அப்பாவிகளின் உயிர்தான் அநியாயமா போகுது … சர்வீஸ் சாலைக்காக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் !
திருச்சி பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான சர்வீஸ் சாலை பணியை உடனடியாக துவங்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை பிப்-16 ஆம் தேதி முதலாக தொடங்கி நடத்தி வருகிறார்கள். சர்வீஸ் சாலை இல்லாத நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த, ஊனமுற்ற ஆயிரக்கணக்கான குடும்பங்களின் குரலாய் பட்டிணி கிடந்து கேட்கிறோம் என்பதாக போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
முதல்நாள் திருவெறும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியவர்கள், போலீசின் நெருக்கடி காரணமாக தற்போது திருச்சி மிளகுபாறையில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
இந்தப் போராட்டத்தின் பின்னணி குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர், பொறியாளர் செ.ராஜ்குமார் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு தரப்பினரும் அவரவர்களுக்கு உகந்த வழிமுறைகளில் தொடர்ந்து போராடி வருவதையும் ஆனாலும் அதிகாரிகள் தரப்பில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாகவும் மிக முக்கியமாக, சர்வீஸ் சாலை என்ற ஒன்றே இல்லாமல் எப்படி இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலை என்பதாக வரையறுத்தார்கள்? என்ற கேள்வியை இதன் வழியே எழுப்புகிறார். அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, அப்பாவிகளின் உயிர்தான் பறிபோகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மேலும், அந்த அறிக்கையில், ”திருச்சி மாவட்டம் தமிழ்நாட்டில் மிக முக்கியமான மத்திய மாவட்டமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் பன்முக எல்லைகளுக்கு செல்லும், போக்குவரத்து பெரும்பாலும் திருச்சியை கடந்து செல்ல வேண்டியதாக இருந்து வருகிறது. புதுக்கோட்டை, தஞ்சை, பெரம்பலூர், மதுரை, சேலம், திண்டுக்கல், கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களின் மாநில தேசிய சாலைகள் திருச்சியில் இணைகின்றன. இதில் திருச்சி தஞ்சையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 83 –இல், திருச்சி பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான 14.5 கி.மீ சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல், ஆயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பிடப்பட்ட சாலையின் இருபுறமும், இலட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். BHEL, OFT, HAPP, பொன்மலை ரயில்வே, தொழிற்சாலை, நூற்றுக்கணக்கான SIDCO தொழிற்சாலைகள், மேலும் NIT, SIT, UDC மற்றும் அரசு கலைக் கல்லூரிகள், அரசு ITI, MONTFORT, TRICHY PUBLIC SCHOOL, LITTLE FLOWER SCHOOL, RSK, BHEL MATRIC உள்ளிட்ட பல கல்வி அமைப்புகள், திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகம், துவாக்குடி நகராட்சி அலுவலகம், திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகம், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், துவாக்குடி, திருவெறும்பூர், பாய்லர், அரியமங்கலம் காவல் நிலையங்கள், துவாக்குடி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், 9 பெட்ரோல் பங்குகள், அரசு அலுவலகங்கள், திருவெறும்பூர் ரயில் நிலையம், அது போல் 25 -க்கும் மேற்பட்ட அரசு தனியார் வங்கிகள், 3 திரையரங்குகள், பல நூறு உணவங்கள், சிற்றுண்டி மற்றும் பல சூப்பர் மார்கெட்டுகள், பல்வேறு வணிக நிறுவனங்கள் அமைந்திருக்கிறது. தற்போது திருவெறும்பூருக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு அடிக்கல் நாட்டியிருக்கிறது.

மாணவர்கள் இளைஞர்கள் தொழிலாளர்கள் என வாழ்க்கை தேவைக்காக இந்த தேசிய நெடுஞ்சாலையை அன்றாடம் பயன்படுத்த வேண்டியதாக இருக்கிறது. இலட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இச்சாலைக்கான சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல், போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்த இயலாமலேயே பல நூறு உயிரிழப்புகளும், பல ஆயிர ஊனமும் ஏற்பட்டுருக்கிறது. பல குடும்பங்கள், குடும்பத்தின் ஆதாரமானவர்களை இழந்து நிர்கதியாய் நிற்கிறார்கள்.
பல ஆண்டுகளாக சர்வீஸ் சாலை அமைப்பதற்காக அப்பகுதி மக்களும் சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பும், அனைத்து அரசியல் கட்சிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த 2023 இறுதியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருச்சி மாவட்ட அமைச்சர்கள் K.N.நேரு , அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில், சாலையின் இருபுறமும் வசிக்கும் மக்களின் ஊர் சங்க பிரதிநிதிகளை அழைத்து நடத்திய ஆலோசனை கூட்டத்தில், சர்வீஸ் சாலை அமைப்பதற்கான நிதி அதிகம் தேவை, அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடும், ஒன்றிய அரசோடும் பேசி விரைவில் அமைப்போம் என்று உறுதியளித்தார்கள்.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ சர்வீஸ் சாலை அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் சர்வீஸ்சாலை மீட்பு கூட்டமைப்பு நிர்வாகிகள், CPI புறநகர் மாவட்டச் செயலாளர், விசிக மாவட்டச் செயலாளர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் தமிழ்நாட்டு முதல்வரின் முதன்மைச் செயலாளர் இடத்தில், கோரிக்கையை விளக்கி சர்வீஸ் சாலை வேண்டும் என்று தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
ஆனால், சர்வீஸ் சாலைக்கு கையகப்படுத்தப்பட வேண்டிய இடங்களில், புதிய கட்டடங்கள் வணிக நிறுவனங்கள் எழுப்பப்பட்டு வருவது கேள்வியை எழுப்பிவருகிறது. மேலும், 45 மீட்டர் அகல சாலை அமைத்திடல் வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல், சர்வீஸ் சாலைப்பணி கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. ஆகவே, சர்வீஸ் சாலைக்கான நிலத்தை கையகப்படுத்தி, விரைவில் சர்வீஸ் சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
அதனை வலியுறுத்தி 05.02.2026 நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட நிர்வாக குழு கூட்டத்தில், கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் தலைமையில் சர்வீஸ் சாலை பணி தொடங்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் பிப்ரவரி 16 2026 முதல் மேற்கொண்டு வருகிறோம்.” என்பதாக விரிவாகவே பதிவு செய்திருக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு








Comments are closed, but trackbacks and pingbacks are open.