கலைஞரின் படைப்பாற்றல் – ஏ.டி.பன்னீர்செல்வம்
திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அமைப்பான நீதிக்கட்சியின் தளகர்த்தராகத் திகழ்ந்தவர் ஏ.டி.பன்னீர்செல்வம். இந்தி ஆதிகக் எதிர்ப்பு, சமஸ்கிருதத் திணிப்பு முறியடிப்பு எனத் துணிச்சல் மிகுந்த செயல்பாடுகளை மேற்கொண்டவர். பெரியாருடன் இணைந்து நின்று இயக்கத்தைக் கட்டிக் காத்தவர். பிரிட்டிஷ் ஆட்சியில் 1940-ஆம் ஆண்டு லண்டனில், இந்திய விவகாரத் துறை அமைச்சருக்கு ஆலோசகராகப் பணியாற்ற ஏ.டி.பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பொறுப்பை ஏற்பதற்காக அவர் லண்டன் சென்றபோது, அவர் பயணித்த ஹனிபால் விமானம் ஓமான் நாட்டுக் கடலில் விழுந்து மூழ்கியது. பன்னீர்செல்வம் மறைவெய்திய செய்தி இந்தியாவை எட்டியபோது பெரியார் கலங்கினார். உருக்கமிகு இரங்கல் அறிக்கை எழுதினார். அண்ணா கவலையுற்றுக் கட்டுரை எழுதினார். அப்போது 16 வயதே ஆன கலைஞர் எழுதிய இரங்கல் கவிதையில் அவரது கொள்கை உணர்வும் படைப்பாற்றலும் சேர்ந்து வெளிப்பட்டன.

கிழக்கினில் கிளம்பிய காலைக் கதிரவன்
வெடுக்கென வீழ்ந்தான் கடலில் என்றால்
வையம் கலங்காதோ? வாடி வதங்காதோ?
இருள் நீங்கி ஒளி பெறவே முந்துங்கால்
மருள் சூழ்ந்த சாவு மேகம்
இளங்கதிரை மறைத்ததுவே!
பன்னீர்செல்வமே..
பசியேறிய வெறிக் கடலின் பாழலைகள்
ஓய்ந்தனவா உன்னைத் தின்று?
கோமானே! யாம் அழுதழுது உகுத்த கண்ணீர்..
ஓமான் கடல் ஆயிரத்தை வெற்றி கொள்ளும்.
எனத் தொடர்ந்து செல்கிறது அந்தக் கவிதை.

1952ஆம் ஆண்டு கலைஞரின் எழுத்தோவியத்தில் வெளியாகி, தமிழ்த் திரையுலகில் திருப்புமுனை ஏற்படுத்திய பராசக்தி படத்தில், கல்யாணிக்கு குழந்தை பிறக்க இருப்பது பற்றி குடும்பத்தினர் பேசிக்கொள்வார்கள். அப்போது, பையன் பிறந்தால் பேரு, பன்னீர்செல்வம். பொண்ணு பிறந்தால், நாகம்மை என்று முடிவு செய்வார்கள். கல்யாணிக்கு குழந்தை பிறக்கும். என்ன குழந்தை என்று தெரிந்துகொள்ள காத்திருப்போரிடம் அந்தக் குடும்பத்துப் பெண்மணி, “பையன் பிறந்திருக்கான். பன்னீர்செல்வம் பிறந்திருக்கான்” என்று சொல்வார்.
ஏ.டி.பன்னீர்செல்வம் இறந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அவர் பெயரைத் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில், கதையில் வரும் குழந்தைக்குப் பெயர் வைத்தவர் கலைஞர் எனும் படைப்பாளி.
இன்று (ஜூன்1) ஏ.டி.பன்னீர்செல்வம் பிறந்த நாள்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.