‘வித் லவ்’ சக்சஸில் ஹீரோவுக்கு டவுட் !
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் ஜியோன் பிலிம்ஸும் மகேஷ் ராஜ் பசலியானின் எம்.ஆர்.பி.எண்டெர்டெய்ன்மெண்டும் இணைந்து தயாரித்து கடந்த 06ஆம் தேதி ரிலீசான படம் ‘வித் லவ்’. அபிஷன் ஜீவிந், அனஸ்வரா ராஜான், காவ்யா அனில் உட்பட பலர் நடித்த இப்படத்தை மதன் இயக்கியிருந்தார். தமிழ்நாடு முழுக்க 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘வித் லவ்’-ன் சக்சஸுக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் பிப்ரவரி 12—ஆம் தேதி மதியம் நடந்தது.
இதில் செளந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ்ராஜ் பசலியான், ஹீரோ அபிஷன் ஜீவிந், டைரக்டர் மதன், ஹீரோயின்கள் அனஸ்வரா ராஜன், கான்யா அனில், நடிகர்கள் ‘சித்தப்பு’ சரவணன், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், நடிகை ஆனந்தி, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசியர் மோகன்ராஜன், எடிட்டர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘வித் லவ்’ வெற்றி பெற்றதை மிகவும் மகிச்சியுடன் பகிர்ந்து கொண்டனர் தேனி முருகனும் எடிட்டர் சுரேஷும். சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்த போது அவரிடமிருந்து கிடைத்த பாராட்டு வார்த்தைகள் தான் தனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது என சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார் அனஸ்வரா ராஜன். சூப்பர் ஸ்டாரைச் சந்தித்த போது தான் எழுதிய கவிதையை அவரிடம் கொடுத்ததையும் அதை அவர் படித்து பாராட்டியதையும் பெருமிதம் பொங்கச் சொன்னார் பாடலாசிரியர் மோகன்ராஜன்.
தனது கேரக்டர் சின்னதாக இருந்தாலும் அதை அழகாக எழுதி காட்சிப்படுத்தி மக்கள் மனதில் பதிய வைத்தத டைரக்டர் மதனுக்கு நன்றி சொன்னார்கள் சரவணனும் தேனி முருகனும். அதே போல் இந்தப் படத்தில் தாங்களும் பணிபுரிந்ததற்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர் நடிகைகள் காவ்யா அனிலும் ஆனந்தியும். சச்சின் நாச்சியப்பனும் செம ஹேபியாக பேசினார்.
200% உழைப்பைக் கொடுத்த ஹீரோ அபிஷனையும் டைரக்டர் மதனையும் உரிமையுடன் பாராட்டினார் மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டன்.
தயாரிப்பாளர் மகேஷ்ராஜ் பசலியான் பேசும் போது,
“நாங்கள் எல்லோரும் இந்த வெற்றி மேடையில் இருப்பதற்குக் காரணம் மீடியா நண்பர்களால் தான். அதே போல் கடந்த பத்து வருடங்களாக எனக்கு பக்கபலமாக, நல்ல ஆலோசகராக இருப்பது அக்கா செளந்தர்யா தான். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு எங்களின் புரமோஷனுக்கு அச்சாரம் போட்டு வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினி சார் அவர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.
பிப்ரவரி 06ஆம் தேதி முதல் ஷோவுக்கு சென்னை கமலா தியேட்டரில் ஃபுல் என புக்மை ஷோவில் வந்திருக்குடா தம்பின்னு அபிஷன்கிட்ட சொன்னேன். அண்ணே நிஜமாத்தான் சொல்றீகளா? இல்ல நீங்க பார்த்த வேலையான்னு கேட்டான். அந்த மாதிரி வேலையெல்லாம் பண்ணமாட்டேண்டா தம்பி. இதெல்லாம் உண்மைதாண்டா தம்பின்னு சொன்னேன். மறுநாள் அதிகப்படியா ஸ்கிரீன்களில் படம் போட்டதும் தான் நம்பினான். இப்படத்தின் வெற்றிக்கு உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி. அக்கா செளந்தர்யாவுடன் இணைந்து நல்ல கண்டெண்ட் உள்ள படங்களையும் பிரம்மாண்ட படங்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன்” என்றார்.

”சூப்பர் ஸ்டாரின் ஆசிர்வாதம் என்னை ஹீரோவாக்கியது, இந்தப் படத்தை வெற்றி பெற வைத்தது” என்றார் அபிஷன் ஜீவிந்.
“மக்களிடம் இப்படத்தை கொண்டு சேர்த்த மீடியாக்கள், படத்தில் உறுதுணையாக இருந்த எனது உதவி இயக்குனர்கள், டெக்னீஷியன்கள் மற்றும் செளந்தர்யா மேடம், மகேஷ் அண்ணா, ஹீரோ அபிஷன் ஆகியோருக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றி” என்றார் டைரக்டர் மதன்.
செளந்தர்யா ரஜினிகாந்த் பேசும் போது,
“பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருந்தாலும் இதான் எனக்கு பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது. பிரீமியர் ஷோ முடிந்து வீட்டுக்குப் போனதும் அப்பாவும் அம்மாவும் என்னைக் கட்டிப் பிடித்து வாழ்த்தியதும் என் கண்கள் கலங்கிருச்சு. தம்பி மகேஷுடன் எனது பயணம் தொடரும், நல்ல படங்களை தொடர்ந்து தயாரிப்போம்” எனப் பேசியவர் படத்தில் பணியாற்றிய டென்க்னீஷியன்கள், உதவி இயக்குனர்கள் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி சொன்னதுடன் புரமோஷனுக்கு சிறப்பான பணிகளைச் செய்த பி.ஆர்.ஓ.யுவராஜ் பெயரை இரண்டு முறை குறிப்பிட்டு நன்றி சொன்னார் செளந்தர்யா ரஜினிகாந்த்.
செளந்தர்யாவின் பேச்சிலும் நடவடிக்கையிலும் தன்னடக்கமும் தன்னம்பிக்கையும் அதிகம் வெளிப்பட்டது. சூப்பர் ஸ்டாரின் மகள்னா சும்மாவா?
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.