‘பதினெட்டாம் பெருக்கு’ இன்னைக்கு ! ..
ஆடிப்பெருக்கு என்பது நீருடன் தொடர்புடைய பண்பாட்டுத் திருவிழா. இப்பண்டிகையைக் காவிரி டெல்டாவில் ‘பதினெட்டாம் பெருக்கு’ என்றழைப்பர். காவிரி ஓடும் ஊர்கள் அனைத்திலும் முன்பு ‘பதினெட்டாம் படித்துறை’ என்று ஒரு படித்துறை இருக்கும். 18 படிகள் வைத்து அதைக் கட்டியிருப்பர். ஆடிப்பெருக்கு அன்று அதன் பதினெட்டாவது படி உச்சியைத் தொடும் அளவுக்கு ஆற்றில் நீர் நிறைந்தோடும். பெண்கள் ஆற்றில் குளித்து முடித்து ஈரச்சேலையோடு காவிரி நீருக்குப் படையல் செய்யும் காட்சிகளைக் காலை நேரம் முழுதும் காணலாம்.
தேங்காய், விளாம்பழம், பேரிக்காய், வெள்ளரி, வாழைப்பழம், காதோலைக் கருகமணி இவற்றோடு பூ, வெற்றிலைப் பாக்கு வைத்துப் படைப்பர். பச்சரிசியை ஆற்றுநீரிலேயே கழுவி எள், நாட்டுச்சர்க்கரை, தேங்காய்ப்பல் கலந்து அங்கு குடியிருக்கும் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பர். மஞ்சள் பூசிய நூல்கள் பெண்கள் கழுத்திலும், ஆண்கள் கையிலும் கட்டப்படும். சப்பரத்தட்டி எனும் சிறுத்தேரை கயிறுக்கட்டி இழுப்பது சிறுவர்களின் விளையாட்டு. ஆற்றில் மிதக்க விடப்பட்ட விளாம்பழங்களை நீருக்குள் பாய்ந்து எடுப்பது விடலைகளுக்கு வீரம். வெள்ளம் புரண்டோடும் ஆற்றில் கன்னியர்கள் காண்பதற்காகவே அக்கரைக்கு நீந்துவது அன்றைய காளையர்களுக்குச் சாகசம். இன்றோ பதினெட்டாம் பெருக்கு என்பது என்பது வீட்டுக்குழாயில் நடத்தப்படும் சடங்காகச் சுருங்கிவிட்டது.
ஆறு காய்ந்து கிடக்கிறது என்று தெரிந்தும், ஆற்றங்கரையைக் காண விருப்பம் கொண்டு சென்றேன். ஒரு கொண்டாட்டமும் இல்லை. ஆனால், ஆற்றின் காலியான படித்துறையில் அமர்ந்து நான்கு குடிமகன்கள் தாகம் தணித்துக் கொண்டிருந்தனர். தண்ணீர் இன்றி ஆறு மட்டும்தான் வறண்டிருக்கிறது.
– எழுத்தாளர் நக்கீரன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.