“படம் நல்லாயில்லன்னா போன் போட்டுத் திட்டுங்க” – ’ஃபீனிக்ஸ்’ படம் பத்தி சொன்ன தயாரிப்பாளர்!
ஐந்து மொழிகளில் 200 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த ‘அனல்’ அரசு முதல் முறையாக ‘ஃபீனிக்ஸ்’ படம் மூலம் டைரக்டராகியுள்ளார். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தை ‘பிரேவ் மேன்’ பேனரில் ராஜலட்சுமி தயாரித்துள்ளார். ஜூலை.04—ஆம் தேதி ‘ஃபீனிக்ஸ்’ ரிலீஸ் ஆவதால், படத்தின் டிரைலர் & பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை நெக்சஸ் மாலில் உள்ள பளாஸோ தியேட்டரில் ஜூன்.27-ஆம் தேதி மாலை நடந்தது.
இதில் கவிஞர் விவேகா பேசும் போது,
“ஃபீனிக்ஸ் என்பது நம்பிக்கையின் குறியீடு. நம்பிக்கை தான் வாழ்க்கையில் முக்கியமானது. சூர்யாவும் நம்பிக்கையுடன் சினிமாவில் பயணிக்க வேண்டும். அவருக்கு முதல் படமே மிகப்பெரிய ஆக்ஷன் படமாக அமைந்துள்ளது” என்றார்.
நடிகை தேவதர்ஷினி,
“படத்தில் நான் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்துள்ளேன். நிஜத்திலும் அவன் என் மகன் போலத்தான்”.

தயாரிப்பாளர் டி.சிவா,
“இந்தப் படத்தை சில நாட்களுக்கு முன்பு தான் பார்த்தேன். தியேட்டர் இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு அதிரிபுதிரியான ஆக்ஷன் படம் இது. சூர்யா சேதுபதி கடுமையாக உழைத்துள்ளார். 100% நேர்த்தியாக படத்தை டைரக்ட் பண்ணியுள்ளார் அனல் அரசு. நான் சொல்வது 100% உண்மை. படம் பார்த்த பிறகு நல்லாயில்லன்னா எனக்கு போன் போட்டுத் திட்டுங்க”.
இயக்குனர்கள் பாண்டிராஜ், வினோத், சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன், நடிகர்கள் முத்துக்குமார், திலிபன், ஸ்டண்ட் மாஸ்டர் ஃபெப்சி விஜயன், படத்தின் மியூசிக் டைரக்டர் சாம்.சி.எஸ் ஆகியோர் விஜய்சேதுபதியின் பெயரை சூர்யா காப்பாற்றுவார் என வாழ்த்தினார்கள்.

ஹீரோ சூர்யா சேதுபதி பேசும் போது,
“இன்று நான் இந்த இடத்தில் நிற்பதற்கு எனது குடும்பமும் நண்பர்களும் பத்திரிகையாளர்களும் தான் காரணம். எனது தயாரிப்பாளர் ராஜலட்சுமி மேடத்திற்கும் என்மீது நம்பிக்கை வைத்து மிகப்பெரிய ஆக்ஷன் படமாக கொடுத்த அனல் அரசு சாருக்கும் எனக்கு உத்வேகம் அளித்த சக கலைஞர்கள், டெக்னீஷியன்களுக்கும் நன்றி. சிறியவனான என்னை ஆதரித்து ஊக்கப்படுத்துமாறு பத்திரிகையாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
அனல் அரசு,
“இந்தி ஜவான் பட ஷூட்டிங்கின் போது தான் சூர்யாவைப் பார்த்தேன். ஒன்றரை வருடம் மிகக்கடுமையாக உழைத்துள்ள சூர்யா, அவரின் அப்பா விஜய்சேதுபதிக்கு மேலும் மேலும் புகழ் சேர்ப்பார்”.

விஜய் சேதுபதி,
“அஞ்சு வருசத்துக்கு முன்பு என்னிடம் ஒரு கதை சொன்னார் அனல் அரசு. சில காரணங்களால் அதை பண்ணமுடியாமப் போச்சு. இந்தக் கதையைக் கூட சூர்யா தான் கேட்டு முடிவு பண்ணினான். நான் எதிலுமே தலையிடல, படத்தின் பூஜைக்கும் ஷூட்டிங்கிற்கும் கூட நான் போகல. அப்பப்ப… நல்லாருக்கியாடான்னு கேப்பேன். அவ்வளவு தான். இவனை ஸ்கூலில் சேர்க்கும் போது, இவன் பரிட்சை எழுதும் போது ஒருவித படபடப்பு இருக்கும். அதைப் போலத்தான் இந்த ஃபீனிக்ஸ் ரிலீசாகப் போவதை நினைத்து ஒருவித படபடப்பு. சூர்யாவின் வெற்றியால் என்னைவிட அதிகம் மகிழ்ச்சியடைவது அவனது அம்மா தான்”.
— மதுரை மாறன்