கோகுல்ராஜ் ஆ*ணவக்கொ*லை ! அரசு வழக்கறிஞரின் கட்டண பாக்கி- அரசுக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு
சேலம் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகனுக்கு வழங்க வேண்டிய கட்டண பாக்கியை 4 வாரங்களில் வழங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், கடந்த 2015 ஆம் ஆண்டு ஆ*ணவக் கொ*லை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மதுரை சிறப்பு நீதிமன்றம், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதில் யுவராஜ் உட்பட எட்டு பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், மற்ற இருவரின் தண்டனையை குறைத்து தீர்ப்பளித்தது. இந்த கொ*லை வழக்கில், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் உயர் நீதிமன்றத்திலும் அரசு வழக்கறிஞராக வாதங்களை முன் வைத்தார்.
இந்நிலையில், சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியதற்கான கட்டணம் அரசு தரப்பில் தனக்கு முழுமையாக வழங்கப்படவில்லை எனவும், தனக்கு தரவேண்டிய கட்டண பாக்கியை அரசு வழங்கும்படியும் ப.பா. மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றிய மோகனுக்கு உரிய கட்டணத்தை மூன்று வாரங்களில் வழங்கும்படி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் தா*க்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில், வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக ஆஜரானதற்கு உரிய கட்டணத்தை வழங்கி விட்டதாகவும், போக்குவரத்து செலவுகளை வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், மிகவும் முக்கியமான வழக்கில் அரசு தரப்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணித்து, 117 முறை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். போக்குவரத்து செலவை, அவரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், வழக்கில் ஆஜரானதற்கான கட்டணம், போக்குவரத்து செலவுகளை சேர்த்து 12 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பில் சமர்ப்பித்துள்ளார். இந்த தொகையை வழங்காமல், அரசு தனது நேரத்தையும், சக்தியையும், மக்கள் பணத்தையும் மேல் முறையீட்டுக்காக செலவிடுவதை விட, அந்த தொகையை வழங்கலாம் எனக் கூறி தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்த நீதிபதிகள், அரசு சிறப்பு வழக்கறிஞருக்கு வழங்க வேண்டிய கட்டண பாக்கி, போக்குவரத்து செலவுகளை 4 வாரங்களில் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.