பேரனுக்காக எழுதத் தொடங்கினேன் …
”சிறுவயது முதலே வாசிப்பில் நாட்டம் ஏற்பட தந்தையே காரணம்” என்று குறிப்பிடும், சிறார் எழுத்தாளர் ஞா.கலையரசி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் சீனியர் கிளார்க்காகப் பணி செய்து ஓய்வுபெற்றவர்.
’பணி ஓய்வு பெற்ற பின் பேரப்பிள்ளைக்குக் கதை சொல்லத் துவங்கினேன். அவனுக்குத் தினமும் புதுக்கதை சொல்ல வேண்டும். எனக்குத் தெரிந்த எல்லாக் கதைகளையும் சொல்லி முடித்த பிறகு, நானே கற்பனை செய்து சொல்ல ஆரம்பித்தேன். அப்படி பேரனுக்கு நான் சொல்லிய கதைதான் மந்திரக்குடை. அதுதான் அச்சில் வெளிவந்த என் முதல் சிறார்நூல்” என்கிறார், ஞா.கலையரசி.

2018 இல் புதியவேர்கள் என்ற தலைப்பில் வெளியான சிறுகதைத் தொகுப்புதான் இவரது முதல் நூல். மந்திரக்குடை – சிறார் நூலை தொடர்ந்து, சிறார் இலக்கியம் குறித்த இவரது தேடுதலுக்கு கூகுள் திருப்திகரமாக உதவிடாத நிலையில், இவரே https://chuttiulagam.com/ என்றொரு வலைதளத்தை உருவாக்கிவிடுகிறார். இதில், 150-க்கும் மேற்பட்ட சிறார் நூல்களின் விவரங்களை நூல் பற்றிய அறிமுகத்தோடு வெளியிட்டிருக்கிறார்.
இதுவரை சிறார்களுக்காக 27 புத்தகங்களையும், 2 தொகுப்பு நூல்களையும் வெளியிட்டிருக்கிறார். இதுதவிர சிறுகதை தொகுப்பு நூல் ஒன்றும்; வரலாற்று நாவல் ஒன்றையும் படைத்திருக்கிறார் ஞா.கலையரசி. “பூஞ்சிட்டு” எனும் குழந்தைகள் மாத மின்னிதழின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்று, சிறார் இலக்கிய தளத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.