‘அஃகேனம்’னா என்ன அர்த்தம்? விளக்கம் சொன்ன டைரக்டர்! புதியவர்களை ஆதரித்த அருண்பாண்டியன்!
‘இன்னுமா என்னை நல்லவன்னு நம்பிகிட்டு இருக்கீங்க…’ – அருண் பாண்டியன்
‘ஏ & பி குரூப்ஸ் அருண்பாண்டியன் தயாரிப்பில், அவரது மகள் கீர்த்தி பாண்டியன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘அஃகேனம். புதியவரான கே.உதய் டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தின் திரைக்கதையை அருண்பாண்டியன் எழுதி, படத்தின் ஸ்ட்ராங் கேரக்டரிலும் நடித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் கோவிந்தராஜன், இசையமைப்பாளர் பரத் வீரராகவன், எடிட்டர் தேவத்யன், ஆர்ட் டைரக்டர் ராஜா உட்பட அனைவருமே டைரக்டர் உதய் குறும்படங்கள் இயக்கிய போது அவருடன் பணிபுரிந்தவர்கள்.
அந்த டீமில் இருந்த அனைவரையும் ஆதரித்து, அவர்களின் சினிமா வாழ்க்கைக்கு அடித்தளம் போட்டுள்ளார் சீனியர் நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன். வரும் ஜூலை.04—ஆம் தேதி ரிலீசாகும் ‘அஃகேனம்’ படத்தின் டிரைலர் & பாடல்கள் வெளியீட்டு விழா, ஜூன்.14—ஆம் தேதி மதியம் சென்னை பிரசாத் லேப்பில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசியோர்….
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா,
“மேற்கத்திய இசை, ராக் இசை, நாட்டார் இசை, செவ்வியல் இசை என வெவ்வேறு வகையிலான இசைவடிவம் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. முற்றிலும் புதியவர்களை அறிமுகப்படுத்திய அருண்பாண்டியனுக்கு ரொம்பவே துணிச்சலான மனசு”.
பாடலாசியர் மோகன்ராஜன்,
“ஊமை விழிகள் படத்தை ரிலீஸ் பண்ணுவதற்குள் பட்ட கஷ்டங்களை என்னிடம் அருண்பாண்டியன் சொன்னார். அதையே கதையாக எழுதி படமாகவும் எடுக்கலாம். அவ்வளவு த்ரில்லிங் சம்பவங்கள் அப்போது நடந்துள்ளன”.
இசையமைப்பாளர் பரத் வீரராகவன்,
“எனக்கு இசை கற்றுக் கொடுத்த குருமார்களுக்கும் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக்கிய அருண்பாண்டியன் சாருக்கும் மிக்க நன்றி. இவரின் ஆதரவினால் தான் பல இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற முடிந்தது. நாங்கள் பொறுப்பை உணர்ந்து கடினமாக உழைத்துள்ளோம்”.
இயக்குனர் கே.உதய்,
“எங்களது குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்வளித்துள்ள தயாரிப்பாளர் அருண்பாண்டியன் சாருக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த கீர்த்திமேடமுக்கும் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்தி மேடம் தான் முதலில் கதையைக் கேட்டார். குறும்படமாகவே கதையைச் சொன்னேன். அதன் பின் நடந்ததெல்லாம் நல்லதாக நடந்தது. இந்தக் கதையில் வரும் இந்திரா கேரக்டரில் மிக நேர்த்தியாக பொருந்திவிட்டார் கீர்த்தி. இந்தக் கதைக்குள் நானும் வருவேன்பா பரவாயில்லையா?ன்னு அருண்பாண்டியன் கேட்டதும் ஷாக் ஆகிட்டேன். என்னிடம் அவர் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. 45 வருட சினிமா அனுபவமுள்ள அவருடன் பணிபுரிந்தத நான் மிகவும் பாக்கியசாலி. ‘அஃகேனம்’ என்பதில் இருக்கும் ஃ என்பதற்கு மூன்று புள்ளிகள், மூன்று கேரக்டர்கள் என்று தான் அர்த்தம். இதைத் தவிர வேறு அர்த்தம் எதுவும் இல்லை”
கீர்த்தி பாண்டியன்,
“புதிய குழுவின் உத்வேகம் எனக்கு நம்பிக்கை அளித்தது. எனது அப்பா இப்படத்திற்குள் வந்ததும் எனக்கு நம்பிக்கை இன்னும் அதிகரித்தது. இப்படத்தில் நான் நடிகையாக மட்டும் எனது பங்களிப்பைக் கொடுத்துள்ளேன். பெண்களை மையப்படுத்திய படமல்ல. சில கேரக்டர்களுக்கு சில சம்பவங்கள் நடக்கின்றன. அந்த சூழலை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைத் தான் சொல்லியுள்ளோம். எனது இந்திரா கேரக்டரும் அதில் ஒன்று. எனக்கு எப்போதுமே சூப்பர் ஹீரோ அப்பா தான்”.
தயாரிப்பாளர் அருண்பாண்டியன்,
“இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக யாரையும் நான் கூப்பிடல. ஏன்னா அவர்கள் வந்து டிரைலரைப் பார்த்துட்டு, தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படம், இதுவரை யாரும் சொல்லாத கதை அப்படி இப்படின்னு ஓவர் பில்டப் கொடுத்துப் பேசுவார்கள். அதெல்லாம் வேணாம்னு தான் நான் யாரையும் கூப்பிடல. என்னுடைய நீண்டகால நண்பர் கருணாமூர்த்தியை மட்டும் அழைத்திருந்தேன். அவரும் வந்திருக்கார். எங்களுக்குப் பிடித்த கதையை சினிமாவாக எடுத்துள்ளோம். ரசிகர்கள் கொடுக்கும் காசு வீணாகாது. ஏன்னா ஸ்கிரிப்ட் அவ்வளவு ஸ்ட்ராங்காக இருக்கு. இந்த இரண்டு ஆண்டுகளில் எனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டதைவிட, இந்த புதிய இளைஞர்கள் குழுவுடன் தான் அதிக நேரம் செலவிட்டுள்ளேன். இவர்களின் உழைப்புக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். பத்திரிகை நண்பர்கள் அனைவரும் இப்படத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்”.
— மதுரை மாறன்