TET வினாத்தாள் -“பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட கேள்விகள்…” கூடுதல் மதிப்பெண் வழங்க AIFETO வா.அண்ணாமலை கோரிக்கை!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள், கனிவான பார்வைக்கு…. ஜூலை 4 ஆம் தேதி நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் வினாத்தாளினை தயாரித்தவர்கள்… தமிழ்நாடு அரசின் மீது ஆசிரியர்களுக்கு அதிருப்தி ஏற்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தில் தயாரித்துள்ள வினாத்தாள்!.. வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 25 கூடுதலாக வழங்கி ஆசிரியர்களை பாதுகாத்திட AIFETO, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை அவா்கள் வேண்டுகோள் வைத்துள்ளார்.
உச்சநீதிமன்றம் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று தெரிவித்திருக்கிறதே தவிர, ஆசிரியர்கள் எவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று விடக்கூடாது என்ற அளவிற்கு மறைமுகமாகக் கூட சொல்லவில்லை.
ஆனால் இந்த ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை பாடம் நடத்தக்கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு நடைபெற்ற சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு என்று அறிவித்து விட்டு ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்களில் கேள்வி கேட்டதை விட ஆறு ஏழு எட்டு ஒன்பதாம் வகுப்பு பாடங்களில் இருந்து எல்லாம் வினாத் தாள்களை தயாரித்து உள்ளார்கள்.
மொத்த மதிப்பெண்கள்கள் 150 இல் 60% வினாக்கள் பாடத்திட்ட வரம்பினை மீறி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. (Out of syllabus) இதனுடைய உள்நோக்கம் தான் என்ன?.. ஆசிரியர்கள் TET தேர்வு எழுதியதில் குறைவான விழுக்காட்டினர்தான் தான் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்!.. இவர்களிடம் படிக்கின்ற பிள்ளைகள் எப்படி கல்வி கற்பதில் முன்னேற்றம் அடைய முடியும் என்று பொதுமக்கள் மத்தியில் ஆசிரியர்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற வகையிலே தயாரிக்கப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் என்பது 100% விழுக்காடு புலனாகிறது.
சென்ற ஆண்டு நவம்பரில் நடைபெற்று முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வு அனைவருக்குமானது. TET முதல் தாள் பாடத்திட்டம் வரையறைக்குள் கேள்வி கேட்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
ஆனால் ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு என்ற பெயரில் நடைபெற்ற தேர்வில் வினாத்தாளினை கண்டு ஆசிரியர்கள் கட்டாய ஓய்வில் அவர்கள் வெளியே செல்ல வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட தேர்வு என்பது போல் தெரிகிறது.
கூற்று காரணம் என்ற வகை கேள்விகள் மட்டும் 33 வினாக்கள் கேட்டுள்ளார்கள். பொருத்துக பகுதியில் 20க்கும் மேற்பட்ட வினாக்கள் கேட்டுள்ளார்கள். படிப்பதற்கே இரண்டு நிமிடங்கள் ஆகக்கூடிய 10 க்கும் மேற்பட்ட நீளமான கணித வினாக்களை கேட்டிருக்கிறார்கள்.
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பல பள்ளிகளில் ஓர் ஆசிரியர் தான் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். பல ஆசிரியர்கள் 55 வயதினை கடந்தவர்கள். அவர்கள் நடத்தும் பாடத்திட்டத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டு கேள்விகள் கேட்டால் எப்படி அவர்களால் எழுத முடியும்?..
சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருப்பதை போல அவரவர் கற்பிக்கும் பாடங்களில் பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்டால் தான் தேர்ச்சி பெற முடியும். பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு கேள்விகள் கேட்டால் எப்படி தேர்வு எழுதுவார்கள் என்று நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலர்கள் அனைவரும் TET தேர்ச்சி இல்லாத அந்தக்கால ஆசிரியர்களிடம் தான் படித்தவர்கள் என்பதை மறுக்கத்தான் முடியுமா?..

ஆசிரியர்கள் மட்டும் மூன்று ஆண்டுகளில் தகுதித் தேர்வு எழுத வேண்டும்.. என்று நீதிமன்றம் சொல்கிறது. அனைத்து துறைகளிலும் இதுபோன்று தகுதித் தேர்வு வைத்தால் எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை அவரவர்கள் சுய பரிசோதனைக்கு விட்டு விடுகிறோம்!.
150 கேள்விகள் 180 நிமிடங்கள் ஒரு கேள்வியை படிப்பதற்கே ஒரு நிமிடங்கள் ஆகும். 30 உளவியல் வினாவினை 20 பக்கங்களில் கேட்டுள்ளார்கள். எப்படி அதனை படித்து புரிந்து கொண்டு விடையினை எழுதுவார்கள். குறைந்தது 4 மணி நேரம் இருந்தால்தான் அவர்கள் கேட்டுள்ள வினாக்களுக்கு படித்து பார்த்து விடை அளிக்க முடியும்.
பொதுவாக ஊழல் இல்லாத அரசு என்பது தவெக அரசின் இலக்கு என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சத்தியபிரமாணமாக எடுத்துக் கொண்டு செயல்படுத்தி வருகிறார். பள்ளிக் கல்வித்துறையைப் பொறுத்தவரையில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எவ்வித ஊழலுக்கும் இடமில்லாமல் நேர்மையாக நடந்து வருகிறது, என்பதை இதயம் திறந்து பாராட்டுகிறோம்.
அரசின் மீது ஆசிரியர்களுக்கு அதிருப்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கான வினாத்தாளினை தயாரித்து வெளியிட்டு இருக்கிறார்கள்.
பாடத்திட்டத்திற்கு அப்பால் வினாக்கள் கேட்டால் முன்பெல்லாம் எப்படி கூடுதல் மதிப்பெண்கள் அளிப்பார்களோ?.. அதுபோல் ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் 60% விழுக்காடு 1-5 TRB வெளியிட்டுள்ள பாடத்திட்டம் நிலைக்கு அப்பாற்பட்டு தயாரித்துள்ளார்கள். TET தாள் ஒன்றுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 25 அளித்து வினாத்தாள் திருத்துவதற்கு முன்பாக தமிழக அரசு முடிவு எடுத்து அமல்படுத்த வேண்டும் என்று, ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் இதய குமுறல்கள் அரசை நோக்கி… கண்களில் கண்ணீர் ததும்ப எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மூத்த இயக்கத் தலைவர் என்ற முறையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், மதிப்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் பார்வைக்காக கனிவுடன் கொண்டு வருகிறோம்.
தவெக அரசின் மீது ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயம் வைத்துள்ள நம்பிக்கையினை பாதுகாத்திட வேண்டுமாய் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்!..
“ஆசிரியர்கள் எவரும் தேர்வில் தேர்ச்சி பெற்று விடக் கூடாது!. என்ற உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட வினாத்தாள்!.. ”
25 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கூடுதலாக வழங்காவிடில் ஏற்படும் மாரடைப்பு மரணங்களுக்கு யார் பொறுப்பேற்பது?..
(TET-2 ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த கருத்துப் பதிவு அடுத்தப் பதிவில் வெளியிடப்படும்.)
ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகத்தினை நடத்தி வரும் அரசின் மீது அக்கறை கொண்டுள்ள இயக்கத்தின் மூத்த தலைவர்…
— வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO







Comments are closed, but trackbacks and pingbacks are open.