வளர்ப்பு நாய் தானே என்ற அலட்சியத்தால் பறிபோன உயிர் – எச்சரிக்கை !!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே ரேபீஸ் நோய் தாக்கி ஒன்பதாம் வகுப்பு மாணவி செல்வ சுகாசினி உயிரிழந்த விவகாரம் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இன்று நம்மில் பலரும் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு பிரியப்படுகிறோம். குறிப்பாக, நாய்களை வீட்டில் வளர்ப்பதை கௌரவம் சார்ந்த விசயமாகவே பார்க்கப் பழகியிருக்கிறோம். சில இலட்சங்களில் விலைபோகும் செல்ல நாய்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளை வீட்டில் ஒரு அங்கத்தினர் போலவே, அளவளாவுவதும் பொழுதுபோக்குகளில் ஒன்றாகிவிட்டது.

இதுபோலத்தான், மாணவி செல்வ சுஹாசினியும் தனது வீட்டில் ஆசையாய் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்தாள். இரண்டு மாதத்திற்கு முன்பு மாணவி செல்வ சுஹாசினி தனது வீட்டில் வளர்ப்பு நாயுடன் கொஞ்சி விளையாடிய போது அவரது வளர்ப்பு நாய் நகத்தால் கீறிய நிலையில், தடுப்பூசி எதுவும் செலுத்திக் கொள்ளாத செல்வ சுஹாசினியின் உடல் முழுவதும் ராபிஸ் நோய் பரவி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மார்ச் 30 ஆம் தேதி உயிரிழந்தார். நாய் அதன் காலை வருடியபோது, நகங்களில் ஒட்டிருந்த உமிழ்நீர், கீறல் மூலம் மாணவியின் உடலுக்கு சென்றதால் ரேபிஸ் பரவியதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மாணவி சுஹாசினி உயிரிழந்த நிலையில் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல், அரசே தகனம் செய்தது. தெருநாய்கள்தான் பிரச்சினை, வளர்ப்பு நாய்தானே ஒன்னும் பண்ணாது என்ற மனநிலை ஆபத்தானது என்று எச்சரிக்கிறது, இந்த துயர சம்பவம்.
– செ.து.நிறைமொழி








Comments are closed, but trackbacks and pingbacks are open.