தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் மாநில நிர்வாகி திடீர் விலகல் – பின்னணி என்ன ?
தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் K.P.T (எ) K.P.பழனிவேல் பிள்ளை, சோழிய வேளாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும், தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் V.J. செந்தில் பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த விலகல் முடிவை எடுத்திருப்பதாகவும் பதிவிட்டிருப்பதுதான் பொதுவெளியில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
இந்நிலையில், K.P.பழனிவேல் பிள்ளையிடம் விளக்க கேட்க தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை ஏற்கவில்லை. தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் V.J. செந்திலிடம் அங்குசம் சார்பில் பேசினோம். “எந்த கருத்து வேறுபாடுகளோ, அல்லது சிக்கலோ எதுவுமே இல்லை. பழனிவேல் பிள்ளை உள்ளிட்டு எமது சமூதாயத்தினர் நான்கு ஐந்து பேர் தமிழகத்தின் பிரதான கட்சிகளிடம் இந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அணுகியிருந்தார்கள்.

அதன் அடிப்படையில், அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியையும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து எம் சமுதாய மக்களின் பிரச்சினைகள் குறித்த கோரிக்கைகளையெல்லாம் கொடுத்திருந்தார்கள். இந்நிலையில், இன்னும் இரண்டொரு நாளில் பிரதான கட்சியில் தேர்தலுக்கான சீட் ஒதுக்கி அறிவிப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், சம்பந்தபட்ட அரசியல் கட்சியின் வேண்டுகோள் மற்றும் ஒரு அரசியல் கட்சியின் சார்பில் தேர்தலில் பங்கேற்கும் நபர்கள், எமது சமுதாய சங்கத்தின் எந்த ஒரு பொறுப்பிலும் இருக்க முடியாது என்ற அடிப்படையிலும் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். நாங்கள் ஒரு சமுதாய அமைப்புதான். எங்களுக்கென்று தனி அரசியல் கட்சி எதுவும் கிடையாது. ஆனாலும், இந்தமுறை எப்படியும் ஒரு ஐந்து இடங்களில் எங்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடுவார்கள் என்பதே எங்களுக்கான ஒரு அங்கீகாரம் தானே?” என்கிறார், டாக்டர் செந்தில்.
– அங்குசம் செய்திப்பிரிவு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.