“டைரக்டருடன் நிஜ சண்டை போட்ட ‘போர்’ ஹீரோயின் !

“டைரக்டருடன் நிஜ சண்டை போட்ட ‘போர்’ ஹீரோயின்! ‘சைத்தான்’, ‘டேவிட்’, ‘வாஷிர்’, ‘ஷோலோ’ போன்ற படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் படம் ‘போர்’. டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ் ஹிந்தி என இரட்டை மொழிகளில் வரும் மார்ச் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கிறது. ‘போர்’ திரைப்படத்தை T Series மற்றும் Roox Media இணைந்து தயாரித்திருக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் வெளியீடு பிப்ரவரி 26-ஆம் தேதி திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், கலந்து கொண்டனர். நிகழ்வில்
Roox Media தயாரிப்பாளர் மது அலெக்ஸ் பேசியதாவது
“இது எனக்கு தயாரிப்பாளராக முதல் படம். முதல் படத்திலேயே T – Series நிறுவனத்துடன் இணைந்து இருப்பது சந்தோஷம் அளிக்கிறது. நான் இந்த நிகழ்வில் சிலருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். முதலில் கடவுளுக்கும், என் குடும்பத்திற்கும், என் நண்பர்களுக்கும் நன்றிகள். இயக்குநர் பிஜோய் நம்பியார் என் நண்பர் தான். அவருக்கும் நன்றிகள். T – Series தயாரிப்பு நிர்வாகத்தினருக்கு நன்றி. இப்படத்தில் சிறப்பாக ஒத்துழைப்புக் கொடுத்து நடித்த நடிகர் நடிகைகளுக்கு நன்றி. இந்தக் குழு ஒரு இளமையும் அர்ப்பணிப்புணர்வும் புதுமையும் கொண்ட குழு. டிரைலர் காட்சிகளில் நீங்களே பார்த்திருப்பீர்கள் படம் எவ்வளவு இளமையாகவும் சிறப்பாகவும் வந்திருக்கிறது என்று. இரண்டு படங்களுக்கு போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது. இரண்டு படங்கள் புரொடெக்ஷனில் இருக்கின்றன. Roox Media நிறுவனமானது சென்னையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் படத் தயாரிப்பு நிறுவனமாகும். இதன் தலைமையிடம் யு.எஸ்-ல் இருக்கிறது. எங்கள் திரைப்படம் இளம் தலைமுறையை குறி வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ஆகும். அதனால் எங்கள் படத்தை இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் எடுத்துச் செல்லுங்கள். எங்கள் படத்திற்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஆதரவு தாருங்கள் என்று கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன் நன்றி” என்றார்.

நாயகி டி.ஜே.பானு பேசுகையில் “நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இந்த மேடையில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இரு மொழிகளில் உருவாகி இருக்கும் போர் திரைப்படத்தில் இரண்டு மொழிகளிலும் நான் நடித்திருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். முதலில் இரு மொழிகளிலும் எப்படி நடிப்பது என்கின்ற தயக்கம் சிறிது இருந்தது. இயக்குநர் பிஜோய் நம்பியார் தான் எனக்கு நம்பிக்கையும் ஆதரவும் கொடுத்தார். நன்றாக உழைத்து இரு மொழிகளிலும் படத்தை நாங்கள் உருவாக்கிவிட்டோம். நீங்கள் தான் படத்தைப் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் இப்படத்திற்கு சிறப்பான ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
நாயகி சஞ்சனா நடராஜன் பேசியதாவது, “ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் எங்களுக்கு மிகச் சிறந்த ஒத்துழைப்பைக் கொடுத்து வருகிறீர்கள். அதற்காக பிரத்யேக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ”போர்” திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். எல்லோரும் இதைத்தான் சொல்வார்கள். இருப்பினும் நான் ஏன் சொல்கின்றேன் என்றால் அதற்கு தனிப்பட்ட சில காரணங்கள் இருக்கிறது. முதலில் படத்தின் இயக்குநர் பிஜோய் நம்பியார் எனக்கு மிகப்பெரிய ஆஃபர் கொடுத்தார். என்னுடைய கேரக்டரை மட்டும் சொல்லாமல், படத்தில் வரும் இரண்டு கேரக்டரையும் என்னிடம் டீட்டெயில் ஆக விளக்கினார். நான் கதை கேட்கும் போது, படத்தில் இப்பொழுது எந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேனோ அந்தக் கதாபாத்திரத்தைத் தான் பின் தொடர்ந்தேன். ஆனால் கதை கூறிவிட்டு அதற்கு நேர் எதிர்கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் கூறினார். நான் விடாப்பிடியாக சண்டை போட்டு அந்தக் கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்து அந்தகேரக்டரில் நடித்து முடித்துவிட்டேன். ஜகமே தந்திரம் மற்றும் சார்பட்டா பரம்பரையில் பார்க்காத சஞ்சனாவை நீங்கள் நிச்சயமாக இப்படத்தில் பார்ப்பீர்கள் என்று உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.
படத்தில் நாயகர்களாக நடித்திருக்கும் இருவரும் எதிர் எதிர் கேரக்டர். காளிதாஸ் பேசிக்கொண்டே இருப்பார். அர்ஜூன் பேசவே மாட்டார். பானு எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். எனக்கு இப்படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. பிஜோய் நம்பியார் இப்படத்தினை மிகச்சிறப்பாக எடுத்திருக்கிறார். கதை, திரைக்கதை, காட்சி அமைப்புகள் எல்லாமே சிறப்பாக இருக்கிறது.
இயக்குநர் பிஜோய் நம்பியார் “போர் திரைப்படம் ஒரு நேரடியான தமிழ்ப்படம் எடுக்க வேண்டும் என்பதற்கான என்னுடைய மூன்றாவது முயற்சி ஆகும். ஷோலோ திரைப்படத்தையும் அந்த எண்ணத்தில் தான் உருவாக்கினேன். ஆனால் அதை தியேட்டர்களில் வெளியிட முடியாமல் போயிற்று. பந்த் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் வந்து அதை தடை செய்துவிட்டது. ”போர்” திரைப்படம் ஒரு முழுமையான தமிழ்ப்படம். இதில் நடித்திருக்கும் முக்கிய நடிகர்கள் மற்றும் துணை நடிகர்கள் அனைவருமே தமிழ் தெரிந்தவர்கள். தமிழ் வெர்ஸனை மிகச் சிறப்பாக உருவாக்க எனக்கு ஸ்ரீகாந்த் உதவினார்.

இது ஒரு கலப்படமற்ற முழுத் தமிழ்ததிரைப்படம். கல்லூரி கால வாழ்க்கைதொடர்பான திரைப்படம். எனக்கு எப்போதுமே கல்லூரி தொடர்பான கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் உண்டு. இப்படம் முழுக்க முழுக்க குறிப்பாக கல்லூரி செல்லும் இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம். தமிழ்த் திரை உலகிற்குள் ஒரு தமிழ் திரைப்படத்தைக் கொண்டு நுழைய வேண்டும். தமிழ் பார்வையாளர்கள் என்னை ஒரு தமிழ் இயக்குநராகவே பார்க்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்படும் மூன்றாவது முயற்சி.
முதலில் இப்படத்தை மலையாளத்தில் எடுக்க வேண்டும் என்று தான் எண்ணினேன். பிறகு தமிழ் மற்றும் இந்தியில் எடுத்தால் சரியாக இருக்கும் என்று தோன்றியது. எனக்கு எப்போதும் தமிழ் வார்த்தைகளின் மீதும் அந்த ஒலி வடிவங்கள் மீதும், தமிழ் மொழியின் மீதும் ஒரு மயக்கம், காதல் உண்டு. இப்படத்தில் தமிழ் வடிவத்திற்கான வசனங்கள் மிகுந்த கவித்துவத்துவத்துடன் வந்திருப்பதாகத் தோன்றுகிறது. போர் திரைப்படத்திற்காக எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு நல்கிய நடிகர் நடிகைகள் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் ஒரு படத்தை உருவாக்கும் போது நடிகர் நடிகைகளுக்கான சிக்கல்கள் அதிகம். அதைப் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்த நடிகர் நடிகைகளுக்கும் எங்கள் தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றிகள்.
இரண்டு மொழிகளில் இப்படம் எடுக்கப்பட்டாலும் கதையில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு மொழிகளிலும் ஒரே கதை தான். போர் கல்லூரி தொடர்பான கதை என்றாலும் கூட ஏன் போர் என்கின்ற தலைப்பை தேர்வு செய்தோம் என்பது சுவாரஸ்யமானது. “பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, ஒரு போர்க்களக் காட்சியில் சண்டைக்காட்சி இயக்குநர் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக வந்த தெலுங்கு நடிகர் நடிகைகளிடம் மைக்கில் ‘இது போர், போர், போர்” அந்த முகபாவனையுடன் நில்லுங்கள், இது போர் போர்” என்று சத்தமாகக் கத்திக் கொண்டிருந்தார். எனக்கு அது மனதில் பதிந்துவிட்டது. உடனே என் நண்பரைக் கூப்பிட்டு அந்த டைட்டிலை பதிவு செய்யச் சொன்னேன். இரண்டு எதிர் எதிர் கதாபாத்திரத்தின் யுத்தத்திற்கு போர் என்கின்ற தலைப்பு சரியாக இருக்கும் என்று தோன்றியது” என்றார்.
நாயகன் அர்ஜூன் தாஸ் பேசும் போது, “இப்படத்தில் வாய்ப்புக் கொடுத்த பிஜோய் நம்பியார் அவர்களுக்கு என் முதல் நன்றி. எனக்கு இப்படத்தின் கதையை ஒரு ஹோட்டலில் வைத்து தான் கூறினார். அதற்கு முன்னரே காளிதாஸ் படத்தில் புக் ஆகி இருந்தார். படப்பிடிப்பின் போது இயக்குநர் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். பொதுவாக இரு மொழிகளில் ஒரு படத்தின் சூட்டிங் போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு மொழியில் நடிப்பவர்களுக்கு பிற மொழியில் எடுக்கப்பட்ட காட்சிகளைக் காட்டமாட்டார்கள். ஆனால் பிஜோய் எங்களுக்கு அதையும் காட்டிவிட்டு இயல்பாக நடிக்கச் சொன்னார். படத்தில் எங்கள் அனைவருக்கும் பேருதவியாக இருந்த உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. காளிதாஸ் சூட்டிங்கில் இருப்பதால் இங்கு வர முடியவில்லை. அவருக்காக நான் உங்களிடம் மன்னிப்பும் நன்றியும் கேட்டுக் கொள்கிறேன்.
போர் திரைப்படம் ஒரு கல்லூரி கால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். கொண்டாட்டத்திற்கான திரைப்படம், நட்பும் படத்தில் சிறிய அளவில் இருக்கிறது. வேறு வேறு விதத்திலான உணர்வுகள் படத்தில் கொட்டிக்கிடக்கிறது. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த தயாரிப்பாளர் மது சாருக்கு நன்றி. T Series குழுவினருக்கு நன்றி. பிரத்யேக உதவி புரிந்த சிகை கலைஞர்கள், ஒப்பனைக் கலைஞர்களுக்கு நன்றிகள்.

காளிதாஸ் ஜெயராமுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் படப்பிடிப்பு தளத்தில் டேக் செல்வதற்கு முன்பு வரை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான். ரொம்பவே சேட்டை செய்வான். மற்றபடி மிகச்சிறந்த நண்பன். காளிதாஸுடன் சேர்ந்து நடித்த அனுபவம் மகிழ்ச்சியானது’ என்றார்.