உங்க கட்டுரையை பார்த்தேன் !
நீதிநாயகம் சந்துருதான் முதலில் என்னிடம் அப்படி கேட்டார், “என்ன சார் இது, முன்னெல்லாம் பத்திரிகையில உங்க கட்டுரையை வாசிச்சேன்னும் சொல்வாங்க; இப்போ பார்த்தேன்னு சொல்றாங்க!”
இந்தியாவில் 2016இல் ஜியோ மலிவு விலை சேவை தொடங்கியதோடு, வாசிப்பின் வேக வீழ்ச்சி தொடங்கியது எனலாம்; டிஜிட்டல் யுகத்தின் எழுச்சி காலகட்டமும் அதுதான்; 2017இல் டிக்டாக் வந்தது; டிக்டாக் தடைக்குப் பின் இன்ஸ்டா அந்த இடத்தை தனதாக்கியது. ரீல்ஸ் வடிவமே இன்று எங்கும் ஆக்கிரமித்திருக்கிறது.
மக்கள் வாசிப்பதே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், எதையும் கையடக்க அளவில் சொல்ல வேண்டும். தேவைக்காக தேடிப் பிடித்து வாசித்தவர்களையும் ஏஐ வருகை சுருக்கிவிட்டது. 2026 இல் தங்களுடைய இணையதளத்துக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை 80% குறைந்துவிட்டிருப்பதாக சொன்னார் ஒரு பத்திரிகை ஆசிரியர். பத்திரிகையின் உள்ளடக்கத்தை எல்லாம் ஏஐ உட்செரித்து, வாசகர் தேடும் தரவாக சுருக்கி கொடுத்துவிடுகிறது.
நிதானமான தீவிர வாசிப்பு ஓர் ஆழ்ந்த உரையாடல். இத்தகு துரித வாசிப்பு சரியா, தவறா என்பதெல்லாம் தனி விவாதத்துக்கான விஷயம். இன்றைக்கு பத்திரிகையாசிரியர்கள் புரிந்துணர வேண்டியது என்னவென்றால், இன்ஸ்டாவில் ஒரு கார்டுக்கு 40 சொற்கள் என்ற அளவுக்குள் 6 கார்டுக்குள் ஒரு கட்டுரையை உங்களால் கொண்டுவர முடிந்தால் மட்டுமே இனி அது லட்சம் பேரை சென்றடையும் சாத்தியம் இருக்கிறது! சராசரி கவனக்குவிப்பு நேரம் 8.25 நொடிகளாக குறைந்துவிட்டது என்கிறார்கள்.
– சமஸ்







Comments are closed, but trackbacks and pingbacks are open.