சுஹாசினி வயசு, பார்த்திபன் ரவுசு! – ‘தி வெர்டிக்ட்’ நியூஸ்!
கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதைக் களத்தில் உருவாகியுள்ள படம் ‘தி வெர்டிக்ட்’. இதில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ளார். இசை: ஆதித்ய ராவ், ஒளிப்பதிவு :அரவிந்த் கிருஷ்ணா, எடிட்டிங் : சதீஷ் சூர்யா, பாடல்கள் மதன் கார்க்கி, கிருத்திகா நெல்சன், ராகவன், நைனார் கலை மற்றும் உடைகள் நந்தினி முத்தியம்.
அக்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் -என் கோபிகிருஷ்ணன் தயாரித்துள்ளனர். ஜகதா எண்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடெட் இப்படத்தை வெளியிடுகிறது.
இந்த மே-30ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நேற்று ( மே.13) காலை நடந்தது..
விழாவில் பேசியோர்…
*தயாரிப்பாளர் என். கோபிகிருஷ்ணன்*
“இந்தப் படம் பல நெருக்கடிகளைக் கடந்து தான் உருவாகியுள்ளது.
நான் கேட்டவுடன் இப்படத்தில் வரலட்சுமி , ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யுலேகா ராமன் என ஒவ்வொருவராக வந்து இணைந்தவுடன் படத்தின் அளவு பெரிதாகிவிட்டது. இது சின்னப் படம் என்றாலும் நல்ல கதையுள்ள படம்.”
நாயகனும் தயாரிப்பாளருமான *பிரகாஷ் மோகன் தாஸ்*
“இது எங்கள் முதல் இந்திய சினிமா முயற்சி. இதற்கு முன்பு அங்கே ஹாலிவுட்டில் செய்திருக்கிறோம் .இவ்வளவு பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைப்பது எங்களுக்கு வியப்பாகவும் மறக்க முடியாத அனுபவமாகவும் இருந்தது. இந்த வாய்ப்பைச் சாத்தியப்படுத்தியதற்கு கோபி சாருக்கு மிகவும் நன்றி. படப்பிடிப்பில் நம்ம நடிகைகள் நடிப்பைப் பார்த்துப் பார்த்துக் கற்றுக் கொண்டே இருந்தோம். இரண்டாவது டேக் வாங்காமல் நடித்துக் கொடுத்து அசத்தினார்கள். ஒரு படத்திற்கு கதை தான் அரசன் என்பார்கள். அது இந்த படத்தைப் பார்த்தால் புரியும்”.
*நடிகர் & இயக்குநர் யூகி சேது*
” இந்த படத்தைப் பார்க்க தயாரிப்பாளர் அழைத்த போது எப்படி இருக்குமோ என்று பயந்து கொண்டு சென்றேன். ஏதாவது சொல்லி நட்பு முறிந்து விடுமோ என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்தவுடன்எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு நேர்த்தியாக இஸ்திரி போட்டது மாதிரி அழகாக எடுத்திருக்கிறார்கள். பொதுவாக நீதிமன்றக் காட்சிகள் பார்ப்பதற்குப் பிடிக்காது . இதில் பார்க்கும்படி எடுத்திருந்தார்கள். இந்தப் படத்தில் முகங்களைச் சரியானபடி பயன்படுத்தியிருந்தார்கள்.’வின்டர் லைட் ‘என்ற படத்தில் முகங்களைச் சரியாக பயன்படுத்தியிருப்பார்கள். அப்படி முகங்களை இதில் சரியானபடி பயன்படுத்திருக்கிறார்கள். இருட்டின் பல ஷேட்ஸ் தெரிந்தவர் பி.சி. ஸ்ரீராம் சார். அவரிடம் இருந்து வந்தவர் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் .இருட்டை எப்படிப் பார்க்க முடியும் என்பதை இந்தப் படத்தில் காட்டி உள்ளார்கள்.
படம் நன்றாக வந்திருக்கிறது”.
*சித்ரா லெட்சுமணன்*
“இந்தப் படத்தின் தயாரிப்பாளரான கோபிகிருஷ்ணனிடம்
எனக்குப் பிடித்தவை இரண்டு விஷயங்கள். ஒன்று நட்பு.
அவரது நட்பின் வலை மிகப் பெரியது . அதில் ஒரு சிறிய பகுதியைத்தான் இந்த படக்குழுவினர் மூலம் நாம் இங்கே பார்க்கிறோம்.
அடுத்தது நிர்வாகத் திறமை. அவரிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்து விட்டால் மிகச் சரியாகச் செய்து விடுவார். இதில் நடித்திருக்கும் வரலட்சுமி தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் இப்போது பிரபலமாக இருக்கிறார். அவர் தன் பணியைச் சிறப்பாகச் செய்கிறார். அந்த நிம்மதியில் தினமும் கர்வத்துடன் தூங்கலாம். அப்படிப்பட்ட நடிப்புத் திறமை கொண்டவர் அவர்.படத்தின் இயக்குநர் ஒரு நாடக நடிகர் என்று அறிந்து வியந்தேன். இளையவர்கள் என்றாலும் இப்படத்தை நன்றாகத் திட்டமிட்டு எடுத்துள்ளார்கள். அனைவரிடம் நன்றாக நடிப்புத் திறனை வெளிக்கொண்டு வந்துள்ளார் .இந்தப் படத்திற்கு நல்ல தீர்ப்பு வழங்குங்கள்”.
*இயக்குநர் கிருஷ்ணா சங்கர்*
“என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்த நண்பர்களுக்கு நன்றி.
இந்தப் படம் எனக்கு மறக்க முடியாத அனுபவம்.
இந்தப் படத்தில் நடிப்பவர்களைத் தேர்வு செய்ய உதவிய தயாரிப்பாளர் கோபி அவர்களுக்கு நன்றி. அவர் அரை மணி நேரத்தில் இப்படிப்பட்ட நடிப்புக் கலைஞர்களை எனக்குத் தேர்வு செய்து கொடுத்தார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்தப் படத்தில் நடித்த தமிழ் நடிகர்களின் நடிப்பை பார்த்து அமெரிக்காவில் உள்ள நடிகர்கள் வியந்தார்கள். இங்கு உள்ள நம் நடிகர்கள் ஒவ்வொருவரும் 10 ஹாலிவுட் நடிகர்களுக்குச் சமமானவர்கள் .இதை நான் சொல்லவில்லை அங்குள்ளவர்களே சொன்னார்கள்.
இங்கிருந்து வந்த அனுபவமுள்ள நட்சத்திரங்கள் கொடுத்த ஒத்துழைப்பால் தான் 23 நாட்களில் இந்தப் படத்தை முடிக்க முடிந்தது.
எனது உதவி இயக்குநர்கள் திரைப்படத்தைப் பற்றிய திருத்தமான தெளிவான அறிவோடு இருந்தார்கள். அதனால் தான் இந்தப் படத்தை இவ்வளவு குறைவான நாட்களில் எடுக்க முடிந்தது. அவர்களிடமும் நான் கற்றுக் கொண்டேன்.
இந்தப் படத்திற்காக அவர்கள் கொடுத்த உழைப்பு சாதாரணமல்ல.
இந்தப் படம் நிச்சயம் உங்களைக் கவரும்”.
*நடிகை சுஹாசினி*
“இங்கே பெரிய பெரிய நட்சத்திரங்களுடன் என்னை ஒப்பிட்டார்கள். ஆனால் நான் நினைப்பது அடக்கமாக இருக்க வேண்டும், மேலும் அடக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான். தயாரிப்பாளர் கோபியை நான் எப்போது அழைத்தாலும் என் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு வருவார். எனது ‘நாம்’ தொண்டு நிறுவனத்திற்கும் சென்னை திரைப்பட விழா நிகழ்ச்சிகளுக்கும் அவரை அழைத்திருக்கிறேன். ஆனால் அவர் என்னைப் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்.
நான் அடிக்கடி நிறைய படங்களில் வந்தால் சலித்து விடும் . எனவே தேர்ந்தெடுத்து செய்கிறேன் .
இந்த படத்தை நான் ஒப்புக்கொண்டது எப்படி தெரியுமா?இந்தப் படத்தின் கதையை சீனியர் நடிகை லட்சுமியிடம்சொல்லி ஆறு நாட்கள் ஷூட்டிங் என்றவுடன் முடியாது என்று மறுத்தார் என்று கேள்விப்பட்டேன். அப்போது எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது . அவர் ஓகே செய்த கதை என்கிற அடிப்படையில் இதை ஒப்புக்கொண்டு நடித்தேன்.
இந்தப் படப்பிடிப்பு அனுபவத்தில் எனது வயதின் பலம் புரிந்தது .எங்களுடன் பல ஹாலிவுட் நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் சொந்த விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது நமது கேமரா மேன் சைலன்ஸ் என்று ஒரு சத்தம் போட்டார் . அனைவரும் அமைதியானார்கள். வேலை கூட பார்க்காமல் அமைதியானார்கள். அப்புறம் அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. இப்படி இந்தப் படத்தில் பல்வேறு ருசிகரமான அனுபவங்கள் இருந்தன” என்றவரிடம்,” உங்கள் இளமையின் ரகசியம் என்ன ?”என பார்த்திபன்கேட்க, “நீங்கள் கண்ணாடி போடாமல் என்னைப் பார்ப்பது தான் காரணம்”. என்றார் கலகலப்பாக.
*நடிகை வரலட்சுமி*
” என்னை ஹாலிவுட் திரை உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநருக்கு முதல் நன்றி. நான் இது போன்ற ஆங்கிலம் பேசியதில்லை .நான் ஆங்கிலம் பேசினால் வேகமாக இருக்கும், யாருக்கும் புரியாது. என்னை இதில் மிதமான வேகத்தில் பேச வைத்தார்கள். இப்படத்தில் நடித்த போது எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது. அங்குள்ள அமெரிக்க நடிகையுடன் நீதிமன்றத்தில் வழக்காடும் காட்சியில் நடிப்பது சவாலாக இருந்தது.

எப்போதும் எதுவாக இருந்தாலும் எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பும் சுஹாசினி ஆன்ட்டி அவர்களின் அன்பு பெரியது. அவருடன் நடித்தது வித்தியாசமான அனுபவம். படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தர வேண்டும்”.
*இயக்குநர் & நடிகர் பார்த்திபன்*
“இங்கே பேசிய யூகி சேது எப்படிப்பட்டவர் என்று யூகிக்க முடியாத புத்திசாலி.
இந்த படத்தின் காட்சிகளைப் பார்த்த போது ஒன்று தோன்றியது. ‘ஹேராம்’ என்கிற தமிழ்ப்படம் வெளிவந்த போது கமல் சாரிடம் “இந்தப் படத்தின் தமிழ் உரிமையை எனக்குக் கொடுக்க முடியுமா ?” என்று
ராதிகா கேட்டாராம். இந்தப் படக் காட்சிகளைப் பார்க்கும் போது
அப்படித்தான் தோன்றியது. ஏனென்றால் அந்தளவுக்கு வெறும் ஆங்கிலமாக இருந்தது. சில ஐந்தாறு வார்த்தைகள் தான் தமிழில் இருந்தது .
‘வெர்டிக்ட்’ என்ற தலைப்பில் படத்தைத் தேடிய போது ஒரு ஆங்கிலப் படம் 1982ல் வந்ததைப் பார்த்தேன் . இரண்டும் ஒரே மாதிரி தான் இருந்தது. கதையைச் சொல்லவில்லை. திரைப்பட உருவாக்கத்தில் அவ்வளவு தரமாக இரண்டும் ஒன்று போல் இருந்தது என்று சொல்கிறேன்.இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இங்கே சுஹாசினி அவர்களைப் பார்க்கும்போது, அவரது அழகின் திமிர் தெரிந்தது. அந்தத் திமிர் அவருக்கு அதிகம். எனக்கு 50 வயது என்று அவர் சொன்ன போது அந்தத் திமிர் தெரிந்தது. 28 வயதுக்கு மேல் பெண்கள் வயதை மறந்து விட்டால் திமிர் போல் ஒரு அழகு இருக்கும். அது பேரழகு.
ஆறு பெண்கள் நடித்த ஒரு ரஷ்யப் படத்தைப் பார்த்தேன். அதேபோல் இது ஐந்து பெண்கள் திறமை காட்டியுள்ளார்கள்” என்ற போது , சுஹாசினி குறிக்கிட்டு தனக்கு 63 வயது என்றார்.
நிகழ்ச்சியில் படத்தின் முன்னோட்டத்தை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்+ நடிகர் பிரகாஷ் மோகன் தாஸ் எழுதிய ‘லங்கா’ என்கிற நூலை வெளியிட, விருந்தினர் அனைவரும் பெற்றுக் கொண்டனர்.
— மதுரை மாறன்.