“கமெண்ட்களுக்கு 2 மணி நேரம்… மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போது நேரம்?”
சிவகாசி அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது மாணவியிடம் ஆங்கில அறிவு குறித்து கேள்வி எழுப்பியதாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஆயிரக்கணக்கான கருத்துகள் பதிவாகி வருகின்றன.
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பதிவின் கீழ் வந்த விமர்சனங்களுக்கு அமைச்சர் கீர்த்தனா காலை முதலே சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதிலளித்தது சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
இதையடுத்து, “ஒரு அமைச்சரின் நேரம் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதற்காக செலவிடப்பட வேண்டுமா? அல்லது மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பயன்படுத்தப்பட வேண்டுமா?” என்ற கேள்வி பல தரப்பினரிடையே எழுந்துள்ளது.

அமைச்சரின் ஆதரவாளர்கள், மக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிப்பது வெளிப்படைத்தன்மையின் அடையாளம் எனக் கூறினாலும், விமர்சகர்கள் அதற்கு மாறான கருத்தை முன்வைக்கின்றனர். மக்கள் பிரதிநிதிகளின் முதன்மை பொறுப்பு சமூக வலைதள விவாதங்களில் ஈடுபடுவது அல்ல; மக்களின் குறைகளை கேட்டறிந்து நிர்வாக நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதே முக்கியம் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
பள்ளி ஆய்வில் தொடங்கிய இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களைத் தாண்டி அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. அமைச்சர் அளித்த விளக்கங்கள் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா, அல்லது புதிய விவாதங்களுக்கு வழிவகுக்குமா என்பது தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.
— மாரீஸ்வரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.