“தி வயர்” இணைய முடக்கமும், இணையதளம் முடக்கமும்!
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாகப் பத்திரிக்கை சுதந்திரம், சுமக்க முடியாத அளவிற்கு அரச அச்சுறுத்தல்களை தன் முதுகில் சுமந்து கொண்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்தியாவில் அரசிற்கு எதிராகச் செயல்படும் ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக Access Now தெரிவிக்கிறது..
கடந்த ஆண்டு உலக நாடுகளில் பத்திரிகை சுதந்திரம் குறித்து வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் 159 நாடுகளில் இந்தியா மிக மோசமான இடத்தில் 151 ஆவது இடத்தில் இருந்தது.
பத்திரிக்கைச் சுதந்திரம் பாதிக்கப்படும் போது, கட்டுக்கடங்காத அதிகாரத்தை ஆளும் அரசுகள் பெறுவதோடு, பொதுமக்களின் தகவல் தொடர்பு, கல்வி, வணிகம் மற்றும் பிற செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்திலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இத்தனை பாதிப்புகளை ஏற்படுத்தும் இணைய முடக்கம், இணையதள முடக்கம், தொலைக்காட்சிகளுக்குத் தடை போன்ற ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்குக் கடந்த காலங்களில் கடும் கண்டனங்கள் எழும்பி இருக்கின்றன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று(நேற்று) “தி வயர்” இணையதளத்தை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது.
இது, அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள பத்திரிகை சுதந்திரத்திற்கான உரிமையை அப்பட்டமாக மீறும் நடவடிக்கை என சமூக ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம், பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்த போதே இந்தியர்களை நாடுகடத்தியது அமெரிக்க அரசு. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இதனை மையப்படுத்தி அவரை நையாண்டி செய்யும் வகையில் விகடன் ஒரு கார்ட்டூனை வெளியிட்டது.
அதையடுத்து அவ்விதழை மோடி அரசாங்கம் முடக்கியது.
மக்தூப் என்ற இதழையும் ஒன்றிய அரசுத் தடை செய்துள்ளது.
இதன் தொடர்ச்சியாகத் தற்போது “தி வயர்” இணைய இதழ் இந்த முடக்கத்திற்கு பலியாகி இருக்கிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அத்தோடு மட்டும் அல்லாமல், மே 8 அன்று இந்தியாவில் செயல்படும் சுமார் 8000 டுவிட்டர் எக்ஸ் கணக்குகளை முடக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்தப் பட்டியலில் பன்னாட்டு செய்தி நிறுவனங்களும் தனிப்பட்ட சில பயனர்களின் கணக்குகளும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மனித உரிமைகளை நிறைவேற்றுவதற்கு டிஜிட்டல் உலகம் இன்றியமையாததாக மாறிவிட்ட காலத்தில், இணைய முடக்கமும், இணையதளம் முடக்கமும் நாட்டின் வளர்ச்சியைக் கேள்விக்குறியாகி விடும் என்பதை ஆளும் வர்க்கம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறது?
— டாக்டா்.எஸ். இனிகோ இருதயராஜ், சட்டமன்ற உறுப்பினா்.