“காமெடிக்கு கியாரண்டி இந்த ‘பேபி&பேபி!” -நம்பிக்கையுடன் பேசிய தயாரிப்பாளர்!
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் பி.யுவராஜ் தயாரிப்பில், பிரதாப் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ், ஜெய், யோகி பாபு , நடிகைகள் பிரக்யா நக்ரா, பாப்ரி கோஷ், கீர்த்தனா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேபி & பேபி’
ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் ஒரு குழந்தையால் ஏற்படும் காமெடி கலாட்டா தான் இந்தப்படம்.
பிப்ரவரி 14- ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா *பிப்ரவரி-01*ஆம் தேதி இரவு நடந்தது. நிகழ்ச்சியில் பேசியவர்கள்…..
தயாரிப்பாளர் யுவராஜ்
“எனக்கு தொழில் சினிமா இல்லை, ஆனால் சினிமா மீது சிறுவயதிலிருந்தே எனக்கு ஆர்வம். இயக்குநர் பிரதாப் சொன்ன கதை, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே தயாரிக்கலாம் என இறங்கினோம். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். ஒரு நல்ல படத்தை எடுத்துள்ளோம் எனத் திருப்தியாக உள்ளது. இமான் சார் அற்புதமாக இசையமைத்துள்ளார். அவருக்கு இப்படத்தில் இசை வள்ளல் எனப் பட்டம் தந்துள்ளோம். ஜெய் சார், சத்யராஜ் சார், யோகிபாபு சார் என எல்லோரும் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். வெளியிலிருந்து பார்க்க சினிமா ஈஸியாக தெரிகிறது. உள்ளே வந்த பின் தான், இங்குள்ள கஷ்டம் தெரிகிறது. பிரதாப் சொன்ன கதையால் தான் இந்தப்படம் நடந்தது. புதியவர்களான நாங்கள் உங்களை நம்பி வந்துள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள்”.
நடிகை பாப்ரி கோஷ்
“நான் தொலைக்காட்சியில் நடித்து வந்தேன். இந்தப்படத்தில் சத்யராஜ் சாருக்கு மகளாக நடித்துள்ளேன். அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். யோகிபாபு சாருடன் விஸ்வாசம் படத்திலேயே நடித்துள்ளேன். இப்படம் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது”.
நடிகர் தங்கதுரை
“எல்லா நடிகர்- நடிகைகளும் தொழில் நுட்பக் கலைஞர்களும், கடினமாக உழைத்துள்ளனர். எல்லோரும் பேபியோட ஹேப்பியா பார்க்க கூடிய படம்”.
நடிகை கீர்த்தனா
“நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்துள்ளேன். முதலில் ஜெய் அம்மா என்றவுடன் தயங்கினேன். ஆனால் சத்யராஜ் சாருக்கு ஜோடி என்றவுடன் ஒகே சொல்லிவிட்டேன்”.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இசையமைப்பாளர் இமான்
“இசை வள்ளல் டைட்டில் கொஞ்சம் ஓவர் தான். அன்பால் தந்துள்ளார்கள் நன்றி. இப்படம் ஆரம்பிக்கும்போது இருந்த பாஸிடிவிட்டி படம் முழுக்க இருந்தது. படம் முழுக்க நிறைய நட்சத்திரங்கள். பெரிய நடிகர்கள் இத்தனை பேர் முதல் படத்தில் கிடைப்பது அரிது. அதை மிகச்சரியாகப் பயன்படுத்தி, அனைவரும் கொண்டாடும் வகையில், சிரித்து மகிழும் படமாகத் தந்துள்ளார் பிரதாப். சினிமாவில் புதிதாக தயாரிப்புக்கு வருவது எளிதல்ல. யுவராஜ் சாருக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றியடைய வாழ்த்துகள் “.
இயக்குநர் பிரதாப்
“இந்தக்கதையை எழுதியவுடன் யோகிபாபு சாரிடம் தான் முதலில் போனேன். அவருக்குக் கதை பிடித்திருந்தது. பின் பல தயாரிப்பாளர்களிடம் போனேன். இறுதியாக யுவாராஜ் சாரை சந்தித்தேன். அவர் கதை கேட்டு, மிகவும் ஆர்வமாகி இந்த கதாபாத்திரத்துக்கு இவரை போடலாம், அல்லது இவரைப் போடலாம் என, அவர் தான் எல்லா நடிகர்களையும் ஒருங்கிணைத்தார். நான் தான் பட்ஜெட் பற்றிக் கவலைப்பட்டேன். இந்தக்கதையை சத்யராஜ் சாரிடம் சொன்னதும் அவர் ஒத்துக்கொண்டார். அவர் படத்திற்குள் வந்ததும் படமே மாறிவிட்டது. ஜெய் சார் இப்படத்திற்காக அவ்வளவு உழைத்தார். ரம்ஜான் நோன்பு காலத்தில் ஷூட்டிங் நடந்ததால் மூன்று வேளை சாப்பிடாமல் நடித்தார். யோகிபாபு தான் இந்தப்படம் எடுத்து முடிக்க காரணம். கீர்த்தனா மேடம் முதலில் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்றார். ஆனால் சத்யராஜ் சார் ஜோடி என்றதும் உடனே ஓகே சொல்லிவிட்டார். கண்டிப்பாக இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும். நன்றாக எடுத்துள்ளோம். ஆதரவு தாருங்கள் “.
யோகிபாபு
” படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. பிரதாப் எனக்கு 17 வருட நண்பர். 17 வருடம் முன்பு ஒரு படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துள்ளோம். இன்னக்கி அவர் இயக்குநர், நான் காமெடி நடிகன். நாம் உண்மையாக உழைத்தால் நமக்கானது தானாக வந்து சேரும். இந்தப்படம் மிக நல்ல அனுபவம். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள்”..
சத்யாராஜ்
“தயாரிப்பாளர் யுவராஜ் எளிமையாக அவரது மொழியில் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படித்தான் நமக்கு வரும் மொழியில் தான் பேச வேண்டும். இந்தப்படத்தில் அஜித் விஜய்யுடன் ஜோடியாக நடித்த கீர்த்தனா எனக்கு ஜோடி. நாமளும் இன்னும் இளைஞர் தானே. தயாரிப்பாளர் அப்பாவி போல் இருந்தாலும், ரொம்பவும் விவரமானவர். பிரதாப் இத்தனை நடிகர்களை வைத்து, வெகு அழகாக வெகு சீக்கிரமாக திட்டமிட்டு படத்தை எடுத்துள்ளார் வாழ்த்துக்கள். நானும் இப்படத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன”.
ஹீரோ ஜெய்
இயக்குநர் கதை சொல்ல வந்த போது, சத்யராஜ் சார், யோகிபாபு டார்லிங் எல்லாம் ஓகே சொல்லிவிட்டார்கள் என்றவுடனே நானும் ஒகே சொல்லிவிட்டேன். ஷூட்டிங்கில் பட்டினியாக நடித்தது கஷ்டமாகத் தெரியவில்லை. ஷூட்டிங்கில் சத்யராஜ் சார், யோகிபாபு என எல்லோரும் வயிறு வலிக்க வலிக்கச் சிரிக்க வைத்து விடுவார்கள் அது தான் கஷ்டமாக இருக்கும். இயக்குநர் பக்காவாக திட்டமிட்டு எடுத்தார். இரத்தம் வெட்டுக் குத்து இல்லாமல், மனம் விட்டுச் சிரித்து மகிழும் படமாக இப்படம் இருக்கும்”.
— மதுரை மாறன்.