போலீசார் அதிரடி வேட்டையில் போதை மாத்திரைகள், புகையிலை விற்ற 6 பேர் கைது !
திருச்சி பெரிய கடை வீதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த இ.பி. ரோடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 2000 போதை மாத்திரைகள் ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் மாம்பழச்சாலை மேம்பாலம் அருகே போதை மாத்திரைகள் விற்றதாக திருவானைக்காவல் தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் ( 25 ) என்பவரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருமண்டபம் பகுதியில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த ஹரிகரன் (வயது 24 )மணப்பாறையை சேர்ந்த ஸ்ரீனிவாசன் (32) இளையராஜா ( 33 )ஆகிய மூன்று பேரை செசன்ஸ் கோர்ட் போலீசார் கைது செய்தனர். இதேபோல் பாரதி நகர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கள்ளிக்குடி பகுதியை சேர்ந்த சடையாண்டி (44 ) என்பவரை எடமடைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர்.
ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர் . அப்போது ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்த மூர்த்தி மனைவி மாலதி (62) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.