலை 11ஆம் நாள் அதிமுக கூட்டிய பொதுக்குழு செல்லும்” என்ற தீர்ப்பை வழங்கியது. இதன் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக சென்றுள்ளது என்பது உண்மையே என்றாலும் அது முழுஉண்மை அல்ல என்பது தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தீர்ப்பின் முக்கிய அம்சம்

- Advertisement -

- Advertisement -

“ஜூலை 11ஆம் நாள் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களின் வேண்டுகோளின்படி பொதுக்குழு கூட்டப்பட்டு, அதற்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கியுள்ளார். இந்தப் பொதுக்குழுக் கூட்டம் சட்டப்படி செல்லும். மனுதாரர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற 15நாள் அவகாசம் வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை கூட்டப்படும்போதுதான் அந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். அவசரம் மற்றும் சிறப்பு நிகழ்வாக நடைபெறும் பொதுக்குழுவுக்கு அந்த விதி பொருந்தாது என்பதால், ஜூலை 11ஆம் நாள் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் கருதி மனுதாரர் வேண்டுகோளைத் தள்ளுபடி செய்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும்,“ஜூலை 11ஆம் நாள் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து நீதிமன்றம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அங்கே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா, செல்லதா? என்பதை உரிமையியல் நீதிமன்றத்தில் இருதரப்பினரும் தங்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

ஜூலை 11ஆம் நாள் நடைபெற்ற தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட இரு முக்கியத் தீர்மானங்கள்

  1. எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராகப் பொதுக்குழு நியமனம் செய்கிறது.
  2. அதிமுக தலைமைக் கழகத்தைச் சேதம் செய்து சூறையாடிய ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்கிறது.

இந்த இரு தீர்மானங்கள் செல்லுமா? செல்லதா? என்ற வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கின்றது. “இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளர் என்று தன்னை அழைத்துக்கொள்ளச் சட்டப்படி உரிமை இல்லை” என்று பத்திரிக்கையாளர் இலட்சுமணன் குறிப்பிடுகின்றார். மேலும், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின்படி எடப்பாடி வசம் அதிமுக சென்றுவிட்டது உண்மையே என்றாலும், இடைத்தேர்தலுக்காக எடப்பாடிக்கு வழங்கப்பட்ட இரட்டை இலை சின்னம் பிப்.27ஆம் நாள் வரைதான் செல்லும். சின்னம் நிரந்தரமாக வழங்கப்படவேண்டும் என்றால் எடப்பாடி தேர்தல் ஆணையத்தை அணுகவேண்டும். அப்படி அணுக உரிமையியல் நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடிக்குச் சாதகமாக இருக்கவேண்டும். இருந்தால் மட்டுமே எடப்பாடியின் கைக்கு அதிமுக முழுமையாகச் சென்றதாகப் பொருள்படும்” என்றும் கூறினார்.

4 bismi svs
வழக்கறிஞர் சேலம் மணிகண்டன்
வழக்கறிஞர் சேலம் மணிகண்டன்

அதிமுகவின் எடப்பாடி ஆதரவாளர் வழக்கறிஞர் சேலம் மணிகண்டன் பேசும்போது,“ஜூலை 11ஆம் நாள் பொதுக்குழு செல்லும் என்றால், அப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும்தானே? எதற்கு உரிமையியல் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பெறவேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், “பத்திரிக்கையாளர் லெட்சுமணன் சொல்வதைப் பார்த்தால் திருமணம் செல்லும், திருமணத்தில் தாலி கட்டியது, மொய் வாங்கியது, விருந்து வைத்தது செல்லாது என்பதுபோல் அல்லவா உள்ளது” என்று ஐயத்தை எழுப்பினார்.

ஆர்.கே. ராதாகிருஷ்ணன் - பத்திரிகையாளர்
ஆர்.கே. ராதாகிருஷ்ணன் – பத்திரிகையாளர்

சேலம் மணிகண்டன் ஐயத்தைப் போக்கும் வண்ணம் பத்திரிக்கையாளர் ஆர்.கே.இராதாகிருஷ்ணன் பேசும்போது,“ஜூலை 11ஆம் நாள் நடைபெற்ற பொதுக்குழு என்னும் திருமணம் செல்லும் என்றும் திருமணத்தில் நடைபெற்ற தாலிக்கட்டுதல், மொய் வாங்கியது, விருந்து வைத்தது என்பனபோன்ற தீர்மானங்கள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் யாருக்காவது பாதிப்பு ஏற்படுகின்றது என்றால் அவர்கள் உரிமையியல் நீதிமன்றம் சென்று தங்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுசீராய்வு செய்யவும், மேல்முறையீடு (அப்பீல்) செய்யவும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உரிமை வழங்கியுள்ளது” என்று தீர்ப்பின் சாராம்சங்களைப் படித்துக்காட்டினார். சேலம் மணிகண்டன் பத்திரிக்கையாளர் இராதாகிருஷ்ணன் விளக்கத்திற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

பத்திரிக்கையாளரிடம் பேசிய பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம்,“உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விரைவில் மேல்முறையீடு செய்வோம்” என்று கூறினார். மற்றொரு ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி பேசும்போது,“எங்களுக்காக நீதிமன்றத்தின் அனைத்து வாசல்களும் மூடப்படவில்லை. சில வாசல்கள் திறந்திருக்கின்றன. சட்டப்போராட்டத்தைத் தொடர்வோம்” என்று குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம்
முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால், ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் என்பது மாற்றப்படவேண்டும் என்பதும், மக்களவை உறுப்பினர் இரவீந்திநாத் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லும் என்று பொருள்கொள்ளமுடியாது. இந்தியத் தேர்தல்ஆணையம் வழங்கின் முடிவின்படியே சட்டமன்ற, நாடாளுமன்றச் சபாநாயகர்கள் செயல்படுவார்கள் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிமுக என்ற கட்சி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி எடப்பாடி வசம் சென்றுள்ளது என்ற உண்மை முழுமையாக இல்லை. கட்சி எடப்பாடி வசம் செல்ல, எடப்பாடி தேர்தல் ஆணையம், நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்பான சட்டப் போராட்டங்கள் அனைத்திலும் வெற்றிபெறவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது என்பதையே உச்சநீதிமன்றத் தீர்ப்பு உணர்த்தி உள்ளது என்றே எண்ணிட வேண்டியுள்ளது.

-ஆதவன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.