மகளிர் விடியல் பயண பேருந்துகள் வழித்தடம் நீட்டிப்பு! கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர்!
அரியலூர் மாவட்டம், சுத்தமல்லி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்ப)லிட் திருச்சி மண்டலம், சார்பில் த.குடிக்காடு, மற்றும் பூவந்திக்கொல்லை கிராமத்தில் 02 மகளிர் விடியல் பயண பேருந்துகள் வழித்தடத்தினை நீட்டிப்பு செய்து மற்றும் சுத்தமல்லி ஊராட்சியில் புறநகர் பேருந்து தடம் மாற்றம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மகளிர் விடியல் பயண பேருந்துகள் வழித்தட நீட்டிப்பு மற்றும் புறநகர் பேருந்து தடம் மாற்றம் செய்து துவக்கி வைத்து போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டம், தத்தனூர் குடிகாடு கிராமத்தில் ஜெயங்கொண்டம் கிளை சார்பில் மகளிர் விடியல் பயண நகரப் பேருந்து எண்.19A காலை 6.15 மணிக்கு விக்கிரமங்கலத்திலிருந்து வடகடல், குடிகாடு வழியாக ஜெயங்கொண்டத்திற்கும், மாலை 5.15 மணி அளவில் ஜெயங்கொண்டத்திலிருந்து குடிக்காடு, வடகடல் வழியாக விக்கிரமங்கலம் கிராமத்தில் இயங்கும் வகையில் வழித்தட நீட்டிப்பு செய்தும், பின்னர், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், பூவந்திகொல்லை கிராமத்தில் அரியலூர் கிளை மகளிர் விடியல் பயண நகரப்பேருந்து எண்.006A காலை 7.15 மணிக்கு அரியலூர் – இருகையூர் செல்லும் பேருந்து சுத்தமல்லி, கோட்டியால் நடை கார்குடி, பூவந்திகொல்லை தொட்டு இயக்கும் வகையிலும், அதனைத்தொடர்ந்து சுத்தமல்லி ஊராட்சியில் ஜெயங்கொண்டம் கிளை பேருந்து புறநகர் பேருந்து எண்.509F இரவு 20.30 மணி சென்னை கிளாம்பாக்கம் செல்லும் பேருந்தினை தா.பழுர் வழியாக சுத்தமல்லி வரை தடம் மாற்றம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையும், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. நடப்பு ஆண்டில் பொங்கல் பண்டிகையின் போது பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை இரண்டரை இலட்சமாகும். அதற்கான பணிகளை போக்குவரத்து துறை பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொண்டனர். அரசுப் பேருந்துகளின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதால் முன்பதிவு செய்து பயணிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் போக்குவரத்துத் துறை பொதுமக்களின் எதிர்பார்ப்பினை மிகச்சிறப்பாக பூர்த்தி செய்து வருகின்றது. கும்பகோணம் நவக்கிரக தலங்களுக்கு தனிப்பேருந்து மிகச்சிறப்பாக இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பொதுமக்கள் அப்பேருந்தில் பயணம் செய்து தங்களின் சிறப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
சென்னையில் சுற்றுலாத் தளங்களை பொதுமக்கள் பார்க்கும் வகையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் வின்டேஜ் பேருந்துகள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பேருந்துகளை போல வடிவமைத்து 10-க்கும் மேற்பட்ட இடங்களை குறிப்பாக அருங்காட்சியகம், மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களை எல்லாம் ஒருங்கிணைத்து சுற்றுவட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இப்பேருந்துகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மேலும் அந்த வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும். பேருந்துகள் விபத்திற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு அதனை தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு பணியாளர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இது தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது என மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், கும்பகோணம் நிர்வாக இயக்குநர் க.தசரதன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் பொது மேலாளர் டி.சதீஸ்குமார், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.