“வாசிப்பின் நீட்சியே என் எழுத்து” – சிறுகதை படைப்பாளர் பா.தினேஷ் – யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை
அங்குசம் சமூக நல அறக்கட்டளை நடத்தி வரும் யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடையில் படைப்பாளர் அரங்கம் நிகழ்வு கடந்த 24.05.2025ஆம் நாள் நடைபெற்றது, இப் படைப்பரங்களில் சிறுகதை படைப்பாளர் பா.ஏகரசி தினேஷ் கலந்து கொண்டு தான் எழுதிய படைப்புகள் குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சி ஒருங்கிளைப்பாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், ஆய்வாளர் இரேவதி ஜெடிஆர் ஆகியோர் நிகழ்வில் கலந்து உரையாடினர். அங்குசம் சமூக நல அறக்கட்டளைத் தலைவர் ஜெ.டி.ஆர். தினேஷ் அவர்களுக்குப் பயனடை அணிவித்து சிறப்பு செய்தார். பாரதிதாசன் பல்கலைக்கழகப் பெரியார் விருதாளார் திருச்சி அன்பழன் தான் எழுதிய இரு நூல்களை தினேஷ் அவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தி.நெடுஞ்செழியன் வரவேற்புரை நிகழ்த்தி படைப்பாளரை அறிமுகம் செய்து உரையாற்றினார். அப்போது,“தினேஷ் என்னும் இயற்பெயரைக் கொண்டவர், தன் தாயின் பெயரையும் இணைத்துக்கொண்டு ஏகரசி தினேஷ் என்னும் புளைப்பெயரில் கூடாரம் மறுத்த கல்யாணம், உடல் தீண்டும் தழல், பிசி, இடர்களையாய் என்னும் சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதியுள்ளார். தினமலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்டு ரூ.20ஆயிரம் பரிசு பெற்றவர். திண்டுக்கல்லைப் பிறப்பிடமாகக் கொண்டு பணியின் பொருட்டு பாரதமிகுமின் நிறுவனத்தின் ஊராகப் பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எழுத்துப் பயணமும் இலக்கியக் கோணங்களும் – என்னும் பொருண்மையில் சிறப்புரையாற்றினார்.
“நான் இளவயதிலேயே எழுதத் தொடங்கியவர் அல்ல. ஆனால் எட்டு வயதிலேயே வாசிப்புப் பழக்கம் எனக்குத் தோன்றியது. வாசிப்பு என்பது என் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே மாறியது. அந்த வாசிப்பின் நீட்சியே என் எழுத்து,” எனத் தெரிவித்த அவர், தனது எழுத்தின் தோற்றம் குறித்து உணர்வுபூர்வமாகப் பகிர்ந்தார்.
‘முகங்கள்’ சிறுகதையின் சினெஸ்தீசியா அனுபவம்:
தன்னுடைய முக்கியமான கதைகளில் ஒன்றான முகங்கள் குறித்த உரை மிகுந்த கவனத்தைக் பெற்றது. ரஷ்ய ஓவியர் வாசிலி கண்டின்ஸ்கி அவர்களின் சினெஸ்தீசியா (Synesthesia) மனநிலை – அதாவது ஒலி, வண்ணம், இசை ஆகிய உணர்வுகளை ஒரே நேரத்தில் இணைத்து அனுபவிக்கும் தன்மை – மூலம் ஒரு கதையின் உள்ளார்ந்த உணர்வுகளை எப்படி வெளிப்படுத்தலாம் என்பதை அவர் விளக்கினார். “வண்ணத்திலும் இசையிலும் உள்ள ஒற்றுமையை உணர்ந்ததும், கதை ஒரு புதிய பரிமாணத்தில் உருவெடுத்தது,” என அவர் தெரிவித்தார்.
உலக இலக்கியங்களின் தாக்கம்:
உலக இலக்கியங்களைப் பற்றிய விவாதத்தில், கொரிய எழுத்தாளர் ஹான்காங் அவர்களின் The Vegetarian நாவல் குறித்து விரிவாகப் பேசினார். “அந்த நாவலை வாசித்த பிறகு, நான் ஒரு எழுத்தாளராக மனித உடலைப் பற்றிய என் பார்வையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை வந்தது,” என உருக்கமாக கூறினார். தனிமை, எதிர்ப்பு, உடலியல் உணர்வுகள் என பல பரிமாணங்களில் அந்த நாவல் தனது எழுத்து கோணத்தை மாற்றியதாக அவர் பகிர்ந்தார்.
தத்துவம் மற்றும் கதை சொல்லும் கோட்பாடுகள்:
தத்துவம் மற்றும் இலக்கியம் பற்றிய உரையாடலில், சிக்மன்ட் பிராய்ட் தனது மனவியல் கோட்பாடுகளுக்கான படிமங்களை தஸ்தாவெஸ்கியின் கதைகளிலிருந்து எடுப்பது எப்படி என்பதை ஆழமாக அலசினார். மேலும், Chekhov’s Gun, Red Herring, Shaggy Dog Story போன்ற கதை சொல்லும் உத்திகள் மற்றும் லியோ டால்ஸ்டாயின் கதை சொல்லும் பாணி பற்றி பகிர்ந்தது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலக்கிய விரும்பிகளுக்கு புதிய பார்வையை வழங்கியது.
கேள்வி-பதில்கள் மற்றும் கலந்துரையாடல்:
நிகழ்ச்சியின் இறுதியில், அங்குசம் குழுவினரின் கேள்விகளுக்கு நேரடியாகவும் நுட்பமாகவும் பதிலளித்தார் பா.ஏகரசி தினேஷ். எழுத்தின் உள் செயல்முறைகள், வாசகர் எதிர்பார்ப்புகள், நவீன எழுத்துக்களின் தாக்கம் போன்ற பல அம்சங்களை அவர் விளக்கினார்.
இடர்காளையாய் என்னும் சிறுகதையில் திண்டுக்கல் பகுதியில் உள்ள படைப்பாளர் வாழ்ந்த ஊரில் பெண்கள் இயற்கை உபாதைகளை அதிகாலையிலும், இரவிலும்தான் கழிக்கமுடியும். இடையில் இயற்சை உபாதைகள் ஏற்பட்டால் அதைப் பெண்கள் அடக்கிக் கொண்டு இரவு வரை காத்திருப்பார்கள். முடியாதவர்கள் இயற்கை உபாதையை நாளிதழ்களில் சேமித்துவைத்து இரவு நேரத்தில் அப்புறப்படுத்தும் நிலையைச் சிறுகதையாய் எழுதியது எழுத்துலகில் படைப்பாளர் தினேஷ் அவர்களுக்கு பாராட்டும், எழுத்துலகில் தனியாதோர் இடம் கிடைத்து.
60 வயதை தாண்டி துணையில்லாமல் வாழும் ஒரு மூதாட்டியும், ஒரு முதியவரும் அன்பாக பழகி திருமணம் செய்துகொள்வது என்று ஒரு கதையைத் தமிழ்ப் படைப்புலகத்திற்கு சிறுகதையாக தந்துள்ளார். இது புரட்சிக் கவிஞரின் முதியோர் காதலை நினைவூட்டுவதாக அமைந்திருந்து. இவர் இந்த கதையை எழுதிய 2 ஆண்டுகளுக்குப் பிறது கேராளவிலும் தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளில் நிரந்தரமாக வாழத் தொடங்கிய பிள்ளைகள் தன் தாய்க்கு 60 வயதில் திருமணம் செய்து வைத்துள்ளனர் என்ற நாளிதழ் செய்திகள் தினேஷ் எழுத்தில் உள்ள சமூக அக்கறை உணர்வுக்குக் கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக முனைவர் தி.நெடுஞ்செழியன் குறிப்பிட்டார்.
ஆய்வாளர் இரேவதி படைப்பாளரின் படைப்புகளைப் பேசும்போது, வெகுஜன இலக்கியங்கள் மக்களிடம் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது என்னும் சமூக பொறுப்போடு எழுதும் இலக்கியங்கள்தான் காலத்தை வென்று நிலைத்து நிற்கும் என்று குறிப்பிட்டார். நான் வெகுஜன இலக்கியம் என்பதைவிடுத்து சீரியஸ் இலக்கியங்கள் படைத்து வருகிறேன். சீரியஸ் இலக்கியங்கள் மக்கள் குறைந்த அளவிலே படிக்கின்றார்கள். எதிர்காலத்தில் சமூக அக்கறை கொண்ட இலக்கியங்களைப் படைக்க முன்வருவேன் என்று தினேஷ் குறிப்பிட்டார்.
மேலும், நான் படைத்த ஒரு சிறுகதையில் இயற்கையால் விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாகும்போது, அதற்கான நிவாரணத் தொகையைப் பெற விவசாயிகள் படும் இன்னல்களை, இடையூறுகளை, அவதிகளைப் பற்றி ஒரு சிறுகதை எழுதியுள்ளேன். நான் எழுதவேண்டும் என்ற நோக்கத்தில் படைப்புகளை படைக்கவில்லை. எழுதியப் படைப்புகள் சமூகத்திற்கு ஓரளவுக்காவது பயன்படவேண்டும் என்ற சிந்தனையுடன்தான் எழுதிவருகிறேன்” என்று தன் உரையாடலை நிறைவு செய்தார்.
தமிழ் இலக்கியத்திற்கு புதுவீச்சை ஏற்படுத்த முனைந்து படைப்புகளைப் படைத்துவரும் இளைய தலைமுறையைச் சார்ந்த தினேஷ் அவர்களுக்கு அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் ஜெடிஆர் அங்குசம் இதழ்களைப் பரிசாக வழங்கி சிறப்பித்தார். தினேஷ் போன்ற இளம் படைப்பாளர்களின் படைப்புகளை சமூகத்தைப் புரட்டிப்போடும் நெம்புகோலாக உள்ளன என்பதில் இருவேறு கருத்து இருக்கமுடியாது. இளம் படைப்பாளர் தினேஷ் அவர்களைப் பாராட்டி உற்சாகம் படுத்துவோம்.
— ஆதவன்