சாதி பார்க்கும் அரசு … ஆணவ கொலைகளுக்கு தனிச்சட்டம் ஏன் அவசியம் ? – எவிடன்ஸ் கதிர் !
கவின் ஆணவக்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும்; தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் 65 ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளதால், உடனடியாக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும் எவிடென்ஸ் கதிர் வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு தொடர்பாக எவிடென்ஸ் அமைப்பு நடத்திய கள ஆய்வுகள் குறித்து கதிர் அளித்த பேட்டியில்,
“கவின் கொலை சதியில் ஈடுபட்ட சுபாஷினியின் பெற்றோரை கைது செய்ய வேண்டும். படித்த இளைஞர் கூலிப்படையினர் செய்வது போல இந்த கொலையை செய்துள்ளார். கவின் குடும்பத்துக்கு 10 கோடி ரூபாய் சொத்து உள்ளது. படிப்பு உள்ளது. உயர்ந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார். இருந்தும் சாதி எப்படி இயங்கியிருக்கிறது என பாருங்கள். இதுவரை முதலமைச்சர் வெளிப்படையாக இதை கண்டிக்கவில்லை. அஜித் கொல்லப்பட்ட ஒரு மாதத்தில் கவின் கொல்லப்படுகிறார். அஜித் குடும்பத்திடம் சாரி கேட்ட முதல்வர் ஏன் இவர்களிடம் கேட்கவில்லை. நெல்லை காவல் ஆணையர் உள்ளிட்ட யாரும் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை. அஜித்தும், கவினும் ஒரே தரப்பு தான். ஆனால், அரசும் சமூகமும் இன்று சாதி பார்க்கிறது.

சுபாஷினியின் பெற்றோரை கைது செய்வதில் என்ன பிரச்சனை? எனக்கு இது தெரியாது என சுபாஷிணி சொன்னால், அவரும் குற்றம் செய்வதவராக கருதப்படுவார். காவல்துறை சார்ந்த குடும்பத்தில் இதுதான் முதல் ஆணவக்கொலை. அதனால் தான் வழக்கின் நேர்மையான விசாரணை கருதி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். கவினின் குடும்பத்திற்கு தெரியாமலேயே பிரேத பரிசோதனை செய்துள்ளனர். எனவே, நீதிபதி முன்னிலையில் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும். மாநில எஸ்.சி. எஸ்.டி. ஆணையம் இதுவரை விசாரிக்க வரவில்லை.

பாதிக்கப்பட்ட நபர்கள் மீது அரசின் கருணை கொஞ்சம் கூட இல்லை. ஆணவக்கொலை குற்றங்களுக்கு எதிராக தனிசட்ட வரைவினை ஏற்படுத்தி அவற்றினை சட்டமாக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் 65 ஆணவக்கொலை நடந்துள்ளது. எனவே, கண்டிப்பாக ஆணவகொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும். முதல்வர் ஸ்டாலின் 2019-ல் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது ஓசூர் நந்தீஷ் – சுவாதி கொலையின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனிச்சடம் இயற்றுவோம் என்றார். ஆனால், கடந்தாண்டு ஆணவ கொலைக்கு தனிச்சட்டம் தேவையில்லை என்கிறார். இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலின நபர்களாக இருந்தால் மட்டுமே அது பொருந்தும். பிற சாதிகளில் நடக்கும் ஆணவ கொலைகளுக்கு பொருந்தாது. இதற்காக தான் ஆணவ கொலைகளுக்கு தனிச்சட்டம் கேட்கிறோம்” என்றார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.