”இவய்ங்களுக்கு சமைச்சுப் போட்டே என் மனைவி ஒல்லி ஆகிட்டா” கருணாஸ் ஜாலி கமெண்ட்!
‘பார்வதா எண்டெர்டெய்ண்மெண்ட்’ பேனரில் 26 வயது இளைஞரான கருப்பையா என்பவர் தயாரித்து வரும் 19-ஆம் தேதி ரிலீசாகும் படம் ‘யூத்’. நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான சேது கருணாஸின் மகன் கென் கருணாஸ் இந்த ‘யூத்’ மூலம் ஹீரோவாக புரமோட் ஆகி, டைரக்டராகவும் அறிமுகமாகிறார். படத்தின் ஹீரோயின்களாக ‘சிறை’புகழ் அனிஷ்மா, மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் என மூன்று பேர் நடிக்கிறார்கள். முக்கிய கேரக்டர்களில் சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி, நளினி, கென் கருணாஸின் நண்பர்கள் பட்டாளத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு மேல் நடிக்கிறார்கள்.
படத்தின் ஒளிப்பதிவு : விக்கி, இசை : ஜி.வி.பிரகாஷ்குமார், எடிட்டிங் : நாஷ், ஆர்ட் டைரக்டர்: ராமு தங்கராஜ். பி.ஆர்.ஓ. : பரணி அழகிரி.
படத்தின் மூன்று பாடல்கள் வெளியான நிலையில், டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் மார்ச்.13-ஆம் தேதி காலை நடந்தது. கென் கருணாஸை கெளரவிப்பதற்காக டைரக்டர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர்.

முதலில் கென்னின் நண்பர்கள் டீம் தங்களின் அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். அடுத்து கேமராமேன் விக்கி, ஆர்ட் டைரக்டர் ராமு தங்கராஜ், எடிட்டர் நாஷ் ஆகியோர் கென்னின் திறமை குறித்து பெருமிதம் பொங்க பேசினார்கள்.
நடிகை நளினி,
“நடிச்சது போதும், இனிமே சினிமாவே வேணாம்ணு முடிவு பண்ணி பாரீன் போன என்னை கருணாஸ் சார் தான் வற்புறுத்தி என்னை இப்படத்தில் நடிக்க வைத்தார். எனது மகன் கென் பெரிய டைரக்டராக வருவான். அந்தளவுக்கு அவனின் உழைப்பு இப்படத்தில் இருக்கு. அவனிடம் என்ன ஒரு பிரச்சனைன்னா லஞ்ச் பிரேக்கே விடாம கண்டினியூவா ஷூட்டிங் வச்சு என்னை ரொம்பவே இம்சை பண்ணிட்டான்”. என கலகலப்பாக பேசினார்.

தேவதர்ஷினி,
“இந்தப் படத்தில் கென் தான் ஹீரோன்னாலும் எனக்கு ஜோடியா நடிச்ச சுராஜ் வெஞ்சரமூடு சார் தான் இன்னொரு ஹீரோ. கென்னின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்”.

“இந்தப் படத்தில் நடித்தது எங்களுக்கு மிகப்பெரிய லக்” என மூன்று ஹீரோயின்களும் பேசினர்.
சுராஜ் வெஞ்சரமூடு, கேரளாவுக்கு வந்து கென் என்னிடம் கதையை விஷுவலாகவே, அதுவும் பேக்ரவுண்ட் ஸ்கோருடன் தான் சொன்னார். தமிழில் எனக்கு இரண்டாவது படம். தயாரிப்பாளர் கருப்பையாவுக்கு டைரக்டர் கென்னுக்கும் நன்றி”.
கருணாஸ்,
”எனது மகனை நடிக்க வைத்த டைரக்டர் வெற்றிமாறன் சார், அவனுக்கு டைரக்ஷன் கற்றுக் கொடுத்த தனுஷ் சார் இருவருமே எனது வாழ்நாள் நன்றிக்குரியவர்கள். அதே போல் என்மீது மதிப்பு வைத்து இந்தப் படத்திற்கு சம்பளம் வாங்காமல் இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் சாருக்கு மிகவும் நன்றி. இந்த இருவருமே அவனை வாழ்த்த வந்திருப்பது பெருமைக்குரிய விஷயம்.

இனிமேல் சாதிப்பது அவனது சாமர்த்தியம். என்ன ஒண்ணு அவனும் அவனது ஃப்ரண்டுகளும் இந்த ரெண்டு வருஷமா என் வீட்ல டேரா போட்டு, டிஸ்கஷன், கம்போஸிங், ரெக்கார்டிங்குன்னு என் வீட்டையே ரெஸ்டாராண்டா மாத்திட்டாயங்க. அவய்ங்களுக்கு சமைச்சுப் போட்டே என் பொண்டாட்டி ஒல்லி ஆகிட்டா” என ஜாலியாக பேசி, விழாவை கலகலப்பாக்கினார் கருணாஸ்.
தயாரிப்பாளர் கருப்பையா பேசும் போது, டைரக்டராக வேண்டும் என்ற கனவுடன் வந்து இப்படத்தின் மூலம் தயாரிப்பாளரான கதையை சுவாரஸ்யத்துடன் குறிப்பிட்டார்.
“வெற்றிமாறன், தனுஷ் போன்ற ஸ்ட்ரிக்ட் பெர்சன்களிடமிருந்து வந்திருக்கும் கென் பெரிய வெற்றி பெறுவான்”.
வெற்றிமாறன்,
“இந்தக் கதையை கென் என்னிடம் சொன்ன போது ஒவ்வொரு சீனுக்கும் இசையையும் உணர்வுகளையும் சேர்த்தே சொன்னான். அதுவே மிக ஆச்சர்யமூட்டியது. கென்னை நடிகனாக நான் அறிமுகப்படுத்தினாலும் அவனுக்கு தனுஷ் கொடுத்த நம்பிக்கையும் ஆதரவும் பெரிய தைரியத்தைக் கொடுத்துள்ளது”.
”நம்மிடம் இருக்கும் காட்டையும் பணத்தையும் பறிச்சிருவானுக. ஆனா படிப்பை மட்டும் எவனும் பறிக்க முடியாதுன்னு அசுரன் படத்துல கென்னிடம் வசனம் பேசுவேன். ஆனா அவனோ அதைத் தவிர எல்லாத்தையும் பண்ணிட்டான். டைரக்டராகப் போறேன், கதையெல்லாம் ரெடின்னு என்கிட்ட வந்து சொன்னதும், ஏம்பா இன்னும் ரெண்டு மூணு வருஷம் போகட்டுமே, உனக்கு வயசு இருக்கேன்னு சொன்னேன். இல்ல சார், படம் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்னு சொன்னான். இதுக்கு மேல அவனை டிஸ்கரேஜ் பண்ணக் கூடாதுன்னு முடிவு பண்ணி ஓகேப்பா பெஸ்டா பண்ணுன்னு சொன்னேன். இப்ப படத்தை பெஸ்டா பண்ணிருப்பான்னு நம்பிக்கையுடன் இருக்கேன்”.
— ஆண்டவர்










Comments are closed, but trackbacks and pingbacks are open.