பொதுமக்கள் முன்னிலையில் பெண் போலீசு ஏட்டுக்கு விழுந்த அரிவாள் வெட்டு !
தேனி மாவட்டம் கூடலூர் கே.கே நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் பாண்டியராஜன் இவரது மனைவி அம்பிகா (வயது 43). கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றார். மாவட்ட நீதிமன்ற வழக்கு விசாரணையில் ஆஜராகும் பெண் போலீசாக நாள்தோறும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் வழக்கம்போல் தேனி மாவட்ட நீதிமன்றத்திற்கும் பின்னர், கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது, கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே உள்ள அரசமரம் பூக்கடையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நின்று உள்ளார்.

அந்த சமயத்தில், அங்கு வந்த சுமார் 55 வயதுடைய மர்ம நபர் அம்பிகாவை கீழே தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த சிறிய அரிவாளை வைத்து வெட்டி தாக்குதல் செய்வதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது அம்பிகா தடுக்க முயன்ற போது அவரது இடது கண்ணிற்கு கீழ் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து கூச்சலிட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் கூச்சல் இடுவதை பார்த்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். உடனே இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அம்பிகாவை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
குபேந்திரன்
அதன் பின்னர் தீவிர விசாரணை செய்து முதியவரை கைது செய்து அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் கூடலூர் சேர்ந்த குபேந்திரன் என்பதும், குபேந்திரனுக்கும் அம்பிகா குடும்பத்தினருக்கும் வீட்டின் அருகே உள்ள சாலை பிரச்சனை இருந்துள்ளதும் இதனால் முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு அரிவாளால் அவர் வெட்டியுள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், குபேந்திரனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த சம்பவம் அறிந்த உத்தமபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்பிகாவிடம் நலம் விசாரித்தார். பின்னர் டாக்டரிடம் விசாரித்தார் அப்போது அம்பிகாவின் கண்ணிற்கு செல்லும் முக்கிய நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அம்பிகாவை மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெண் போலீஸ் ஏட்டுவை பொதுமக்கள் கூடும் இடத்தில் முன்விரோதம் காரணமாக மர்ம நபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
— ஜெய்ஸ்ரீராம்.