பனங்கள் இறக்கிய நபர்களை கைது செய்தது ஏன்? போலீசார் விளக்கம் !
சமயபுரம் காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக பனங்கள் இறக்கிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டவிவகாரம் தொடர்பாக, சமூக ஊடகங்களில் பொய் செய்திகள் பரப்பபட்டு வரும் நிலையில் திருச்சி மாவட்ட போலீசார் விளக்கம் அளித்துள்ளார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம். இ.கா.ப வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சக்திநகர் பகுதியில் சமயபுரம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் மதுவிலக்கு குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த போது அங்கு அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக பனைமரத்திலிருந்து 5 லிட்டர் மதிப்புள்ள பனங்கள்ளினை இறக்கி விற்பனை செய்து கொண்டிருந்த 1. துரைசாமி (59). த.பெ. செல்லப்பன். மண்ணச்சநல்லூர், 2. சின்னையன் (57).த.பெ.மாரிமுத்து. தொட்டியம், 3. கணேசன் (44), த.பெ.பன்னீர்செல்வம். மண்ணச்சநல்லூர், 4. சரோஜா (53), க.பெ. சின்னையன். தொட்டியம். ஆகிய நான்கு நபர்களை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் பனை மரத்திலிருந்துகள் இறக்கி விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்ததது.

இது சம்மந்தமாக சமயபுரம் காவல் நிலைய குற்ற எண். 97/2026, 4(1)(C), 4(1) (A) TNP – Act ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் A1 A2 மற்றும் A3 நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், மேற்படி பனங்கள் இறக்கிய நான்கு நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொது மக்களுக்கும். போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சமயபுரம் காவல் நிலையத்தின் முன்பு மறியலில் ஈடுபட்ட மணி, த.பெ.பழனிசாமி (பனையேறி பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகி), புதூர் உத்தமனூர், லால்குடி மற்றும் மணிகண்டன், த.பெ.பரமசிவம். கிழக்கு மாவட்ட தலைவர் (நாம் தமிழர் கட்சி), இனாம்சமயபுரம் லால்குடி ஆகியோர் தலைமையில் 55 பேர் மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மேற்படி நபர்கள் மீது சமயபுரம் காவல் நிலைய குற்ற எண். 98/2026, 189 (2), 292 BNS -Act ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகின்றனர். எனவே. சட்டவிரோதமாக பனங்கள்ளினை இறக்கி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்பதாக தெரிவித்திருக்கிறார்.
– அங்குசம் செய்திப்பிரிவு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.