திருச்சி துறையூரில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமி ! கமுக்கமாக முடிக்கப்பட்ட விவகாரம் !

0

திருச்சி துறையூரில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமி ! கமுக்கமாக முடிக்கப்பட்ட விவகாரம் ! புதுச்சேரியில் வெறும் 9 வயதேயான சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, நான்கு நாட்களுக்குப் பிறகு சாக்கடை ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பாதக சம்பவத்தில் தொடர்புடைய 19 வயதேயான கருணாஸ் மற்றும் 60 வயதை நெருங்கிய விவேகானந்தன் ஆகியோர் போக்சோ-வில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

” புதுச்சேரியில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருவதை தேசிய குற்ற ஆவண மைய அறிக்கை காட்டுகிறது. 2020 ஆம் ஆண்டு 71 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் 2021 இல் 122 ஆக உயர்ந்து 2022 இல் அது 139 ஆக அதிகரித்தது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. புதுச்சேரியில் பெருகிவரும் போதைப்பொருள் நடமாட்டம் அதற்கு முதன்மையான காரணம் எனக் கூறப்படுகிறது.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்த புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு ரங்கசாமி அவர்கள் சிறப்புத் திட்டம் ஒன்றை அறிவிக்கவேண்டும்.” என்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார், விசிகவை சேர்ந்த எம்.பி. ரவிக்குமார். புதுச்சேரியில் என்றில்லை, நாடெங்கிலும் இதுபோன்று 10 வயதிற்கும் கீழான குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறத்தான் செய்கின்றன. இவற்றுள் பல சம்பவங்கள் போலீசு வழக்காகக்கூட ஆவதில்லை என்பதுதான் துயரமானது.

புதுச்சேரி சம்பவத்தையடுத்து, செங்கல்பட்டு, வல்லாஞ்சேரி அருகே தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. பயிலும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர்கள் ராசையா (31), காயேஷ் குமார் (40) ஆகியோர் போக்சோவில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

- Advertisement -

துறையூர்
துறையூர்

விளையாட்டு சொல்லித் தருவதாக சொல்லி இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று தொல்லை அளித்த தகவல் பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்ற பிறகும்கூட, சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் தரப்பிலிருந்து போராட்டம் நடத்தியபிறகே இந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் துறையூர் நடராஜன் காலனி முத்துநகரில் 5 வயது சிறுமியை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக ஒரு தகவல் அதிர்ச்சியளிக்கிறது. சம்பவம் நடைபெற்று 20 நாட்களாகியும் போலீசு புகார் ஆகாமலேயே உள்ளூர் ஆட்களை வைத்தே கமுக்கமாக மூடி மறைத்துவிட்டார்கள் என்பது மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வேலை பார்க்கும் திருமணம் ஆகாத 23 இளம் வயது வாலிபர் இந்தக் குற்றத்தை இழைத்திருப்பதோடு, தற்போது தலைமறைவாகிவிட்டான் என்கிறார்கள். அவனது சகோதரர்கள் லோக்கல் ஏரியாவில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்துக்கு பெயர் போனவர்கள் என்றும் சொல்கிறார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி துறையூர் ஜி.எச்.இல் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறாள். உள்ளூர் ஆட்கள் தலையிட்டு, போலீசு கேசுனு ஆகாமல் உள்ளூர் பஞ்சாயத்து பேசி முடித்து வைத்துவிட்டதாக சொல்கிறார்கள்.

4 bismi svs

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் பிழைப்புக்காக துறையூருக்கு வந்தே இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது என்கிறார்கள். பிழைக்க வந்த இடத்தில் லோக்கல் ஆட்களோடு மோதவும் முடியாமல்; போலீசு கேசுனு போனா ஊரில் அசிங்கமாகிவிடும் என்றும் வேறு வழியின்றி விவகாரத்தை அப்படியே கைவிட சம்மதித்திருக்கின்றனர்.

அதே பகுதியிலுள்ள முத்துமாரியம்மன் கோயிலில் வைத்துதான் பஞ்சாயத்து நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இழப்பீடாக அந்த இளைஞர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட முப்பதாயிரம் ரூபாயை அப்படியே, கோயில் உண்டியலில் போட்டுவிட்டு, அச்சிறுமியின் பெற்றோர்கள் கிளம்பிவிட்டதாகவும் சொல்கிறார்கள். லோக்கல் போலீசு, எஸ்.பி. போலீசு, டி.எஸ்.பி. அளவில் இந்த விசயம் தெரியும். தெரிந்தும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் புகார் கொடுக்காமல் நாங்கள் என்ன செய்ய முடியும்? என்பதாக போலீசாரும் ஒதுங்கிக் கொண்டதாக சொல்கிறார்கள்.

துறையூர் காவல்நிலையம்
துறையூர் காவல்நிலையம்

போலீசு நிலையம் வந்து கம்ப்ளையிண்ட் கொடுக்கவில்லை என்பதற்காக, நடைபெற்ற சம்பவம் இல்லை என்று ஆகிவிடுமா? அதிலும் குறிப்பாக, தற்போது இந்த குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் அந்த இளைஞர் இதற்கு முன்னரும் இதேபோன்று சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இரண்டுமுறை சிக்கியிருக்கிறான் என்று கூறப்படும் நிலையில் போலீசு தரப்பில் எப்படி நடவடிக்கை எதுவுமின்றி சுலபமாக தப்பிக்க விட்டார்கள் என்ற கேள்வி நம் முன் எழுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் பேசினோம். “நீங்கள் குறிப்பிடும் சம்பவம் குறித்து எந்த புகாரும் இல்லை. எங்கள் கவனத்திற்கு வந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்திருப்போம்.” என்கிறார்.

”தலைநகரத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த அதிகாரி, திருச்சி மாநகருக்குப் பொறுப்பான அதிகாரியாக இருந்த சமயத்தில், காதலனுடன் வெளியில் சென்ற கல்லூரி பெண்ணை கடத்தி பலவந்தமாக பாலியல் வன்முறைக்குள்ளாக்கி, அரைநிர்வாணமாக நகரில் முக்கிய பேருந்து நிலையத்தின் அருகே வீசிவிட்ட சென்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் புகார் தெரிவிக்க முன்வரவில்லை.

ஆனாலும், அந்தக் குற்றத்தில் தொடர்புடைய நபர் மறுநாள் டயரில் சாராயம் வைத்து கடத்திய தான வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் குண்டர் சட்டத்தின் கீழும் சிறைப்படுத்தப்பட்டார். அவரைப்போன்று துணிச்சலாக நடவடிக்கை எடுக்கும் போலீசு உயர் அதிகாரிகள் இப்போது மலிந்துவிட்டார்கள்.” என்பதாக குறிப்பிடுகிறார், திருச்சியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.

– அங்குசம் புலனாய்வுக்குழு.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.