வெடிகுண்டு எல்லாம் கிடையாது … பட்டாசு தான் … போலீசார் தந்த விளக்கம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்தது நாட்டு வெடிகுண்டு கிடையாது – முதற்கட்ட விசாரணையில் வெடித்தது பட்டாசு என காவல்துறை விளக்கம்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் (12.08.2025) நாட்டுவெடி குண்டு வெடித்து பள்ளி மாணவர்கள் படுகாயம் என செய்திகள் வெளியானது.
இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் ஆகியோர் மேற்படி சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிக்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் அங்கு வெடித்தது பட்டாசு என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் (12.08.2025) வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே நாட்டு வெடிகுண்டு வெடித்தது என செய்திகள் பரவியதற்கு தூத்துக்குடி காவல்துறை மறுப்பு தெரிவித்து விளக்கம் அளிப்பதுடன், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில் இச்சம்பவம் தொடர்பான தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.
— மணிபாரதி