மாமூல் கேட்டு மிரட்டுனா கேசு போடுங்க… அதவிட்டு இப்படி ஈவு இரக்கமில்லாம அடிக்கலாமா?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சென்னை ஓட்டேரியில் டீக்கடை ஒன்றில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த எம்.கிஷோர்குமார் என்பவரை ஓட்டேரி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியதாகவும்; தற்போது சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இரவோடு இரவாக ரிமாண்ட் செய்ய போலீசார் முயற்சிப்பதாகவும் அவரது குடும்பத்தார் போலீசுக்கு எதிராக குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக, கிஷோர்குமாரின் சகோதரர் அப்புவிடம், அங்குசம் சார்பில் பேசினோம். ”என் தம்பி கிஷோர்குமார் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்திய குடியரசு கட்சியில் மாவட்ட செயலராக இருக்கிறார். எங்க ஏரியாவில், ஓட்டேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரில் மனோஜ் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அந்தக் கடையில் எனது தம்பி கிஷோர் குமார், நேற்று (மே-21) மாலை டீ குடித்துவிட்டு கடன் சொல்லியிருக்கிறார். அப்போது அந்த டீக்கடை உரிமையாளர் மனோஜ் இல்லை. புதியதாக வேலைக்கு சேர்ந்த டீ மாஸ்டர் மட்டுமே இருந்திருக்கிறார். எனது தம்பியை பற்றிய அறிமுகம் இல்லாததால், டீக்கு காசு கேட்டிருக்கிறார். உன் ஓனர்கிட்ட சொல்லு. அக்கவுண்ட்ல வச்சிக்க சொல்லு. என்னை யாருனு தெரியலியானு கேட்டிருக்கிறார். அப்போது, என் தம்பியும் போதையில் ஏதோ பேசியிருக்கிறார்.

தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து வெளியாகும் அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...

இந்த சம்பவம் நடந்தது நேற்று (மே-21) மாலை. அது சம்பந்தமா விசாரிக்கனும்னு இன்னைக்கு (மே-22)  3.00 மணிக்கு வீட்டுக்கு வந்திருக்காங்க. வேலை முடிஞ்சி தண்ணிய போட்டு தம்பி கிஷோர்குமார் வீட்ல இருந்திருக்காரு. விசாரிக்கனும் வா-னு ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயிருக்காங்க. கொஞ்ச நேரம் கழிச்சி, ஓட்டேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு பின்னாடி இருக்கிற மாட்டு கொட்டகையில வேல செய்யிற முன்னாபாய்-னு ஒரு பையன் வந்து, கிஷோர போலீஸ் காரங்க அடிக்கிறாங்க. அவரு கத்துறாரு. வக்கீல கூட்டிட்டு போயி என்னனு பாருங்கனு சொன்னான். ஜன்னல் கம்பிய பிடிக்க வச்சி, பின்னாடி பக்கமா  நின்னு போலீஸ் காரங்க அடிக்கிறாங்கனு சொன்னான். பதறிப்போயி, நாங்க ஸ்டேஷனுக்கு குடும்பமா போயிட்டோம்.

சாயந்திரம் 4.15 மணி இருக்கும். அப்போ, என் தம்பி கிஷோர ஆட்டோவில போலீசு காரங்க ஏத்துனாங்க. அப்பவே, அவனால நடக்க முடியல. என்ன அடிச்சிட்டாங்க. என்னால நடக்க முடியலனு கதறுனான். பின்னாடியே, போனோம். ராஜீவ்காந்தி ஜி.எச்.க்கு கூட்டி போனாங்க. எங்கள ஆஸ்பத்திரி உள்ள விடல. மூக்குல இருந்தும், தொண்டைல இருந்தும் ரத்தம் வந்துச்சு. என் தம்பிய பார்க்க கூட விடல. போலீச பகைச்சிக்கிட்டு நீங்க ஒன்னும் பன்ன முடியாது. பிரச்சினை பண்ணாதீங்கனு எங்களையே மிரட்டுறாங்க. கெட்ட வார்த்தையில அசிங்கமா பேசுறாங்க. டாக்டருங்ககிட்ட பேசி, நைட்டோட நைட்டா ரிமாண்டு பண்ணிடனும்னு மெனக்கெடறாங்க. இதுக்கு எல்லாத்துக்குமே காரணம், உமாபதி, ஜோதிமணினு ரெண்டு எஸ்.ஐ.ங்கதான்.” என ஒரே தம்மில் சொல்லி முடித்தார், அப்பு.

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

ஜோதிமணி
ஜோதிமணி

கிஷோர்குமாருக்கும் நீங்கள் குற்றஞ்சுமத்தும் எஸ்.ஐ.க்கள் உமாபதி மற்றும் ஜோதிமணிக்கும் என்னதான் முன்விரோதம்? ஏன் அவர்கள் உங்கள் தம்பியை அடிக்கனும்? என்ற கேள்வியை முன்வைத்தோம்.

“அதைதானே நாங்களும் கேட்கிறோம். அதுக்கு பதில் சொல்ல மாட்றாங்களே. மாமூல் கேட்டு மிரட்டுனானு சொல்றாங்க. சரி, அவங்க சொல்ற மாதிரியே என் தம்பி மாமூல் கேட்டு மிரட்டியே இருக்கட்டும். அதுக்குனு இந்த அடி அடிப்பாங்களா? பூட்ஸ் காலால நெஞ்சில மிதிப்பாங்களா? நானும் அந்த டீக்கடை ஓனர் மனோஜ்கிட்ட கேட்டேன். டீக்கடையில பிரச்சினை நடந்ததை, வீடியோ எடுத்து உமாபதி எஸ்.ஐ., ஜோதிமணி எஸ்.ஐ.க்கு அனுப்பியிருக்காரு. சும்மா கூப்பிட்டு மிரட்டுவாங்கனுதான் அனுப்பினேன். இப்படி செய்வாங்கனு நான் எதிர்பார்க்கலைனு சொல்றாரு. போலீசில் நான் புகார் கொடுக்கலனும் சொல்றாரு. அப்போ, யாரு கொடுத்த புகாருல விசாரிச்சாங்க.

Apply for Admission

போன வாரத்துல, ரெண்டு மூனு பேருகிட்ட இதே எஸ்.ஐ. உமாபதி, ஜோதிமணி ரெண்டு பேருமே சொல்லியிருக்காங்க. கிஷோர ஒழுங்கா இருந்துக்க சொல்லு. அவன் மேல எதாவது கம்ப்ளையிண்ட் மட்டும் வந்துச்சி. கைய கால உடைச்சிடுவோம்னு சொல்லுனு சொல்லியிருக்காங்க. காயலான்கடை வச்சிருக்க சதீஷ், என் தம்பிகிட்ட இத சொல்லியிருக்காரு. என்கிட்டயும் இப்படி சொன்னான். என்ன பிரச்சினைனு தெரியலையேனு யோசிச்சிட்டிருந்தோம். இப்போ, இப்படி செஞ்சிட்டாங்க.

என் தம்பி அமைதியானவன்ங்க. யாருகிட்டயும் வம்புக்கு எல்லாம் போக மாட்டான். இந்திய குடியரசு கட்சியில இருக்கிறதால, எங்க ஏரியா பசங்கள போலீசு புடுச்சா அவங்களுக்காக பேசுவான். அதுவும், காலேஜ் பசங்கள ஹெல்மெட் போடல, லைசன்ஸ் இல்லை, இன்சூரன்ஸ் இல்லைனு புடுக்கிறப்போ பேசுவான். மத்தபடி, யாரையும் மிரட்டி காசு கேட்கனும்லா இல்லை. அவனே, டெய்லி ரெண்டாயிரம் மூவாயிரம் சம்பாதிப்பான். அவன் எதுக்கு மாமூல் கேட்கனும்? டீக்கடையில அக்கவுண்ட் வக்கிறதுலாம் சகஜம். டீக்கடை மாஸ்டர் புதுசு. யாருனு தெரியாம காசு கேட்டுட்டான். இவனும் போதையில, என்ன யாருனு தெரியாம காசு கேட்பியானு கொஞ்சம் பேசிட்டான். இதுதான் சந்தர்ப்பம்னு போலீசும் இந்த மாதிரி செஞ்சிட்டாங்க.

இவ்வளவுக்கு அப்புறமும், எங்களையே மிரட்டுறாங்க. தேவையில்லாம போலீச பகைச்சிக்காத. போலீச பகைச்சிக்கிட்டு ஏரியாவுல இருக்க முடியாது. வேற மாதிரி ஆயிடும். ஒழுங்கா பிரச்சினை பன்னாம, அமைதியா இருந்துக்கோங்கனு மிரட்டுறாங்க.

என் தம்பிகிட்டயும், இப்ப என்னடா பன்னிட்டோம். ஓவரா பன்னிட்டு இருக்க. ஒரு மூனு நாளுதாண்டா. ஜெயிலுக்கு போயிட்டு வந்துரு. நாங்க பார்த்துக்கிறோம். பிரச்சினை பண்ணாதனு பேசுறாங்க. டாக்டருங்ககிட்ட, இவனுக்கு ஒன்னும் இல்லைனு சொல்லி இப்பவே அனுப்பி விடுங்க. இன்னைக்கு நைட் ஜெயிலுக்கு கொண்டு போயிடுறோம். நாளைக்கு காலையில ட்ரீட்மெண்ட்டுக்கு கூட்டிட்டு வர்றோம்னு பேசியிருக்காங்க. டாக்டருங்க அதுக்கு சம்மதிக்கல போல. நாங்களும் கூட்டிட்டு போக விடமாட்டோம்.” என்கிறார், அப்பு.

இந்த விவகாரம் தொடர்பாக, ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷை தொடர்புகொண்டோம். நமது அழைப்பை ஏற்கவில்லை. புளியந்தோப்பு உதவி ஆணையர் பி.ராஜாவிடம் பேசினோம். “அவரு தண்ணிய போட்டுட்டு ஒரு கடையில கலாட்டா பண்ணி, வெட்டிடுவேன் குத்திடுவேனு சொல்லி கத்திய வச்சி மிரட்டியிருக்காரு. நான் யாரு தெரியுமா? மாவட்ட செயலாளர்னு கடையில போயி அவரு கலாட்டா பன்னதெல்லாம் வீடியோலாம் இருக்கு. அத விசாரிச்சு கூட்டி வந்து ரிமாண்ட் பன்றாங்க. கேஸ் போட்டாலே, நம்மள குற்றம் சொல்றாங்க. கேட்டும் விடலை. அரெஸ்ட் பண்ணி ரிமாண்ட் பன்றோம். அதனால, இதுமாதிரி குற்றச்சாட்டு சொல்றாங்க. அவரது உடல்நிலை நலமாகத்தான் இருக்கிறது. ஆஸ்பத்திரிக்குள்ள நுழையும்போது, நெஞ்சு படபடக்குது. இங்க வலிக்குது. அங்க வலிக்குதுனு சொல்றாரு. ஆறுமணிக்கு மேல, சிறைக்கு கொண்டு செல்ல முடியாது என்பதால், இரவு இங்கேயே வைத்திருந்து காலை கொண்டு செல்கிறோம். ” என்கிறார்.

கடந்த 2020 இல், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீசு சித்திரவதையால் கொல்லப்பட்ட விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் இந்த தருணத்தில், இப்படியொரு விவகாரம் முன்னிலைக்கு வந்திருக்கிறது.

இந்திய குடியரசு கட்சியில் இருக்கிறேன் என்று ஏரியாவில் நான் யாரு தெரியுமானு எல்லோரிடமும் வம்புக்கு போவது நியாயமா? போலீசு தட்டிக் கேட்டால், போலீசுக்கு எதிராக குற்றஞ்சுமத்துவதா? என்று போலீசார் தரப்பிலும், “அவன் மாமூலே கேட்டு மிரட்டியிருந்தாலும் அதுக்குனு மனிதாபிமானம் இல்லாமல் இப்படியா சித்திரவதை செய்வார்கள்? அதிகாரம் இருக்கிறதென்று, போலீசார் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?” என்பதாக, பாதிக்கப்பட்ட கிஷோர்குமார் தரப்பிலும் கேள்விகளை எழுப்புகிறார்கள். இந்த விவகாரம் தமிழகத்தில் போலீசு இராஜ்யம் குறித்த விவாதத்தை கிளப்பியிருப்பதோடு, அரசுக்கு எதிரான அதிருப்தியாகவும் வெளிப்பட்டிருக்கிறது.

 

—              ஆதிரன்.

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.