ஒரு பயணியாக நான் அனுபவித்த கஷ்டம் !
இன்று நான் (28.03.2026) குளித்தலையிலிருந்து கேரளா அங்கமாலிக்குச் செல்ல காரைக்கால் – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (Tr. No: 16187) ரயிலில் முன்பதிவு செய்திருந்தேன். இரவு 8:50 மணிக்கு ரயில் வந்தபோது, எனது பெட்டி எந்த இடத்தில் நிற்கும் என்ற தெளிவான அறிவிப்பு அங்கு இல்லை.
டிஜிட்டல் கோச் பலகைகளும் இல்லாததால், ரயில் வந்தவுடன் பெட்டியைத் தேடி கையில் பைகளுடன் நடைமேடையின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஓட வேண்டியிருந்தது.
அங்கு என்னைப் போல முதியவர்களும், குழந்தைகளும் அந்த இருட்டில் பெட்டியைத் தேடி பதற்றத்துடன் ஓடுவதைப் பார்த்தபோது இது ஒரு பெரிய பாதுகாப்புப் பிரச்சினை என்பதை உணர்ந்தேன். இந்தச் சிரமத்தை உடனே சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
பெட்டிகள் நிற்கும் இடத்தை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். நடைமேடைகளில் டிஜிட்டல் கோச் டிஸ்ப்ளே போர்டுகள் அமைக்க வேண்டும் என விரிவான கோரிக்கைகளை வைத்தேன். எனது புகாரைப் பரிசீலித்த ரயில்வே அதிகாரிகள் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்கள்.
“முதல் கட்டமாக, இனி குளித்தலை ரயில் நிலையத்தில் ரயில்கள் வரும்போது ஒலிபெருக்கிமூலம் எந்தெந்தப் பெட்டிகள் எந்தெந்த இடங்களில் நிற்கும் என்ற தகவல் தெளிவாகக் கூறப்படும்” என்று உறுதியளித்துள்ளனர். அறிவிப்பு என்பது ஒரு ஆரம்பம்தான். குளித்தலை ரயில் நிலையத்தில் நிரந்தரமான டிஜிட்டல் கோச் டிஸ்ப்ளே போர்டுகள் வரும் வரை நமது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒரு பயணியாக நான் அனுபவித்த கஷ்டம் இனி மற்றவர்களுக்கு இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.