வாழ்வதும் சாக்கடையில் ! புதைப்பதும் சாக்கடையில் ! பழங்குடிகளின் பரிதாபம் !
சேரும் சகதியுமாக அலங்கோலமாகி கிடக்கும் அந்த இடத்தில் ஊர் பொதுமக்கள் சிலர் கூடியிருந்தார்கள். நாசியைத் துளைக்கும் சாக்கடை நாற்றத்திற்கு மத்தியில், இறுதி காரியங்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்தாலும் பொதுவாக சுடுகாடுகள் ஓரளவுக்கு கௌரவமாகவே காணப்படும். இறந்தவர்களை தெய்வமாக வழிபடும் மரபை கொண்டிருப்பதால், முக்கிய நாள் கிழமைகளில் இடுகாடுகளில் தங்கள் முன்னோர்களை வழிபடுவார்கள்.
ஆனால், இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, அந்த இடுகாடு. சாக்கடை நீர் சூழ்ந்த சேரும் சகதியுமான அந்த இடத்தில்தான், இறந்தவரின் உடலை அடக்கம் செய்துவிட்டு கிளம்பினார்கள் ஊர் பொதுமக்கள்.
“இன்று நேற்றல்ல… நான்கு ஆண்டுகளாக இந்த கொடுமையை அனுபவிச்சி வர்றோம். போடாத மனு இல்லை. பார்க்காத ஆளு இல்லை. சோர்ந்து போனதுதான் மிச்சம். சாக்கடைக்கு மத்தியிலதான் வாழுறோம்னா. செத்தாலும் சாக்கடைதான்னு ஆச்சு எங்க நிலமை” என்பதாக புலம்பும் அந்த பழங்குடிகளின் ஆதங்கம், நிலைகுலைய வைக்கிறது நம்மை.
திருப்பத்தூர் மாவட்டம், குரும்பகேரி பஞ்சாயத்தின் அவலம்தான் இது. 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். மழைநீரும் சாக்கடை நீரும் தனித்தனியே சென்று சேர்வது போல, முறையான திட்டமிடல் இல்லாமல் கடனுக்கு கால்வாய்களை கட்டியிருப்பதால் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார்கள், இந்த கிராமத்து மக்கள். அதில் ஒன்றுதான், இடுகாட்டை சூழ்ந்து நிற்கும் கழிவுநீர்.
ஊருக்குள்ளும் இதே நிலைமைதான். வீட்டை சுற்றி கழிவுநீர் தேங்கிக்கிடக்கிறது. துர்நாற்றமும், ஈக்களும் கொசுக்களும் மொய்த்தபடி இருக்கின்றன. குறிப்பாக, 6 – வது வார்டில் வசிக்கும் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த இன்னலை அன்றாடம் எதிர்கொள்கின்றனர். பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகும் அபாயத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

ஊர் கவுண்டர் சின்னதம்பியிடம் பேசினோம். “ஓட்டு கேட்டு வந்த எம்.எல்.ஏ. நல்லதம்பி, எம்.பி. அண்ணாதுரை ஆகியோரிடம் முறையிட்டோம். கண்டிப்பாக பிரச்சினையை தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார்கள். அதன்பிறகு, நேரில் சந்தித்திக்கும்போதெல்லாம் செய்து கொடுப்பதாக கூறி வருகிறார்களே தவிர எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. நாங்கள் (குருமன்ஸ் பழங்குடி) மைனாரிட்டி மக்களாக இருப்பதால், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் , அதிகாரிகளும் எங்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. சாக்கடையில் வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு, அதே சாக்கடையிலே அடக்கமாவவதுதான் எங்கள் விதியாக இருக்கிறது” என்றார் விரக்தியுடன்.
இந்த விவகாரம் குறித்து பேச பஞ்சாயத்து தலைவர் ‘ஸ்டெல்லா ராணி மற்றும் அவரது கணவர் தேவசகாயம்’ எண்களுக்கு தொடர்பு கொண்டோம். நமது அழைப்பு அவர்கள் ஏற்கவில்லை.
பஞ்சாயத்து கிளர்க் ஆஞ்சியிடம் பேசினோம். “மாவட்ட கவுன்சிலரிடம் நிதி கேட்டு இருக்கிறோம். கிடைத்தால், உடனடியாக சவுளூர் ஓடைக்கு கால்வாய் வெட்டப்பட்டு கழிவு நீரை வெளியேற்றிவிடுவோம்” என்றார்.

எம்எல்ஏ நல்லதம்பியிடம் பேசினோம். ”குரும்பகேரி மக்கள் கோரிக்கை வைத்தது உண்மைதான். எம்.எல்.ஏ. பண்டு நிறைய இருக்கிறது. சுடுகாடுக்கான இடத்தின் அளவு தொடர்பாக ஒரு சிக்கல் இருக்கிறது. அது குறித்து விவரம் கேட்டிருக்கிறேன். அது கிடைத்த உடனே அளவீடு செய்த பிறகு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பேன்” என்கிறார்.
மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் வடிகால் அமைப்பை ஏற்படுத்திய உள்ளாட்சி நிர்வாகம் உரிய நீர்வழித்தடத்தோடு அவற்றை இணைக்காமல், நட்டாற்றில் விட்ட கதையாக ஒதுங்கிக் கொண்டார்கள் என்பது ஒரு விசயம். இதன்காரணமாகவே, விவசாய நிலங்களிலும் குடியிருப்பு பகுதியிலும் பொதுவில் கழிவுநீரும் மழைகாலங்களில் மழைநீரும் சூழ்ந்து கொள்கிறது.
மற்றொன்று, இதனால் பாதிக்கப்பட்டிருப்பது குருமன்ஸ் பழங்குடியினர் வசிக்கும் குடியிருப்பும் அவர்கள் இறந்தால் புதைக்கும் சுடுகாடும். இந்த பாகுபாடு காரணமாகவே, வடிகால் பிரச்சினையை நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போட்டிருக்கிறார்கள்.
சாக்கடைகளுக்கு மத்தியிலே அன்றாடம் வாழ்ந்தும், சாகும்போதும் அதே சாக்கடை சூழ்ந்த இடுகாடுக்குள் புதைக்கப்படுவதுமான அம்மக்களின் துயரம் வெறுமனே அவலம் மட்டுமல்ல; வன்கொடுமையின் உச்சம் !
— மணிகண்டன்.