“சுய விருப்பத்தோடுதான் திமுகவில் இணைந்தேன்” – வைகோவிற்கு கம்பம் ராமகிருஷ்ணன் பதில்!
தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் கம்பம் எம்எல்ஏவான இராமகிருஷ்ணன் அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது கடந்த 2006 ஆம் ஆண்டு கம்பம் தொகுதி மதிமுக எம்எல்ஏவாக இருந்த நான், சில மணக்கசப்பினால் தான் அக்கட்சியில் இருந்து விலகி தாய்க்கழகமான திமுகவில் இணைந்தேன்.
அப்போது திமுக தலைவராக இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட யாரும் என்னை நிர்ப்பந்தம் செய்யவில்லை.
குறிப்பாக எனது தயவில் 2006 முதல் 2011 வரையிலான காலத்தில் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது.
2006 ஆம் ஆண்டில் அதிமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றிருந்த போது அக்கட்சியின் சட்டமன்ற கொறடாவாக நான் பணியாற்றிய போது, எனது விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்ள கூறினார்கள்.
மேலும் அப்போது உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக எம்எல்ஏவாக இருந்த கண்ணப்பன் சந்தித்து நலம் விசாரித்ததை வைகோ விரும்பவில்லை.
இது போன்ற சில மணக்சப்புகள் காரணமாக 3 ஆண்டுகளுக்கு பிறகு தான், 2009-ல் எம்எல்ஏ பதவியை இராஜினாமா செய்து எனது சுய விருப்பத்தில் திமுகவில் இணைந்து கம்பம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றேன்.
மேலும் 2006 – 11 வரையிலான திமுக ஆட்சியில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட ஏராளமான மக்கள் நலத்திட்டங்களால் சிறப்பாக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இது போன்ற சிறப்பான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வந்ததால் தான் நானாக விருப்பப்பட்டு தாய்க்கழகத்தில் இணைந்தேன்.
மேலும் 2006 – 11 கால கட்டத்தில், என்னுடைய தயவு திமுக ஆட்சிக்கு தேவையில்லை. ஆனால் இன்றைக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் இராஜினாமா செய்து விட்டு அக்கட்சியில் இணைகிறார்கள்.
இதனை யாரும் விமர்சனம் செய்து விடக்கூடாது என்பதற்காகவும், தவெக அரசுக்கு முட்டு கொடுப்பதற்காகவும் தான், என் மீது வைகோ விமர்சனம் செய்து வருவதாக கூறினார்.
மேலும் மதிமுக எம்எல்ஏக்களை இராஜினாமா செய்யச் சொல்லி மீண்டும் இடைத்தேர்தலை சந்திப்பதற்காக தவெக உடன் வைகோ செய்வது தான் குதிரை பேரம்.
மேலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், முந்தைய முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை தான் செயல்படுத்தியதாக கூறி கல்வெட்டுகள் திறப்பது தான் தவெக அரசின் சாதனையா எனக் கேள்வி எழுப்பினார்.
— ஜெய்ஸ்ரீராம்







Comments are closed, but trackbacks and pingbacks are open.