இயற்கையை அடக்கி ஆள வேண்டும் !
நமக்கு இன்றியமையாது வேண்டிய மழைத் தண்ணீரை ஆறுகள் அடித்துக் கொண்டு போய் சாகுபடிக்கு உபயோகமில்லாதபடி சமுத்திரத்தில் சேர்க்கிறது. ஆற்று வெள்ளத்தை அணை கட்டித் தேக்கிக் கால்வாய் மூலம் நிலங்களுக்குப் பாய்ச்சிக் கொள்ளும் முயற்சி இயற்கையின் போக்குக்கு விரோதமாயினும் சிறப்புக்குரியதல்லவா?
பெருங்காடுகளில் தானாகத் தோன்றுங் காட்டுத் தீ பரந்த பிரதேசங்களை நாசப்படுத்துவதுடன் அப்பிரதேசத்தில் வாழும் அனேக ஜீவப் பிராணிகளையும் உடன்கட்டை ஏறச் செய்கிறது. யாருக்கும் முன் எச்சரிக்கை செய்யாமல் திடீரென்று தோன்றும் பூகம்பங்களால் ஏற்படும் துன்பங்கள் அளவிடக் கூடியதா?
தானாக உற்பத்தியாகி மனிதனுடைய அடக்குமுறைக்கு மீறி பெருகி வரும் விஷப் பூச்சிகளும், வியாதிக் கிருமிகளும் துஷ்ட ஜந்துக்களும் மனிதனுக்குச் செய்யும் துன்பங்கள் கொஞ்சமா?
மேற்கூறிய கொடுமைகளை ஒரு தனி மனிதன் செய்தால், அச்செய்கையை நியாயமானதென்றோ, காருண்யமானதென்றோ, யாராவது சொல்லத்துணிவார்களா?
ஆனால், ஆஸ்திகர்களையும் நாஸ்திகர் களையும், நல்லவர்களையும், கெட்டவர்களையும், அறிஞர்களையும், மூடர்களையும் வித்தியாசமின்றி ஒரே நிலையில் வைத்துத் தன்னுடைய யதேச்சாதிகார ஆட்சி புரியும் இயற்கை நெறியை உயர் நெறியென்றும் நீதிநெறியென்றும் நாம் ஒப்புக்கொள்ள முடியுமா?
இந்த இயற்கைப் போக்கைத் தழுவி நாம் நடந்து கொள்ள முடியுமா? அப்படியன்றித் தன் போக்கில் இயங்கும் இயற்கை மனிதனால் அடக்கி ஆளப்படத் தகுதியுள்ளதேயன்றிப் பின்பற்றத் தகுதியுடையதல்ல என்று சொல்வதில் என்ன குற்றம்?
தந்தை பெரியார். (1936)






Comments are closed, but trackbacks and pingbacks are open.