சந்தேகத்திற்குரிய லிங்க்-குகளை தொட்டால் மட்டுமல்ல; வியாபார ரீதியாக அனுப்பி வைக்கப்படும் குறுந்தகவல்களை சரிபார்க்காமல் தொட்டாலும் மோசடிக்காரர்களின் வலையில் சிக்கி பணத்தை இழக்க நேரிடும் என்பதை எச்சரிக்கிறது, திருச்சி விமான நிலையத்தை சேர்ந்த மலர்மன்னணுக்கு ஏற்பட்ட அனுபவம்.
5ஜி செல்போன் டவர் அமைப்பதற்காக இடம் தேடி வருவதாக ஒரு குறுந்தகவல் ஒன்று அவரது கைப்பேசிக்கு வந்திருக்கிறது. அவர்கள் வழங்கிய எண்ணில் தொடர்புகொண்டு பேச, அவர்களும் முதற்கட்ட தகவல்களை கேட்க, இவரும் தனது பெயரில் இல்லை மனைவி பெயரில் இருக்கிறது என்பதாக நிலம் தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைக்கிறார்.
ஆவணங்கள் பரிசீலனைக்குப்பிறகு, உங்களோடு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தவர்கள், அட்வான்சாக 15 இலட்சம் வங்கிக்கணக்கில் வரவு வைப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். மேலும், ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள சேவைக்கட்டணம், பிராசஸ் கட்டணம், என சில நடைமுறைகளை சொல்லி மெல்ல இரண்டு இலட்சம் ரூபாய் வரையில் கறந்திருக்கிறார்கள். மலர்மன்னனும் அதுதான் 15 இலட்சம் வரப்போகிறதே என்று பல்வேறு தவணைகளில் அனுப்பி வைத்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் அவர்களோடு தொடர்பில் இருந்து எண் சுவிட்ச் ஆஃப் ஆனபோதுதான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, பதறியடித்து திருச்சி சைபர் கிரைமில் புகார் அளிக்கிறார் மலர்மன்னன். திருச்சி மாநகர் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலுச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
எந்த ஒரு தகவலையும் அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல், ஒருமுறை நிதானமாக சரிபார்க்காமல், செயல்பட்டால் மோசடிக்காரர்கள் விரிக்கும் ஆசை வலையில் விழுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத்தான் இந்த சம்பவம் உணர்த்துகிறது.
மக்களே, இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். ஒருவேளை மோசடியில் சிக்கிக்கொண்டால், வீட்டிலிருந்தபடியே 1930 என்ற எண்ணில் அல்லது cybercrime.gov.in. என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யுங்கள். அருகாமையிலுள்ள சைபர் கிரைம் போலீசாரை அணுகுங்கள் !
லிங்க் மட்டுமல்ல… மெசேஜ் தொட்டாலும் பர்ஸ் காலிதான் | 5G Tower பெயரில் ₹2 லட்சம் மோசடி
– அங்குசம் செய்திப்பிரிவு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.