கடைசிவரை அம்மாவிடம் கொடுக்காமல் போன அந்தக் கடிதம் !
புரட்சித்தலைவியோடு நான் பயணித்த அந்த ஆண்டுகளை, எனது வாழ்க்கையின் உண்மையான “போர்க்களம்” என்றே சொல்ல வேண்டும். நான் அவரோடு இருந்த காலகட்டத்தில், பெரும்பாலான ஆண்டுகள் எதிர்க்கட்சியாகவே கழிந்தன; ஆளும்கட்சியாக இருந்தது ஒருமுறை மட்டுமே! எதிர்க்கட்சியாக இருக்கும்போது, அரசு இயந்திரத்தின் வெறித்தனமான வேலையை எங்களிடம் எதிர்பார்க்கிறார்களோ, அப்போதெல்லாம் தலைவியின் கோபம் எரிமலையாய் வெடிக்கும். அந்தச் சூடான கோப அம்புகளை தாங்கிக் கொண்டு, மனம் தளராமல் பணியாற்றிய அந்த நாட்களை நினைத்தால் இன்றளவும் எனக்குள் ஒரு பிரமிப்பு எஞ்சுகிறது.

எப்போதுமே அடுத்தவர்கள் கஷ்டப்படும்போது அவர்களுக்கு உதவி செய்வதிலும், அருகில் நிற்பதிலும் தான் எனக்கு உண்மையான ஆனந்தம். அதன் அடிப்படையில் 2011ஆம் ஆண்டு புரட்சித்தலைவி அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒருநாள் என் மனதில் தோன்றிய எண்ணத்தை ஒரு கடிதமாக எழுதினேன். அது பெரும்பாலும் 2013-ஆக இருக்கலாம். “அம்மா, உங்களோடு பதினைந்து ஆண்டுகள் முழுமையாகப் பணியாற்றிவிட்டேன். இனி என் மனைவியிடம் சென்று பணியாற்றுவதில் ஆர்வம் கொண்டுள்ளேன். எனவே என்னை விடுவித்து அருள வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? அம்மா கோபப்படப் போகிறார்கள்” என்று பதறிப்போய், கடைசிவரை அந்தக் கடிதத்தை அவர் கையில் கொடுக்கவிடாமல் தடுத்துவிட்டார்கள்.
அன்று என் ஆசைப்படி மனைவியின் கீழ் வேலை செய்யும் பாக்கியம் கிடைக்கவில்லை என்றாலும், புரட்சித்தலைவியின் மறைவுக்குப் பின், காலம் என்னை என் மனைவியின் வழிகாட்டுதலில் இயங்கச் செய்யும் பாக்கியத்தை வழங்கியது. பழைய மரபுகளில் ஊறிப்போனவன் நான்; ‘நான் சொல்வதுதான் என் வீட்டில் உள்ளவர்கள் கேட்க வேண்டும்’ என்று உறுதியாக நினைத்தவன். ஆனால், தலைவியின் மறைவுக்குப் பின் வாழ்வு எனக்குப் பாடங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக என் கோபத்தைக் குறைத்துக்கொண்டு, இன்று என் மனைவி சொல்வதை முழுமையாகக் கேட்டு, அவள் வழிநின்று செயல்படத் தொடங்கியிருக்கிறேன். இருந்தாலும் கோபம் அவ்வப்போது தலைகாட்டும், அடக்கிக் கொள்கிறேன். நான் VIP-ஆக இருப்பதால், இன்று அவள் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறாள். “காலம் மனிதனுக்குப் பக்குவத்தைக் கொடுக்கும்” என்று பெரியவர்கள் சொல்வார்கள்; அதை இன்று என் சொந்த வாழ்க்கையில் முழுமையாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

புரட்சித்தலைவியின் கீழ் பணியாற்றியது எப்படிப்பட்ட பேரின்பமோ, அதேபோன்று இன்று மனைவியிடம் பணிந்து, அவள் சொல்லைக் கேட்டு நடப்பதும் ஒரு ஆகச்சிறந்த மகிழ்ச்சியே!
நேற்று, அவள் வேலை பார்க்கும் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்திப் படையலுக்காகப் “பூர்ண கொழுக்கட்டை” கேட்டுள்ளார்கள்; மாலையில் என்னிடம் அதைத் தெரிவித்தார். வெளி இடங்களில் தேடினோம். காலையில் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்றார்கள். உடனே நாங்களே அதைத் தயாரிப்பது எனத் துணிந்தோம். தேவையான பொருட்களை இரவே வாங்கி வைத்தோம். அதிகாலையில் நீராடி, தூய்மையான மனதுடன் விநாயகனுக்காக ஆத்மார்த்தமாக அந்த அற்புதக் கொழுக்கட்டைகளைச் செய்தோம்; நினைத்ததை விடவும் வடிவமும் வாசனையும் மிகச் சிறப்பாக வந்தது. அதை என் மனைவி மிகுந்த மகிழ்ச்சியோடு பணிக்கு எடுத்துச் சென்றுள்ளாள். அதன் உண்மையான சுவை என்னவென்று இனிமேல் தான் அவளிடமிருந்து தெரியவரப் போகிறது! அந்தச் சுவையை விட, காலையில் அவளுக்காகவும் இறைவனுக்காகவும் உழைத்த அந்தத் தருணம் எனக்குள் நிறைந்த பேரானந்தத்தைத் தந்துவிட்டது.
பூங்குன்றன்
(மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.வின் உதவியாளராக பணியாற்றியவர்)






Comments are closed, but trackbacks and pingbacks are open.