குட்டி சாமியார், என்ன ஆனார் ?
அவை ஒரு காலத்தின் சாட்சிகள். 2004-ம் ஆண்டு. சிறுவயதிலேயே, காவி உடை அணிந்து ஆன்மிகப் பாதையில் சென்ற பரணீதரன் என்ற சிறுவன், அப்போது தமிழக ஊடகங்களில் “குட்டிச் சாமியார்” என்று பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தார்.
பெற்றோர் – ஆசிரமம் இடையேயான பிரச்சினை, அவரைச் சுற்றிய சர்ச்சைகள், மதுரை ஆதீனத்தின் தலையீடு என, அந்தச் சிறுவனின் வாழ்க்கை அப்போது தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்றது.
அந்தக் காலகட்டத்தில்தான் என் கேமராவிலும் அவர் பதிவானார். கையில் தண்டம். காவி உடை. நெற்றியில் திருநீறு. சிறுவனுக்கே உரிய முகத்தில் ஒரு விதமான அமைதி. அவரைச் சுற்றி கூடியிருந்தவர்களின் பார்வையும், அந்தக் காலத்தின் ஆன்மிகச் சூழலும், இன்றும் அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது கண்முன்னே வந்து நிற்கின்றன.
அப்போது எடுத்த இந்தப் புகைப்படம், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு காலத்தின் நினைவாக மாறும் என்று நான் நினைத்திருக்க வாய்ப்பில்லை.
2004-ல் பரணீதரன் பின்னர் தனது பெயரை ஸ்ரீவித்யாசங்கர சரஸ்வதி ஸ்வாமிகள் என மாற்றிக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. 2005-ம் ஆண்டு அவர் சேலத்தில் ஆசிரமம் தொடங்கியதாகவும் அன்றைய செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்குப் பிறகு, இப்போது அவர் எங்கே இருக்கிறார்? சாமியாராகவே தொடர்ந்து வருகிறாரா? அல்லது காலப்போக்கில் வாழ்க்கைப் பாதையை மாற்றிக் கொண்டாரா?
காலம் சில புகைப்படங்களை வரலாறாக மாற்றிவிடுகிறது.
செந்தில் நாதன், பத்திரிகையாளர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.