கடனுக்காக அணுகியவரை ஏமாற்றி பணம் பறித்த அதிகாரி ! நுகர்வோர் நீதிமன்றம் காட்டிய அதிரடி !
அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறுவதற்கு ஆயிரத்தெட்டு வழிமுறைகளை கறாராக பின்பற்றுவார்கள். அதையெல்லாம் நம்மால் முறையாக கொடுக்க முடியாது என்று அஞ்சியேதான், பலரும் அவசரத் தேவைக்கு தனியார் கடன் நிறுவனங்களை நாடுகின்றனர். பெரிய அளவுக்கு டாக்குமெண்டுகளை அவர்கள் கெடுபிடியாக கேட்பதில்லை என்றாலும், பல்வேறு கட்டணங்களை குறிப்பிட்டு வசூலிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். கடன் தேவைக்காக அணுகுபவர்களும் அலைச்சல் இல்லாமல், கடன் கிடைத்தால் சரிதான் என்று கூடுதலாக ஆனாலும், வட்டி சற்றே அதிகம் என்றாலும் அவர்கள் கேட்கும் காசை கொடுத்து கடன் பெறுகின்றனர்.
இதுபோல, வீட்டை புணரமைப்பதற்காக தனியார் நிறுவனம் ஒன்றில் கடனுக்காக அணுகியவரை ஏமாற்றி பணம் பறித்த விவகாரத்தில் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது, நுகர்வோர் நீதிமன்றம்.
என்ன நடந்தது – வழக்கின் பின்னணி ?
திருச்சி EB ரோடு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் ஶ்ரீரங்கத்தில் உள்ள டாடா கேபிடல் ஹவுசிங் கடன் நிறுவனத்தில், தனது வீட்டின் மேல்மாடி கட்டும் பொருட்டு கடன் நிதிஉதவி பெற விண்ணப்பித்துள்ளார். ஆவணங்களை பெற்ற அந்நிறுவன லோன் அதிகாரி புராசசிங் பீஸ், மதிப்பீட்டிற்காக பீஸ், லீகல் பீஸ் என சுமார் ரூ 41,800 ஐ கூகுள் பே மூலம் பெற்றுள்ளார். பின்னர் கடன் பாபுவிற்கு கிடைத்தது. பின்னர் தற்செயலாக லோன் அக்கவுண்ட் ஸட்டேட்மெண்ட் பெற்று பார்த்த போது லோன் அதிகாரி ஜிபேயில் பெற்ற தொகை அனைத்தும் கடன் கணக்கில் சேர்க்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்து விசாரித்த போது, அது உங்களுக்கும் லோன் அதிகாரிக்கும் இடையேயான தனிப்பட்ட விவகாரம் என கடன் நிறுவன அதிகாரி பதில் அளித்துள்ளர். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பாபு திருச்சி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார். மனுதாரருக்காக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெகன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த தலைவர் சேகர் தலைமையிலான நுகர்வோர் நீதிமன்றம் டாடா நிறுவனத்தின் ஊழியர் செய்த மோசடிக்கு நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றதுடன் பாபுவிடம் பெற்ற ரூ.41,800/- ஐ திரும்ப செலுத்த வேண்டும் என்றதுடன் ரூ.1,00,000/- மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், மேலும், வழக்கு செலவுத் தொகையாக 10,000 வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறது.
— அங்குசம் செய்திப்பிரிவு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.