நகரங்களும் நரகல் குழி உயிர் பலிகளும்!
இறந்து 26 மணி நேரத்துக்கு மேல் ஆகுது. அவங்கள மரியாதையா நல்லடக்கம் செய்ய வேணாமா , கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்க அரசு அதிகாரிகளில் ஒருவர் கூட்டத்தினரிடம் பேசினார். கொஞ்சம் நிதானமாக கூட்டத்திலிருந்து ஒரு கேள்வி வந்தது. உயிரோடு இருக்கும் போது அவங்கள சாக்கடை நரகளுக்குள் இறக்கி அவமானப்படுத்தி சாகடித்த பிறகு, இப்ப செத்த மனிதனுக்கு என்ன சார் மரியாதை பண்ண போறீங்க? திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணியை சென்னை சுப்பையா கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. அந்த நிறுவனத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ரவி (45) பிரபாகரன் (37) இருவரும் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 22.9.2025 அன்று புதை வடிகால் செயல் திட்ட பணியை ட்ரெயல் ரன் ஒத்திகை பார்ப்பதற்கு மேலாளர் கந்தசாமி சூப்பரவைசர் இளவரசன் இருவரும் பிரபாகரனை திருவெறும்பூர் வார்டு 40 கார்மல் கார்டன் முதல் தெருவில் உள்ள புதை வடிகால் மேன் ஹோலில் இறங்கி அதில் உள்ளே அடைப்பை எடுக்க சொன்னதன் அடிப்படையில்
எவ்வித பாதுகாப்பு உபகரணமின்றி பிரபாகரன் உள்ளே இறங்கி சாக்கடை கழிவுகளை கைகளால் சுத்தம் செய்தார். இறங்கி வேலைக்கு குழிக்குள் சென்றவர் வெகு நேரமாகியும் ஆள் மேலே வரவில்லை. உள்ளே குழிக்குள் இறங்கிய பிரபாகரனுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.
கம்பெனி காரனின் அலட்சியத்தால் இரண்டாவது உயிரும் பலியானது
குழிக்குள் இறங்கிய தொழிலாளி வரவில்லை என்பதால் சற்று சுதாரித்து தீயணைப்பு துறைக்கு செய்தி தெரிவித்திருக்கலாம். ஆனால் விசயம் வெளியே தெரிய கூடாது என்பதற்காக அருகில் பணிபுரிந்து கொண்டிருந்த ரவியை, காண்ட்ராக்ட் சூப்பர்வைசர் இளவரசன் அவசர வேலை உடனே சம்பந்தப்பட்ட இடத்திற்கு வரவும் என செல்போனில் அழைத்துள்ளார். தொழிலாளி ரவி வந்தவுடன் உள்ளே சென்ற பிரபாகரன் வரவில்லை ஆகையால் நீ குழிக்குள் இறங்கி பிரபாகரனை மேலே கொண்டு வர வேண்டுமென கட்டளையிட்டதின் அடிப்படையில் ரவியும் கீழே குழிக்குள் இறங்க தயாராகி கொண்டிருக்கும்போது அக்கம்பக்கம் உள்ள பொதுமக்கள் உள்ளே போனவர் வரவில்லை.

இவரை ஏன் உள்ளே இறக்க வேண்டுமென கேட்ட பின்பும், சூப்பர்வைசர் மேனேஜர் இதை பொருட்படுத்தாமல் ரவியை இறங்க சொன்னதால் வேறு வழியின்றி உள்ளே புதை வடிகால் சாக்கடைக் குழிக்குள் இறங்கியவர் வரவில்லை விஷவாயு மரணம் நிலைமை தீவிரமான பின் வேறு வழி இல்லாமல் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையுடன் உள்ளே இருந்த பிரபாகரன் மற்றும் ரவியை மேலே கொண்டு வந்து சேர்த்தனர். பிறகுதான் அனைவருக்கும் புரிய வந்தது, இருவரும் விஷவாயு தாக்கி மரணம் அடைந்தனர் என்று. அருகில் இருந்த மேனேஜர் கந்தசாமி தலைமறைவானார். சூப்பர்வைசர் இளவரசனை காவல்துறை விசாரணை செய்ய தொடங்கியது.
பொய் வழக்கும் போலீசின் அரச விசுவாசம்
பத்திரிகைகளில் செய்தி சிறிதாய் வெளிவர ஆரம்பித்தது. விஷவாயு தாக்கி மரணம் என சில பத்திரிகைகள் செய்தியை வெளியிட்டனர். விஷவாயு மரணம் என்ற உண்மை செய்தியின் தோழர்களின் கவனத்திற்கு சென்றவுடன் சிபிஎம் , சி .ஐ.டி.யு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், மாதர் சங்கம் உடனடியாக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு படையெடுத்துச் சென்றனர். மாலை 6 மணி அளவில் இருந்து கூடிய தோழர்கள் நீதி கிடைக்கும் வரை சோர்வடையவே இல்லை.
காவல்துறை ஆய்வாளரை சந்தித்து இந்த விஷவாயு மரணத்திற்கு உரிய 2013 Manuval Scavinging Act வழக்கு பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தினோம். அப்படி ஒரு சட்டத்தையே அவர் அப்போதுதான் கேள்விப்பட்டது போல் இருந்தது அவரது முகம். விசாரித்ததில் பிஎன்எஸ் 106 (1) போடப்பட்டது தெரியவந்தது. ஒருவரின் அலட்சியமான செயலால் மற்றவர் இறக்க நேரிடுவது. இது பழைய ஐபிசி – 304 A ஆகும்.
உரிய வழக்கு பதியக்கோரி தீவிரமான போராட்டம்
காவல்துறையினர் தனது சூழ்ச்சிகரமான வேலைகளை துவங்கினர். மேலிடத்தில் எங்கிருந்து உத்தரவு வந்ததோ தெரியவில்லை? இறந்தவரின் உடலை குடும்பத்தாரின் ஒப்புதல் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனை நிர்வாகத்தை தயார் படுத்தினர். தகவல் அறிந்த தோழர்கள் பிரேத பரிசோதனை செய்யும் இடத்திற்கே குடும்பத்தினரை அழைத்துச் சென்று முற்றுகையிட்டோம். காவல்துறையினர் கையும், களவுமாக மாட்டிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் காவல்துறை ஆய்வாளர் பிரேத பரிசோதனை செய்ய உங்கள் ஒப்புதல் தேவையில்லை என ஆணவமாக சொன்னார். எவரும் நகர முடியாது என போராட்டத்தை தொடர்ந்ததால் வேறு வழியின்றி காவல்துறை அடிப்பணிந்தது.
பிறகுதான் குடும்ப உறுப்பினர்கள் அரசு நிர்வாகத்தின் சூழ்ச்சியை புரிந்து கொண்டு போராட்டத்தில் முழுமையாக பங்கேற்கிறோம், இறப்பிற்கு உரிய நியாயம் வேண்டுமென தோழர்களிடம் கூறினர். அடுத்த நாள் மதியம் ஆர்டிஓ , தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஒப்பந்த நிறுவனம்
முதலாளி வராமல் வழக்கறிஞர் பட்டாளம் வந்தது. பணத்தை வைத்து பேரம் பேசப்பட்டது. எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. தவறி விழுந்து இறந்து விட்டார் என கையெழுத்து போட்டு கொடுங்கள் பணம் கொடுக்கிறோம் என காண்ட்ராக்ட் தரப்பினர் கூறியதை அனைவரும் நிராகரித்தோம். பெரிய, பெரிய அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், அனைவரது வற்புறுத்தல்களையும் தோழர்கள் நிராகரித்து உறுதியாக இருந்து, இறுதியாக 2013 Manuval Scavanging Act -ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விஷவாயு மரணம் என கூறப்பட்டு திருச்சி மாநகராட்சி நிர்வாகம் 30 லட்சம் காசோலை வழங்கப்பட்டது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
என்ன செய்ய வேண்டும் 2013 Manuval Scavanging Act -ன்படி சக மனிதரை பாதாள சாக்கடைக்குள் இறக்கி வேலை செய்வது தடை செய்யப்பட்டது. அப்படி நம் கண் முன்னே இப்படிப்பட்ட குற்றம் நடக்கும் போது, கடந்து செல்லாமல் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும். அந்த குற்றத்தை தடுக்க வேண்டும்.
விஷவாயு மரணம் நடக்கும்போது காண்ட்ராக்ட் முதலாளிகள் தப்பி விடுகின்றனர். இந்த சட்டத்தின் அடிப்படையில் வேலையளிக்கும் முதன்மை அலுவலர், மாநகராட்சி ஆணையர், ஒப்பந்த முதலாளி, மேனேஜர், சூப்பர்வைசர் என வரிசைப்படி வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை சென்றால் தான் சக மனிதனை சாக்கடைக்குள் இறக்குவது குற்றம் என்பதை விட, தான் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் இந்த வேலையை தடுக்க முயற்சி எடுப்பார்கள். விஞ்ஞானம் என்றாலே விண்வெளி ஆராய்ச்சி, இஸ்ரோ, என வானத்தை நோக்கி பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் நடந்து போகும் பாதையில் Manhole Door வட்டமாக பாதாள சாக்கடை மூடி இருக்கும். அதன் வடிவமைப்பு மனிதன் உள்ளே இறங்கி சுத்தம் செய்ய வேண்டும் என்பதே. முதலில் இதன் வடிவமைப்பை மாற்ற வேண்டும். வளர்ந்த வெளிநாடுகளில் இதுபோன்ற விஷ வாயு மரணங்களை காண முடியவில்லை.

காரணம் அதன் வடிவமைப்பு மனிதனை உள்ளே இறங்கி வேலை செய்ய தேவையில்லை வெளியே இருந்தே நவீன இயந்திரங்கள் உதவியுடன் சரி செய்து விடலாம். ஏன் தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ இதுபோன்ற அறிவியல் நடைமுறைகள் வரவில்லை. மிக மலிவான கூலியில் வேலைக்கு வரும் சாதிய கட்டமைப்பின் கொடுமையை காரணம். பெரும்பாலும் பாதாள சாக்கடை விஷவாயு தாக்கி மரணம் அடைந்தவர்கள் பட்டியலில் தலித்துகளே அதிகம். அறிவியல் முதலாளிகளின் லாபத்தை பெருக்குவதிலேயே குறியாக இருக்கிறது. முதலாளிகளுக்கான கண்டுபிடிப்புகளாக அறிவியல் மாறிவிட்டது. அறிவியல் என்பது சக மனிதனின் வாழ்க்கையை எளிமையாக்க வேண்டும். சமூகநீதி ஆட்சியில் சக மனிதனை சாக்கடைக்குள் இறக்கி சுத்தம் செய்ய வைப்பது மானுடகுலத்துக்கே அவமானம். விஷவாயு மரணங்களை கணக்கில் வராமல் இருக்க பொய் வழக்குகள் போடுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.
இந்த கட்டுரையை நீங்கள் வாசிக்கும் நேரத்தில் இந்தியாவில் ஏதோ ஒரு இடத்தில் பாதாள சாக்கடைக்குள்ளே, கழிவுநீர் தொட்டிக்குள்ளே ஜாதிய ஒடுக்கு முறையின் காரணமாக யாரோ ஒருவர் நம் பார்வைக்குபட்டால் உடனடியாக தடுக்க முயல்வோம். தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதி எண் 281 -ல் சொன்னது போல இந்த வேலையில் இருந்து விடுதலையளிக்க உரிய அறிவியல் பூர்வமான முறையில் செயல்படுத்தி நவீன ரோபோ இயந்திரங்களை பயன்படுத்தி, சமூக நீதி ஆட்சியை நிலைநாட்ட வேண்டும். போராட்டத்தில் உறுதியாக நின்ற குடும்ப உறுப்பினர்கள், சிபி எம், சி.ஐ.டி.யு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தோழர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாறன்
சிஐடியு திருச்சி மாநகர மாவட்ட தலைவர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.