தமிழத்தில் இட ஒதுக்கீடு 100 க்கு 119 சதவீதம் !
சிதம்பரத்தில் சமீபத்தில் உள் இட ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நீண்ட நேரம் நடைபெற்று முடிந்தது. நானும் நண்பர் நளங்கிள்ளியும் தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டு இருந்தபோது இட ஒதுக்கீடு பற்றி ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துகொண்டார்.
அதனை மையமாக வைத்தே இந்த பதிவு எழுதப்பட்டது. இந்திய சுதந்திரத்துக்கு பிறகு இடஒதுக்கீடு அளிக்கப்படுவதற்கு ஏதுவாக இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது. இதற்குப் பிறகு தமிழ்நாட்டில், பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவீதமும் பட்டியலினத்தோருக்கு 16 சதவீதம் என மொத்தம் 41 சதவீதம் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ஏ.என். சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தார். இந்த ஆணையம் 33 சதவீதம் பிற்படுத்தபட்டவர்களுக்கு வழங்க பரிந்துரை செய்தது. கருணாநிதியின் கொடை உள்ளத்தால் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 31 சதவீதமாக உயர்த்தி அதிலிருந்து 2 சதவீதம் எடுத்து பட்டியலினத்தோருக்கான இட ஒதுக்கீடு 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆனால் பட்டியல் சமூகத்தின் மக்கள் தொகை அடிப்படையில் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான ஒரு அநீதியை சமுக நீதி என்று ஜனார்த்தன கமிட்டி அறிக்கையின் முகப்புரை கூறுகிறது.
எம்.ஜி. ராமச்சந்திரன்
1980 ல் எம்.ஜி. ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தினார் ஆனால் பட்டியல் சமூகத்தின் இட ஒதுக்கீடு அளவை உயர்தவில்லை. இதனால், ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 68 சதவீதமாக உயர்ந்தது. இந்த காலகட்டத்தில் இட ஒதுக்கீட்டின் வரம்புகள் எதுவும் இல்லை.
வன்னியர்களின் தொடர் போராட்டத்தால் 1989ல் கலைஞர் மு. கருணாநிதி அரசு, 50 சதவீத பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் 30 சதவீதம் பிற்படுத்தப்பட்டுருக்கும் என ஒதுக்கீடு செய்தார் .
கூடுதலாக SC/ST க்கு தனி ஆணையம் அமைத்து ST பிரிவினருக்கு தனியாக ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நிர்பந்ததால் பழங்குடியினருக்கு தனியாக 1 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தின் மொத்த இடஒதுக்கீட்டின் அளவு 69 சதவீதமாக உயர்ந்தது.
1992ல் இட ஒதுக்கீடு தொடர்பாக அளிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பில், பிற்படுத்தபட்டவர்களுக்கு மத்திய அரசின் பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தைத் தாண்டிச் செல்லக்கூடாது என உத்தரவிட்டது. இதன் காரணமாக, 1980ல்இருந்து தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டிற்கு சிக்கல் ஏற்பட்டது.

இந்த தருணத்தில் சட்ட ரீதியாக இரண்டு எதிர் எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டும் வெற்றியும் அடைந்தது. ஒன்று 69 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்வதற்கு ஜெயலலிதா மேற்கொண்ட செயல் மிக முக்கியமானது. மற்றொன்று வாய்ஸ் கவுன்சில் அமைப்பின் உறுப்பினராக இருந்த கே.எம். விஜயன், தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு கொள்கையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். 69 சதவீத இடங்களை உருவாக்குவதால் முற்பட்ட வகுப்பினர் இழக்கும் இடங்களுக்கு ஏதுவாக மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டுமென 1996ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி தீர்ப்பளித்தது.
மேற்கண்ட சட்ட திருத்தம் மற்றும் தீர்ப்பின் அடிப்படையில் சாதி இந்துகள் மட்டுமே பயன்பெற்றனர். மேலும் தமிழகத்தில் இட ஒதுக்கீட்டின் அளவு 100 சதவீதத்திலிருந்து 119 சதவீதமாக கல்வி துறையில் உயர்ந்தது. சுதந்திரத்திற்கு பிறகு தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளில் பட்டியல் மக்களின் இடஒதுக்கீடு 2 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இதற்கு மாறாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 25 சதவீதம் உயர்ந்துள்ளது. இது எவ்வளவு பெரிய அநீதி இதை துணிந்து திராவிட கட்சிகள் செய்துவிட்டு சமுக நீதி என்று நம்மை நம்ப சொல்வது எவ்வளவு பெரிய வன்மம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இட ஒதுக்கீட்டு நடைமுறையில் 2009ல் உள் ஒதுக்கீடு என்ற பெயரில் கலைஞர் கருணாநிதி மாற்றம் கொண்டுவந்தார். SCA சமூகத்தினரை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையில் கலைஞர் கருணாநிதிக்கு இருந்தால் மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் வழங்கியிருக்க வேண்டும் என்பதே என் கருத்து.
கட்டுரை
அருள் முத்துக்குமரன்.