தமிழக ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.-க்கு சர்ச்சைகள் ஒன்றும் புதியதல்ல. அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும், அசராமல் ஆள் எடுக்கும் பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறது, டி.ஆர்.பி. இந்நிலையில்தான், டி.ஆர்.பி. என்ற வாரியத்தையே கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் எழுந்திருக்கிறது.
தமிழகத்தில் 1996-க்கு முன்பாக கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேருவதற்கு எந்தவிதமான போட்டித் தேர்வு முறைகளும் கிடையாது. அப்போதைய காலத்தில், எம்.ஃபில். முடித்திருந்தாலே கல்லூரியில் பாடம் எடுக்கலாம் என்ற நிலை இருந்தது. 1996 – 2001 கால கட்டத்தில்தான் முதல்முறையாக கல்லூரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வு என்ற நடைமுறை முதல்முறையாக வந்தது. 2001-2006 கால கட்டத்தில்தான் மணி நேர அடிப்படையில் விரிவுரையாளர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் என்ற புதிய நடைமுறை புகுத்தப்பட்டது. அதாவது, நிரந்தர பணியிடம் என்பதை ஒழித்துவிட்டு, அத்துக்கூலிகளைப் போல பேராசிரியர்களை நியமிப்பதற்கு இவர்கள் வைத்த பெயர் “கௌரவ விரிவுரையாளர்கள்”. இதன்படி, பி.எச்.டி., எம்.ஃபில். போன்ற படிப்புத்தகுதியின் அடிப்படையில் 2006 – 2011 ஆட்சி காலத்தில், மூன்று முறை பணியிடங்களை நிரப்பினார்கள்.
ஒருபக்கம் எம்.ஃபில். தகுதி முடிவுக்கு வருகிறது. அந்த இடத்தில் செட், நெட் இடம்பிடிக்கிறது. கௌரவ விரிவுரையாளராக பணியாற்றிய அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் விதமாக, பணி அனுபவத்துக்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த நடைமுறைக்கு எதிராகவும், இந்த நடைமுறையில் முறைகேடுகள் நடப்பதாகவும் பலரும் நீதிமன்றத்தை நாட, 2015 வரை நீதிமன்ற வழக்குகளால் புதிய நியமனங்கள் முடங்கிப்போனது.
முதல் தலைமுறை பட்டதாரி, தமிழ்வழி பயின்ற மாணவர்களுக்கான முன்னுரிமை என ஒருபுறம் உயர்கல்வியில் பாரிய மாற்றங்கள் ஏற்படுகிறது. மறுபுறம், கல்லூரிகளில் ஷிப்டு முறை அறிமுகம், புதிய கல்லூரிகள் திறப்பு என காலி பணியிடங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்கிறது.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு 2019 இல் முதல்முறையாக அறிவிப்பு வெளியானது. கொரோனா ஊரடங்கால் அதுவும் முடங்கிப்போனது. இந்த பின்னணியில்தான், தமிழகம் முழுவதும் உள்ள 188 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்ல 7000 ஆசிரியர் காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவித்து, அதில் 4000 பணியிடங்களை முதற்கட்டமாக நிரப்புவதற்கான அறிவிப்பு 14.03.2024 இல் வெளியானது. கெடுவாய்ப்பாக, ஏற்கெனவே, நிலுவையில் இருந்த வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட நீதிமன்றத்தீர்ப்பின் காரணமாக, இந்த அறிவிப்பு செய்யப்பட வேண்டிய சூழல் எழுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு, முறையீடு, மேல்முறையீடு என சட்டப்போராட்டங்கள் தந்த அலற்சியிலிருந்து, ஒரு வழியாக வெளியானதுதான் கடந்த 2025 இல் வெளியான அந்த இறுதி அறிவிப்பு. அதுதான் தற்போது, சர்ச்சையாகியிருக்கிறது. இந்த சர்ச்சையின் பின்னணி குறித்து அலசுகிறது, இந்த காணொளி.
– அங்குசம் புலனாய்வுக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.