தமிழில் பெயர்ப்பலகை இல்லாத கடைகளுக்கு அபராதம் – மே 15 வரை கெடு ! கலெக்டர்கள் கடும் எச்சரிக்கை !
தமிழகத்தில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் கடைகளின் விளம்பர பலகைகள் ஆங்கிலத்தில் அமைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் தமிழில்தான் இடம்பெற வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாகவே, தமிழ் ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது.
இதே கோரிக்கையுடன் சிலர் நீதிமன்றத்தையும் நாடியிருந்தனர். நீதிமன்ற வழக்குகளை தொடர்ந்து, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையும், தொழிலாளர் நல ஆணையமும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்ற விதியை பின்பற்றுமாறும் தவறும்பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகவும் அறிவித்திருந்தார்கள். அந்த அறிவிப்பு வெளியான சமயத்தில், பலர் தமிழில் பெயர்ப்பலகைகளை மாற்றியிருந்தனர். ஆனாலும், முழுமையான அளவில் இந்த விதி அமல்படுத்தப்படாமல், அப்படியே மறந்தும் போயினர்.
இந்நிலையில், அரசின் மேற்படி விதியை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் ஒருவர் வழக்கு தொடுத்ததையடுத்து, தமிழக அரசின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் நெருக்கடியை தொடர்ந்து, தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அடுத்தடுத்து மாவட்ட ஆட்சியர்கள் தமிழில் பெயர்ப்பலகை வைப்பது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி நாட்களிலும் வாரத்தின் இறுதியிலும் கிரிவலத்திற்காக பக்தர்கள் பெருமளவில் வந்து செல்கிறார்கள். அண்டை மாநிலமான ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்டு பிற மாநில பக்தர்களும் வந்து செல்வதால், திருவண்ணாமலையை சுற்றியுள்ள உணவகங்கள், கடைகளில், தெலுங்கு, மற்றும் கன்னடம், ஹிந்தி மொழிகளில் பெயர் பலகைகள் வைக்க தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், “ தமிழ்நாடு அரசு, நீதிமன்ற ஆணைகளின்படி வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகை அமைப்பதற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெயர்ப் பலகைகள் உரிய முறையில் உள்ளனவா என தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதுபோன்று, விதிமுறைப்படி பெயர்ப்பலகை அமைத்திடாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தமிழ் வளர்ச்சிக்காக வணிகர்களும், நிறுவனங்களும் தங்களின் பங்களிப்பை அளிக்கும் விதமாக, உடனடியாக பெயர்ப்பலகையை தமிழில் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகின்ற மே மாதம் 15-ந்தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் 100% தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும். ” என்பதாக கடுமையான உத்தரவை பிறப்பித்திருக்கிறார், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்.
இதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமாரும் இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். சேலம் மாநகராட்சியில் தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.
— மணிகண்டன்.