ரூ.10 லட்சம் மதிப்பிலான பால் விற்பனை பொருட்கள் தீயில் கருகி சேதம்!
ஜூன்- 01, விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த தங்கமணி (36) என்பவருக்கு சொந்தமான பால் மற்றும் ஐஸ்கிரீம் மொத்த விற்பனை நிலையம் சாத்தூர் மின்சார வாரியம் அலுவலகம் அருகே செயல்பட்டு வருகிறது.
நேற்று தொழிலாளர்கள் வழக்கம்போல் விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். திடீரென அதிகாலை 3 மணி அளவில் கடை உள்ளே இருந்து கரும் புகை வெளியேறி உள்ளது,
உடனடியாக அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பால், ஐஸ்கிரீம், மற்றும் பத்துக்கும் மேற்பட்ட குளிர்சாதன பெட்டிகள் தீயில் கருகி முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில், மின்சார கசிவினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
— மாரீஸ்வரன்.