இயந்திரவியல் துறையில் பெண் பொறியாளர்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இந்திய பெற்றோர்களில் பெரும்பாலானோர் தங்களது பெண் குழந்தைகளை உயர் கல்விக்கு அனுப்பும் போது, பெரிதும் கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், கட்டிடக் கலை போன்ற மென்மையான பாடப்பிரிவுகளையே தேர்வு செய்ய விரும்புகின்றனர்.

குறிப்பாக, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்ற பாடப்பிரிவுகள் ஆண்களுக்கு மட்டுமே பொருத்தமானவை என கருதி, பெண்கள் இந்த துறையில் வாய்ப்பே இல்லாதவர்கள் எனும் நிலையை உருவாக்கி வருகின்றனர். இச்சூழ்நிலை, உலகின் பல்வேறு நாடுகளிலும், கலாச்சார மற்றும் பாலின சமத்துவமின்மையின் காரணமாக பெண்கள் பொறியியல் துறையில் பயில்வதற்கே இடையூறாக இருக்கிறது.

Kauvery Cancer Institute App

பெண் பொறியாளர் கழகம் (Women Engineering Society) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் பெண்கள் சுமார் 5.9% மட்டுமே உள்ளனர்.

இயந்திரவியல் துறையில் பெண்கள்
இயந்திரவியல் துறையில் பெண்கள்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கடந்த பத்து ஆண்டுகளில், மெக்கானிக்கல் துறையில் தானியங்கி (automation), உற்பத்தி (additive manufacturing), ஆற்றல் (energy), விண்வெளி (aerospace), ரோபாடிக்ஸ் போன்ற பல்வேறு புதிய துணைத்துறைகள் உருவாகி உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மென்பொருள் சார்ந்த பணிகளை உள்ளடக்கியவை. இந்தத் துறைகளில் பயன்படும் மென்பொருட்கள், கணக்கீடுகள் (computation) மற்றும் உருவகப்படுத்தல் (simulation) போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவை.

உதாரணமாக, ப்ராடக்ட் டிசைன் (product design) துறையில் வெறும் சாப்ட்வேரை அறிந்திருந்தால் மட்டும் போதாது. மெக்கானிக்கல் துறையின் அடிப்படை நுட்ப அறிவும், சிமுலேஷன் சாப்ட்வேர் திறனும் இரண்டும் வேண்டும். இத்தகைய புலமையைக் கொண்டவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் சிறந்த சம்பளங்களை வழங்க தயாராக உள்ளன. மேலும், இத்துறைகளில் பெண்களுக்கு போட்டிகள் குறைவாகவே உள்ளன.

சமீபத்தில் எனது பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு அனுபவத்தை பகிர விரும்புகிறேன்.

இளநிலை பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்கள், நல்ல மதிப்பெண்கள் பெற்றால் ஒரு வருடம் கூடுதலாகப் படித்து முதுநிலை பட்டம் (MEng) பெற வாய்ப்பு உள்ளது. இந்த மாணவர்கள் மூன்று செமஸ்டர்களில் ஒரு திட்டத்தை (project) வடிவமைத்து, செயல்படுத்திக் காட்ட வேண்டும். இதனை சந்தையில் ஒரு தயாரிப்பு கருவியை வடிவமைத்து விற்பனை செய்வதைப் போலவே எண்ணலாம்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எனது மேற்பார்வையில் இருந்த குழுவில் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் மாணவி (எவா – Eva) இருந்தனர். இக்குழு, நீரில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் ஒன்றை சிறிய அளவில் வடிவமைத்து டெமோ செய்ய வேண்டியிருந்தது. ஏரியின் மேற்பரப்பில் மிதந்து மின்சக்தியை உற்பத்தி செய்து, பேட்டரியில் சேமிப்பதற்கான மின்னணு சுற்றுகளை உட்பட வடிவமைத்துப், செயல்படுத்திக் காட்ட வேண்டும்.

தேவையான அனைத்து பாகங்களும் 3D பிரிண்டிங் மூலம் தயாரிக்கப்பட வேண்டியது. குறிப்பாக, கியர் உள்ளிட்ட சிக்கலான பாகங்கள் 3D தொழில்நுட்பத்தில் உருவாக வேண்டியிருந்தன. ஒவ்வொரு பாகத்திற்கும் நீண்ட ஆய்வும், சோதனைகளும், தரவுகளும் தேவைப்பட்டது.

இந்த திட்ட பணியை நான்கு பகுதிகளாகப் பிரித்தோம். மூன்று மாணவர்களும் முக்கிய பாகங்களை – எலக்ட்ரானிக்ஸ், கியர் சிஸ்டம், சென்சார், 3D தொழில்நுட்பம் – தேர்வு செய்தனர். இதனால், எவா பெரிதாக எந்தப் பாகத்தையும் தேர்வு செய்ய முடியாமல் குழப்பத்தில் இருந்தார்.

நீரில் எவ்வாறு மிதக்கும் என்பது அந்த கருவியின் மிக முக்கிய அம்சம் என்பதால், “நீ ஏன் மிதவை (buoyancy) சார்ந்த நுட்ப சவாலை எடுக்கக் கூடாது?” என நான் ஆலோசனை செய்தேன். ஆனால் அவர், “அது பெரிய சவாலா? சாதாரணமாகவே செய்யலாம் போல இருக்கிறது” என சந்தேகத்துடன் கேட்டார்.

“ஒரு வாரம் சிறிய பொருட்களை வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கி, எடையை மாற்றி நீரில் சோதனை செய்து பார், அதன் கடினம் புரியும்” எனப் பரிந்துரைத்தேன்.

இரண்டு வாரங்கள் சிறிய அளவிலான சோதனைகளை செய்து வந்தபின், “நீங்கள் சொன்னது சரி, இது மிகக் கடினமான பணி” என்று ஒப்புக்கொண்டார்.

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

ஆர்கிமிடீசின் பயான்சி விதிகள் தொடங்கி பல அடிப்படை இயற்பியல் நுணுக்கங்களை படிக்கும்படி அவரிடம் வலியுறுத்தினேன். ஒரு கட்டத்தில், அவர் ஆர்வத்துடன் பொறியியல் வடிவமைப்புகளை உருவாக்கி எனக்கு அனுப்பத் தொடங்கினார்.

ஒவ்வொரு வாரக் கூட்டத்திலும் மற்ற மூன்று மாணவர்கள் எளிதில் இணையத்திலிருந்து தகவல்களை பெற்று தங்களது பணி முன்னேற்றத்தை காட்டினர். ஆனால் எவா, முதல் ஆறு மாதங்களாக மிகுந்த பின்தங்கியவராகவே இருந்தார்.

நான் தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தேன். செமஸ்டர் விடுமுறைக்குப் பிறகு, அவர் என்னை நேரில் சந்தித்து, “தனக்கு ஒரு புதிய யோசனை தோன்றியுள்ளது – செயல்படுத்தலாமா?” என கேட்டார். “பழுதடைந்த படகுகளின் வெளிப்புற பாகங்களை பெற்று, சுத்தம் செய்து, வடிவமைப்புக்குப் பயன்படுத்தலாம்” என்றார். இது சிறந்த யோசனை என அவரை ஊக்குவித்தேன்.

பழைய பொருட்களை பயன்படுத்தி, பல்வேறு வடிவங்களை உருவாக்கி, சோதனை செய்து, சிக்கல்களை கண்டறிந்தார். மிதவையின் கீழ்பகுதியில் புவியீர்ப்பு மையத்தை சமநிலைப்படுத்த சிறிய எடை ஒன்றைச் சேர்க்க வேண்டும் என திட்டமிட்டு, கணக்கீடுகள் செய்தார். இதற்கான வடிவமைப்பை கம்ப்யூட்டர் சிமுலேஷன் மூலமாக வெற்றிகரமாக உருவாக்கினார்.

ஆனால், இன்னொரு சவாலான கேள்வி எழுந்தது – “நீரில் அலைகள் அதிகமாக இருக்கும் போது, எந்தக் கோணத்தில் தளம் சாய்ந்து மீண்டும் நிலைபெறும்?” இதற்காக எட்டு அடி ஆழம் மற்றும் சில மீட்டர் அகலம் கொண்ட நீர்தொட்டியில், பத்து மாதங்களுக்கு மேல் சோதனைகள் செய்து, இறுதியில் வெற்றி பெற்றார்.

இந்த மொத்த திட்டத்தில், எவா மேற்கொண்ட இயந்திரவியல் சார்ந்த பணி மிகவும் முக்கியமானது.

வைவா நாளன்று, குழு தங்கள் மிதவை சூரிய மின்சக்தி மாடலை நேரடி செயல்பாடு மற்றும் பிரசன்டேஷன் மூலம் விளக்கியது. இந்த திட்டம் போட்டியில் ஐந்தாவது இடத்தைப் பெற்றது.

எவாவின் பாரம்பரிய கணக்கீடுகள், கம்ப்யூட்டேஷன் மற்றும் சிமுலேஷனின் மூலம் உருவாக்கிய நவீன வடிவமைப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அவர் சிறந்த மதிப்பெண்களும் பெற்றார்.

தற்போது எவா, பிரிட்டனை சேர்ந்த ஒரு முன்னணி ஆற்றல் நிறுவத்தில், துருக்கியில் நடைபெறும் மெகாவாட் அளவிலான சூரிய மின்சக்தி திட்டத்தில், மெக்கானிக்கல் பொறியாளராக சிறந்த சம்பளத்தில் பணியமர்ந்துள்ளார். இந்தப் பணி கிடைத்ததற்கான முக்கியக் காரணம் – அவர் வடிவமைத்த மிதவை மின்சக்தி மாடல். குறிப்பாக, நேர்முகத் தேர்வில் அவர் வழங்கிய நுட்ப விளக்கம் இந்த வாய்ப்பை உறுதி செய்தது.

இயந்திரவியல் துறையில் பெண்கள் இந்த அனுபவம் மூலமாக நான் சொல்ல விரும்புவது — பெண்கள் சவால்கள் நிறைந்த பொறியியல் துறைகளில் பயில பெற்றோர்கள் அனுமதி அளிக்க வேண்டும். உற்பத்தி, கருவி வடிவமைப்பு, ஆற்றல் உற்பத்தி, ரோபாடிக்ஸ் போன்ற துறைகளில் திறமையுள்ள பணியாளர்களுக்கு உலகளாவிய சந்தையில் பெரிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

ஒரு விஷயத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் — ஒரு பட்டத்தை பெற்றுவிட்டாலே வேலை கிடைக்கும் என்பதில்லை. தொழில்துறை சார்ந்த சவால்களை திட்டங்களில் எடுத்துக்கொண்டு, செயல்முறை அனுபவம் பெற்று, சாதித்துக் காட்ட வேண்டும். இது போன்ற முயற்சிகளில் பேராசிரியர்களின் வழிகாட்டுதல், தோழமையான பாராட்டுகள் மற்றும் ஆழ்ந்த ஆலோசனைகள் மிக முக்கியம்.

மேலும், தொழில்துறையுடன் இணைந்து செயல்படும் வாய்ப்புகளும், சிறந்த ஆய்வக வசதிகளும் கொண்ட பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்யவும்.

பெண் பொறியாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

எனது மாணவி எவா போல், நீங்கள் அனைவரும் சாதித்து உலகை வலம் வாருங்கள்.

 

முனைவர் சுதாகர் பிச்சைமுத்து, இணைப் பேராசிரியர்,

கெரியட் வாட் பல்கலைக்கழகம், ஸ்காட்லாந்து

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.