என் சாதியை தெரிந்துகொள்ள அப்படி என்ன ஆர்வம் ?
‘சாதி என்ன?’ என்று கேட்பது குறித்த விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ் நாட்டில் யாருமே என்னைக் கேட்டதில்லை. காரணம் எளிது. என் பெயரை வைத்தே பெரும்பாலும் அனுமானித்து விட முடியும். ஹைதராபாத்தில் வசித்த போதும் பலராலும் என் சாதியை கணித்து விட முடிந்திருக்கிறது. இருப்பினும் கன்ஃபர்ம் செய்து கொள்வதற்காக கேட்பார்கள்.
வடக்கே இருப்பவர்களால் தமிழ்ப் பெயரை வைத்து அனுமானிக்க முடியாது என்பதால் நேரடியாகவே கேட்பார்கள். நான் தில்லி வந்து சேர்ந்த முதல் வாரமே மூன்று பேர் கேட்டார்கள். அதில் ஒருவர் என் அலுவலகத்தின் மேலாளர் வேறு. தொடர்ந்து அங்கே என் சாதி பேசுபொருளாக இருந்து கொண்டே வந்தது. எங்கள் வீட்டில் பிராமணரல்லாத பெண்மணி சமையல் வேலைக்கு வந்து கொண்டிருந்தார். அதையும் சுட்டிக் காட்டி எதிர்வீட்டுப் பாட்டி ஒருவர் ‘நீங்கள் பிராமணர்கள்தானே; ஏன் ஒரு சூத்திரப் பெண்மணியை சமைக்க வைக்கிறீர்கள்?’ என்று என்னிடம் புகாரே வைத்தார்!
வடக்கே யாருடைய பெயரையும் வைத்து அவர்கள் வர்ணத்தை அனுமானித்து விடுவது எளிது. எனக்குப் பல நேரங்களில் சாதிக் கேள்விக்கு பதில் அளிப்பதில் இருக்கும் தயக்கம் அதனால் கிடைக்கும் மரியாதையும் திறப்புகளும் காரணம். அவை என்னை அவமதிப்பது போல உணர்கிறேன்.
ஆனால், பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும்தான் இது வசதி. தலித்துகளுக்குப் பெரும் தொல்லை. சாதி இந்துக்களுக்கு பெயரை வைத்தே முஸ்லிம்களை ஒதுக்கி விட இயலுவதைப் போல தலித்துகளையும் பெயரை வைத்து ஒதுக்கி விடுவது எளிதாகவே இருக்கிறது. அதனால் பெயரில் சாதியைப் போடாமல் ‘குமார்’ என்று வைப்பதை தலித்துகளில் பலர் வழக்கமாகக் கொள்கிறார்கள். அஷுதோஷ் குமார், சாயா குமாரி, என்றெல்லாம் அங்கே பெயர்கள் புழங்கும்.
இதுதான் பிரச்சினை. இன்று வரை சாதிதான் இந்தியாவில் அனைத்தையும் தீர்மானிக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை. இறப்புக்குப் பின்னும் கூட எந்தப் பாதை வழியே நீங்கள் சுடுகாட்டுக்குப் போவது, எந்தச் சுடுகாட்டில் எரிபடுவது என்பதையும் தீர்மானிப்பது சாதிதான்.
சமீபத்திய சர்ச்சையில் சம்பந்தப்பட்டவர் விளக்கம் கொடுத்திருக்கிறார். அது உண்மையோ பொய்யோ, சாதி கேட்டால் பொங்குவார்கள் என்பதும் கேட்டதாக சொல்பவர் அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதுமே ஒரு சமூகம் முன்னேற முயன்று கொண்டுள்ளது என்பதற்கு சாட்சிகள். அது பாராட்ட வேண்டிய ஒன்று.
சோகம் என்னவெனில் தமிழ்நாட்டைத் தாண்டினால் கேட்பவருக்கு எந்த வெட்கமும் தேவையில்லை. பதில் சொல்பவருக்கும் கோபம் கொள்வதற்கு எந்த உரிமையும் இல்லை.
தெற்காசிய வரலாற்றில் மாபெரும் குரூரங்களுக்கு இந்து மதம் நேரடிக்காரணியாக இருந்திருக்கிறது. அதில் முதன்மையானது சாதிப் பாகுபாடு. மதம் மீண்டும் வலிமை கொள்ளும் போது இந்தக் குரூரங்களும் மீள்கட்டமைக்கப்படும்.
– ஸ்ரீதர் சுப்ரமணியம்








Comments are closed, but trackbacks and pingbacks are open.