இந்தியாவின் 80வது விடுதலை நாளில் சமதர்மம் வெல்ல சபதம் ஏற்போம்! பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தல்
“மதத்தில் பக்தி என்பது ஆன்மாவின் விடுதலைக்கான வழிகளாக இருக்கலாம். ஆனால் அரசியலில், பக்தி அல்லது தலைவர்களைக் கடவுளாகப் போற்றும் நாயக வழிபாடு (Hero worship) என்பது நாட்டைத் தாழ்ச்சிக்கும், இறுதியில் சர்வாதிகாரத்திற்கும் அழைத்துச் செல்லும் உறுதியான பாதையாகும்”.
“கட்சிகள் தேசத்தை விடக் தங்களின் மத மதிப்பீடுகளுக்கு (creed) முன்னுரிமை அளித்தால், நமது சுதந்திரம் இரண்டாவது முறையாக ஆபத்துக்கு உள்ளாகும், அநேகமாக நிரந்தரமாக நமது சுதந்திரத்தை இழக்க நேரிடும். இந்த நிலையை நாம் அனைவரும் உறுதியுடன் தடுத்தாக வேண்டும். நமது கடைசி இரத்தத் துளி வரை நமது சுதந்திரத்தைப் பாதுகாக்க நாம் உறுதிகொண்டிருக்க வேண்டும்” .
பாபாசகேப் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் நவம்பர் 25, 1949 அன்று விடுத்த எச்சரிக்கை இன்றைய அரசியல் சூழலுக்கு மிகவும் பொருந்தும்.
1936ல் அவர் எழுதிய ஆய்வுரையில் சமூகத்தை ஜனநாயகப்படுத்த வேண்டிய அவசியத்தை கீழ்க்கண்ட வாறு விளக்குகிறார்;
” ஜனநாயகம் என்பது அரசாங்கத்தின் ஒரு வடிவம் மட்டுமல்ல; அது முதன்மையாக இணைந்து வாழும் முறை, பகிரப்பட்ட அனுபவம், மற்றும் சக மனிதர்கள் மீதான மரியாதையும் போற்றுதலும் கொண்ட மனப்பான்மையாகும்.”
பகத் சிங் முதல் வ உ சி வரை எண்ணில் அடங்கா நமது மூதாதையர்கள் செய்த தியாகத்தின் விளைவாக நமது நாடு விடுதலை அடைந்தது. நாடு விடுதலை அடைந்துவிட்டது, உண்மைதான், மக்கள் நிலை என்னவாக இருக்கிறது?
சாதியின் பிடியில் சிக்கித் தவிக்கும் சமூகத்தில், சமூக ஒடுக்குமுறையாலும், நிரந்தர வேலையில்லாத காரணத்தாலும், கூரை இல்லாமல் நடைபாதையில் வசிக்கும் தொழிலாளர்களின் குரலை கவிஞர் தமிழ்ஒளி ஒலிக்கிறார்;

“வந்த விடுதலை யாருக்கென்றே- அதை
வாங்கிய வீரரைக் கேட்டிடுவோம். – இங்கு
நொந்து கிடப்பவர் வாழவில்லை – எனில்
நொள்ளை விடுதலை யாருக்கடா..?”
விடுதலை நம் ஒவ்வொருவருக்கும் என்பதை அனைவரும் உணரும்படி, அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் அனைத்திலும், அனைத்து நிலையிலும் கிடைத்திட வேண்டும்.
அனைவரும் எனது உடன்பிறந்தவர்கள் என்ற சகோதர உணர்வே சுதந்திரம், சமத்துவம் ஆகிய சொற்களுக்கு உயிர் கொடுக்கும்.
இந்தியாவின் 80வது விடுதலை நாளில் சமூகத்தை ஜனநாயகப்படுத்தி, சமூகம் , பொருளாதாரம், அரசியல் ஆகிய மூன்று நிலைகளிலும் சமத்துவம் நிலவிட, சமதர்ம தத்துவம் வெல்ல நமது போராட்டங்களை வலுப்படுத்திட உறுதியேற்போம்.
இன்குலாப் சிந்தாபாத்!
புரட்சி வெல்லட்டும்!
என்பதே விடுதலைப் போராட்டக் களத்தில் ஒலித்த வீரம் செறிந்த முழக்கம்.
இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகளின் முழக்கத்தை நாம் ஒவ்வொருவரும் முழங்கிடுவோம்!
புரட்சி வெல்லட்டும்!
இந்தியா செழிக்கட்டும்!
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை







Comments are closed, but trackbacks and pingbacks are open.