”திராவிட இயக்கத்துக்கு அடுத்து நாங்க தான்” சொல்கிறார் பா.இரஞ்சித்!
இயக்குனர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ சாய் தேவானந்த், சாய் வெங்கடேஸ்வரனின் ‘லேர்ன்& டெக்’ இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘தண்டகாரண்யம்’. செப்டம்பர் 19—ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகவுள்ள இப்படத்தை அதியன் ஆதிரை டைரக்ட் பண்ணியுள்ளார். இதில் ‘கெத்து’ வி.ஆர்.தினேஷ், கலையரசன், வின்ஸு சாம்,ரித்விகா, பாலசரவணன், ஷபீர் கல்லாரக்கல், சரண்யா ரவிச்சந்திரன், முத்துக்குமார், அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : பிரதீப் காளிராஜா, இசை ; ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டிங் : ஆர்.கே.செல்வா, ஆர்ட் டைரக்டர் ; த.இராமலிங்கம், பி.ஆர்.ஓ. : குணா.
‘தண்டகாரண்ய’த்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை க்ரீன்பார்க் ஓட்டலில் செப்டம்பர்.14-ஆம் தேதி மதியம் நடந்தது. மூன்று மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்-நடிகைகள், நீலம் புரொடக்ஷன்ஸில் டைரக்ட் பண்ணிய டைரக்டர்கள் என இருபத்தைந்துக்கும் மேற்பட்டோர் பேசினார்கள்.
டைரக்டர் அதியன் ஆதிரை பேசும் போது,
“மகாபாரதத்தில் பாஞ்சாலியை துச்சாதனன் துகிலுரிந்த போது, அங்கே இருந்த அனைவருமே அதைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்களே தவிர, துச்சாதனனை தடுத்து நிறுத்தவில்லை. பாஞ்சாலியும் “கிருஷ்ணா வா…வா…வந்து காப்பாத்து” எனக் கதறிய பின்பு தான் கடவுள் கிருஷ்ணர் வந்தார். இதைத் தான் பல தெருக்கூத்துகளிலும் நாடகங்களிலும் சினிமாக்களிலும் காட்டினார்கள்.
இந்தக் கதையில் முதலில் டைரக்டர் அமீர் நடிப்பதாகத் தான் இருந்தது. சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு தான் தினேஷ் உள்ளே வந்தார். ஆதிக்க வர்க்கத்திற்கு, அதிகார வர்க்கத்திற்கு எதிராக வலிமையான குரலை இந்தப் படம் ஒலிக்கும்” என்றார்.
தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் பா.இரஞ்சித்,
“நான் சினிமாவுக்கு வந்த போது நான்கு வருடங்கள் தான் தாக்குப் பிடிக்க முடியும் என நினைத்தேன். ஏன்னா எனது சினிமாக்கள் பேசும் அரசியல் அப்படி. ஆனால் மக்கள் என்னை ஆதரித்ததால் தொடர்ந்து இயங்குகிறேன். நான் எப்போதும் மக்களை நம்புவன். நான் படங்கள் தயாரிப்பது லாபத்திற்காக மட்டுமல்ல, எனது அரசியலைப் பேசுவதற்காக.
கொஞ்ச காலம் முன்பு சென்சாரில் இடதுசாரிகள் இருந்தார்கள். அதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் இப்போதோ வலதுசாரிகள் அதிகம் உள்ளே வந்த பிறகு அதிகமான குடைசல் கொடுக்கிறார்கள். அதையெல்லாம் மீறித்தான் சில படங்கள் வந்து கொண்டிருக்கின்றன்.
அய்ம்பது-அறுபது வருடங்களுக்கு முன்பு சினிமாக்கள் மூலம் திராவிட இயக்கம் சமூகநீதி அரசியலைப் பேசியது. அந்த அரசியலை இப்போது எனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் பேசுகிறோம். நாங்கள் பணம் சம்பாரிக்க வரவில்லை. சமூகத்தைச் சரிசெய்ய வேண்டும் என்ற முனைப்போடு வந்திருக்கிறோம். எங்களது சினிமாக்கள் தொடர்ந்து சமூகநீதி பேசிக் கொண்டே இருக்கும்”.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.