விஸ்வரூபம் எடுக்கும் நியோமேக்ஸ் நிதிநிறுவன மீதான புகார் ! ஆப்பிள் மில்லட் வீரசக்தி அலுவலகங்களில் சோதனை !
சாதரணமாக மெடிக்கல் ரெப்பாக தன்னுடைய வாழ்க்கையை துவங்கிய இவர் பெரும்பணக்காரர்கள் குடியிருக்கும் மொராய்ஸ் சிட்டியில் பெரிய பள்ளியின்
விஸ்வரூபம் எடுக்கும் நியோமேக்ஸ் நிதிநிறுவன மீதான புகார் ! ஆப்பிள் மில்லட் வீரசக்தி அலுவலகங்களில் சோதனை !
”திருச்சியில் ஆப்பிள் மில்லட் வீரசக்தி அலுவலகத்தில் பொருளாதார குற்றபிரிவு போலிசார் !” – என இரண்டு நாட்களாக ”புலி வருது” கதையாக செய்தி ஒன்று உலவி வருகிறது. உண்மையிலேயே, புலி வந்ததா, இல்லையா என்பதும், எப்போது புலி வரும் கடைசியில் இன்று சோதனை நடந்து உள்ளது.
யார் இந்த ஆப்பிள் மில்லட் வீரசக்தி ?

திருச்சியில் மிக சாதரணமாக மெடிக்கல் ரெப்பாக தன்னுடைய வாழ்க்கையை துவங்கிய வீரசக்தி, தில்லைநகரில் ஆப்பிள் மில்லட் என்ற சிறுதானிய உணவகம் ஒன்றை கடந்த பத்தாண்டுகளாக நடத்தி வருகிறார். அதிலிருந்து ஆப்பிள் மில்லட் வீரசக்தி ஆனார்.
பெரும்பணக்காரர்கள் குடியிருக்கும் மொராய்ஸ் சிட்டியில் பெரிய பள்ளியின் பொறுப்பாளர்; VAU மீடியா என்டர்டெயின்மென்ட் சார்பில் சினிமா படங்களையும் எடுக்கும் படத்தயாரிப்பாளர் என பல்துறை தொழிலதிபர் வீரசக்தி. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதிமையத்தின் வேட்பாளராக களமிறங்கியவர் இந்த ஆப்பிள் மில்லட் வீரசக்தி.
இந்த அடையாளங்களையெல்லாம் தாண்டி, அவருக்கென்றே தனிச்சிறப்பான அடையாளம் ஒன்று இருக்கிறது. அதுதான் நியோமேக்ஸ் நிதிநிறுவனத்தின் பங்குதாரர்களுள் இவர் ஒருவர் . நியோமேக்ஸ் நிதிநிறுவனம் மீது புகார் என்பது, அது ஆரம்பித்த காலந்தொட்டே பஞ்சாயத்து ஓடிக்கொண்டுதானிருக்கிறது.
நியோமேக்ஸ் நிதிநிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால், முதலீடு செய்த பணத்தின் மதிப்புக்கு நிகராக வீட்டு மனையும் வழங்குகிறோம் மாதந்தோறும் வட்டிப்பணத்தையும் வழங்குகிறோம், மூன்றே ஆண்டுகளில் போட்ட பணம் கிடைக்கும் என்றெல்லாம் மூளைச் சலைவை செய்து பலரை வளைத்துப் போட்ட ஒரு மெகா நிறுவனம் தான் நியோமேக்ஸ்.

சதுரங்க வேட்டை பாணியில், மொராய் சிட்டியில் இவர்கள் நடத்திய கூட்டங்களில் பங்கேற்று ‘சபலத்தில்’ பல இலட்சங்களை முதலீடும் செய்து, இப்போது ”வட்டியும் வேணாம், மண்ணும் வேணாம் போட்ட காச கொடுடா சாமி”னு, போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துவிட்டு நாயலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறார்கள் முதலீட்டாளர்கள்.
கடந்த மூன்றாண்டுகளில் மட்டும், இந்த மோசடி நிறுவனத்தின் மீது பல்வேறு புகார்களும், மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் அடுத்தடுத்து வழக்குகளும் பதியப்பட்டிருக்கின்றன. நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு எதிரான புகார்கள் அனைத்தும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு வருகிறது. அவர்களும் தொடர்ச்சியாக விசாரணை, செட்டில்மென்ட், பஞ்சாயத்து என முடிந்தவரை சமாளித்து வருகிறார்கள் என்கிறார்கள்.
குறிப்பாக, நியோமேக்ஸ் தரப்பில், தமது நிறுவனத்திற்கு எதிராக பத்திரிக்கைகளில் செய்தி வெளியானால், ஒட்டுமொத்த முதலீட்டாளர்களும் ஒன்று சேர்ந்து கும்மிவிடுவார்களோ என்ற அச்சத்தில் முடிந்தவரை போலீசுக்கு புகார் போனால் அவர்களை மட்டும் செட்டில்மென்ட் பேசி கமுக்கமாக முடித்து வைக்கவே முயற்சிப்பதாக தெரிகிறது..
அதுபோலத்தான் தூத்துக்குடி கோயில்பட்டியை சேர்ந்தவர் சென்னையில் பள்ளியின் நிர்வாகி ஒருவர் 73.50 இலட்சம் பணம் திரும்ப கேட்டு கொடுத்த புகாரில், “இது என்னடா வம்பா போச்சு… கிளப்புடா வண்டிய… நடத்துடா ரெய்ட” னு மதுரை போலீசார் ரெய்டுக்கு ஆயத்தமான நிலையில், பெட்டியோட சென்று புகார் கொடுத்த பார்ட்டிக்கு செட்டில்மென்ட் செய்து போலீசின் ரெய்டு நடவடிக்கையை தவிர்த்து விட்டது, நியோமேக்ஸ் தரப்பு கிளப்பிட்டுருக்கிறார்கள்.
ஆனால் மதுரை பொருளாதர குற்றப்பிரிவு போலிசில் இது பற்றி விசாரிக்கையில் அப்படி எல்லாம் எதுவும் செட்டில்மெண்ட் ஆகவில்லை, தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது. அந்த அந்த மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் இதுகுறித்து விசாரித்தும் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனையும் நடத்தி வருகிறார்கள் என்றார்.
வீடியோ :
எது எப்படியோ? திக்கு தெரியாத காட்டில் சிக்கிய கதையாக முதலீட்டாளர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் சிக்கித் தவிக்கிறது, நியோமேக்ஸ்நிறுவனத்தின் இயக்குநர் கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், வீரசக்தி, முகவர்கள் நாராயணசாமி, மணிவண்ணன், மற்றும் நியோ மேக்ஸின், துணைநிறுவனங்களுக்கு எதிராகவும் புகார் தொடர்ச்சியா வர ஆரம்பித்துள்ளது.
”எனக்கு பிரச்சினை என்று ஒரு போதும் சொல்லாதீர்கள். பிரச்சினை என்றால் பயமும் கவலையும் வந்துவிடும். எனக்கு ஒரு சவால் என்று சொல்லிப் பாருங்கள். தைரியமும் தன்னம்பிக்கையும் தானாக வந்துவிடும்.” என்று தனது முகநூல் பக்கத்தில் தன்னம்பிக்கை வரிகளை கருத்தாக வடித்திருக்கிறார், ஆப்பிள் மில்லட் வீரசக்தி. பொறுத்திருந்துதான் பார்ப்போமே, சோதனைகளை அவர் எப்படி எதிர்கொள்கிறாரென்று?
-மித்ரன்