நியோமேக்ஸ் : நீண்ட இழுபறிகளுக்குப் பின் நீதிமன்றம் சொன்ன குட்நியூஸ் !
நியோமேக்ஸ் ! ஆறுதலாக வந்து சேர்ந்த அறிவிப்பு!
நியோமேக்ஸ் மோசடி வழக்கு விவகாரத்தில், நீண்ட இழுபறிகளுக்கு பின் ஒருவழியாக முதற்கட்ட ஏல நடைமுறை அமுலுக்கு வந்திருக்கிறது. பிப்-24 அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், இதற்கான இறுதி வடிவம் பெற்றது.
இதுவரை நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் என்பதாக அடையாளம் கண்டறியப்பட்டு, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரால் வழக்கில் பிணைக்கப்பட்ட நிலங்களை ஏ,பி,சி.டி. என நான்கு வகைகளாக வகைப்படுத்தியிருக்கிறார்கள். இதில், தற்போது முதற்கட்டமாக, ஏ-வகைப்பாட்டில் உள்ள பிளாட்டுகளை பொது ஏலத்தில் விற்று காசாக்கி பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் வழங்க நீதிமன்றம் முன்வந்திருக்கிறது.
இதன்படி, பட்டியல் ஏ-வில் அடங்கிய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 31 ப்ராஜெக்டுகளில் உள்ள 11,138 பிளாட்டுகள் முதற்கட்டமாக பொது ஏலத்தில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இப்பொது ஏல நடைமுறை தொடர்பான விரிவான தகவல்களை கொண்ட பத்திரிகை அறிவிப்பு மார்ச்05 அன்று வெளியாகும். ஆங்கிலத்தில் தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, தமிழில் தினமணி, தினத்தந்தி, தினகரன், தினமலர் ஆகிய 7 தினசரிகளில் இந்த பொது அறிவிப்பு வெளியாகும். இந்த பொது அறிவிப்பில், எந்தெந்த ப்ராஜெக்ட், எந்தெந்த பிளாட்டுகள் எந்த தேதியில் ஏலத்துக்கு வருகிறது என்ற தகவல்களை கொண்டதாக இருக்கும். ஏலத்தில் பங்கேற்போர், ஏலத்தில் வரும் சொத்துக்களின் ஆவணங்கள் மற்றும் நேரிலும் சரிபார்த்து கொள்வதற்கும் நீதிமன்றம் வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் இப்பொது ஏலத்தை நடத்துவதற்கு பொறுப்பேற்றுள்ள மத்திய அரசின் எம்.எஸ்.டி.சி. இணையதளத்திலும் சொத்துக்களின் ஆவணங்களை சரிபார்க்கும் வகையில் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். வழக்கின் தகுதிவாய்ந்த அதிகாரியான பொருளாதாரக்குற்றப்பிரிவு எஸ்.பி. அலுவலகத்திலும், மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திலும் ஆவணங்களின் நகல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
நியோமேக்ஸில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களில், நீதிமன்றம் கெடு விதித்த தேதிக்குள்ளாக புகார் அளித்து புகார் வரிசை எண் பெற்றவர்கள் இந்த பொது ஏலத்தில் பங்கேற்கும் வகையில், அவர்களுக்கான இ.எம்.டி. கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிணை ரத்து தொடர்பான வழக்கில், எந்தவிதமான சட்ட சிக்கல்களும் எழாத வகையில் சாதுர்யமாகவும், அதேசமயத்தில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் குறைந்தபட்ச நிவாரணத்தையாவது உடனடியாக வழங்கியாக வேண்டுமென்ற முனைப்பில் இந்த வழக்கை நீதியரசர் பரதசக்ரவர்த்தி கையாண்டு வருவது பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இதுபோலவே, இன்னும் பல்வேறு வகைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு சொத்துக்களையும் அடையாளம் கண்டு, அவற்றையும் பொது ஏலத்தில் விட்டு முழு நிவாரணத்தையும் நீதிமன்றம் வழங்க முன்வர வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் ஏக்கம் நிறைந்த கோரிக்கையாக இருக்கிறது.
– அங்குசம் புலனாய்வுக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.